வியாழன், 1 செப்டம்பர், 2011

தேவை அமைதிப் பிள்ளையார்..! அரசியல் பிள்ளையார் வேண்டாம்..!

             சமீப காலமாக தமிழ்நாட்டில் தான்  விநாயகர் சதுர்த்தி என்றால்  அது ஒரு பதற்றமான விழாவாக நடத்துவது வழக்கமாகி வருகிறது.  மாநிலம் முழுதும் விதவிதமான தோற்றங்களில் ஆயிரக்கணக்கான பிள்ளையார் சிலைகள்   பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்கிற வேதிப்பொருள்களை பயன்படுத்தி உருவகப்படுத்தி ,  பெயிண்ட்களில்   வண்ணங்களை குழைத்துப் பூசி மக்கள் கூடும் தெருக்களிலெல்லாம் வழியை அடைத்து வைத்துவிடுகிறாகள். சாலைகளில் இடையூறாக இருக்கலாம்.... அனால் மதஉணர்வுகளுக்கு  இடையூறாக இருக்கக்கூடாது என்று சமாதானப் படுத்திவிடுகிறார்கள்.
      இப்படிப்பட்ட வேலைகள் ஏதோ விநாயகர் வழிபாடு.. மதம் சம்பந்தப்பட்டது... என்று கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட முடியாது. 
            இது போன்ற விநாயகர் வழிபாடு எங்கு தோன்றியது..? எப்போது தோன்றியது..? என்று கேட்டால்... இந்த விநாயகர் வழிபாடு என்பது  மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்திலேயே நடத்தப் பட்டிருக்கிறது. அது அந்த நாட்டின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பின்னர் பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் இந்த விநாயகர் வழிபாடு என்பது தொடர்ந்து நடந்திருக்கிறது. பிறகு அது மகாராஷ்டிரா மாநில மக்களின் குடும்ப விழாவாக மாறிவிட்டது. மக்கள் தங்கள் வீடுகளிலும் பிள்ளையாரை வைத்து வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் பிறகு சுதந்திர போராட்டக் காலத்தில் தான், இந்துமதத்தின் பால் ஈர்ப்புக்கொண்ட அன்றைக்கு இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இதை ஆண்டாண்டு பொதுமக்கள் இணைந்து நடத்தும் திருவிழாவாக மாற்றினார். அதன் பிறகு தான் மகாராஷ்டிரா மாநிலத்தில்  விநாயகர் சதுர்த்தியன்று,  வசதிபடைத்தவர்கள் எல்லாம்   தங்கள் வசதிக்கேற்ப உயரமான விநாயகர் சிலைகளை செய்து, தங்கள் பகுதி மக்கள் சேர்ந்து கொண்டாடும் விழாவாக நடத்தினர்.ஏழை மக்களுக்கு சில்லறை காசுகளையும் ரூபாய் நோட்டுகளையும் இரைத்து தங்கள் பணக்கார கொழுப்பை வெளிப்படுத்தினர்.
                        ஆனால் தமிழகத்தில் சில ஆண்டுகள் வரையில், சிறுசிறு களிமண் பிள்ளையார் பொம்மைகளாக வாங்கி வீட்டிலேயே கொண்டாடப்பட்ட பிளையார் சதுர்த்தி என்பது சமீப காலமாக தெருவை அடைத்துக் கொண்டாடபடுகிறது. வீட்டில் கொண்டாடும்  போது  அமைதியாக நடந்த பிள்ளையார் சதுர்த்தி வீதிக்கு வந்த பின் மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் உண்டுபண்ணும் விழாவாக மாறிவிட்டது என்பது தான் உண்மை. போது மக்களிடையே மதவுணர்வுகளை தூண்டிவிட்டு அதை தங்களுக்கு சாதகமான ஓட்டுகளாக மாற்றுவதற்கு இன்றைக்கு   பல்வேறு இந்து மதவாத  அமைப்புகள் பிள்ளையாரையும், பிள்ளையார்  சதுர்த்தியையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதும் உண்மையிலும் உண்மை  ஆகும்.              அதிலும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்ற பெயரில் மாற்று மதத்தினர் வசிக்கும் தெருக்கள் வழியாக - குறிப்பாக மசூதி இருக்கும் வீதி வழியாகவும், இஸ்லாமிய மக்கள் வசிக்கும் வீதி   வழியாக சென்று அச்சத்தையும் பதற்றத்தையும் உண்டுபண்ணும் வேலைகளை தான் இந்த  அமைப்பினர் செய்கிறார்கள்.தமிழ்நாட்டில் கோவை, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, சென்னை போன்ற மாவட்டங்களில்  திட்டமிட்டே இந்த  வேலைகளை செய்து
வருபவர்களை மக்கள் அனுமதிக்கக் கூடாது.
                  நமக்கு வேண்டியது அமைதிப் பிள்ளையார்.. அரசியல் பிள்ளையார் அல்ல.. ஆர்ப்பாட்டப் பிள்ளையார்  அல்ல... நல்லிணக்கப் பிள்ளையாரே வேண்டும்.

1 கருத்து:

T.K.Theeransamy,Kongutamilarkatchi சொன்னது…

ஆயுத எழுத்து அவசியமான கருத்து!இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-