ஞாயிறு, 19 ஜூன், 2011

தமிழகத்தில் சிக்கித்தவிக்கும் கல்வி....

  தனியார் பள்ளிகளில்  தடையற்ற கட்டணக்கொள்ளை : 
            தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள சூழலில், தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக்கட்டணம் பெற்றோர்களை மிகப்பெரும் அளவிற்கு பாதித்துள்ளது. இதனால் மாநிலத்தில் ஆங்காங்கே கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணங்களை முறைப்படுத்திட, நீதிபதி கோவிந்தராஜன் குழு அமைக்கப்பட்டு, கட்டண விகிதம் தீர்மானிக்கப்பட்டது. அதுவே அதிகமாக  இருந்ததாக பெற்றோர்கள் கஷ்டப்பட்டனர். மறுப்பக்கம், இக்கட்டணம் தங்களுக்கு போதாது என 6400 பள்ளி நிர்வாகங்கள் முறையீடு செய்தனர். அதனால் அன்றைய  திமுக அரசு கட்டணத்தை மறுபரிசீலனை செய்திட நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவை புதிதாக நியமித்தது.

       இந்தக்குழு ஆறுமாத கால அவகாசத்தை எடுத்துக்கொண்டும் கூட, இந்தாண்டு பள்ளிகள் திறக்கும் வரையிலும் கட்டண விபரங்களை அறிவிக்கவில்லை. இதற்கிடையில் அக்குழுவின் தலைவராக இருந்த  நீதிபதி  ரவிராஜபாண்டியன் ராஜினாமா செய்துவிட்டார். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதியக் கல்விக் கட்டணமோ  முந்தைய கட்டணத்தை விட மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை எஸ்பிஓஏ மெட்ரிக் பள்ளியின் 11வது வகுப்பிற்கான கட்டணம் ரூ.11 ஆயிரம் என்பதை ரூ.25 ஆயிரம் என உயர்த்தி அறிவித்துள்ளது. கட்டண உயர்வைக் கண்டித்து பெற்றோர்கள் போராடினால், தனியார்ப் பள்ளி கட்டண வசூலில் அரசு தலையிடாது என்று பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. வி. சண்முகம் பொறுப்பில்லாமல் சொல்கிறார்.

         புதிய கட்டணம் குறித்த விபரங்களை பொதுமக்கள் அறியும் வகையில்  அரசு வெளியிடாததால், பெற்றோர்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள்.  பள்ளி நிர்வாகங்களோ புதிய கட்டண விபரங்களை  ரகசியமாக வைத்துக் கொண்டு தங்கள் விருப்பத்திற்கேற்ப  கட்டணத்தை வசூலித்து வருகின்றன. இதற்கும் மேலாக சீருடைகள், நோட்டுப்புத்தகங்கள் கட்டணத்தை சம்பந்தப்பட்ட       பள்ளிகளே தீர்மானித்துக்கொள்ளலாம் என்று தடையற்ற கொள்ளைக்கும் இந்தக் குழு  வாய்ப்பளித்துள்ளது. மக்களை மிக மோசமாக பாதிக்கும் நீதிபதி ரவிராஜபாண்டியன் குழுவின் கல்விக் கட்டண அறிவிப்பில் அரசு தலையிடுவதில் சட்டக்குறுக்கீடுகள் இருக்குமானால், அவசரச் சட்டத்தின் மூலம் திருத்தம் கொண்டு வந்து, அரசு தலையிட்டு திரும்பப் பெற வேண் டும். கடந்த ஆண்டின் கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டும் அமல்படுத்திட வேண்டும். வங்கிக் காசோலைகள், வரைவோலைகள் மூலம் மட்டுமே கட்டணம் பெறுவதை கட்டாயப்படுத்த வேண்டும் என்பதே கல்வியின் மீது அக்கறை உள்ளவர்களின் எதிர்பார்ப்பாகும். 

 காற்றில்  பறக்கும் கல்வி உரிமைச்சட்டம் : 

          அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2010 - ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.       இச்சட்டம் ஏழைகளுக்கு கல்வி    தருவதற்கு   சில   திட்டங்களை                          உருவாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, அனைத்து மட்ட தனியார் கல்வி நிறுவனங்களிலும் 25 சதவிகித இடங்களை இலவச கல்விக்கு ஒதுக்கிட வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட அதற்கான விதிகள் தமிழகத்தில் இதுகாறும் உருவாக்கப்படவில்லை. காலதாமதமின்றி விதிகளை உருவாக்கி, இச்சட்டப் பயன்கள் தமிழகக் குழந்தைகளுக்கு  கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 கேள்விக்குறியாகும் சமச்சீர்க் கல்வி : 

          சமச்சீர் கல்வி திட்டத்தில் பொதுப் பாடத்திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தி வைப்பது என்ற அதிமுக அரசின் முடிவு பொருத்தமானது அல்ல என்று ஆரம்பம் முதலே பல கல்விச் சிந்தனையாளர்களும்,  பல கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகிறார்கள். இப்பிரச்சனை நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு ஏற்கனவே உள்ள பொதுப் பாடத்திட்டத்தை அமலாக்க வேண்டும் என்றும்,  10 வரையிலான இதர வகுப்புகளுக்கு நிபுணர் குழு அமைக்கப்பட்டு, குழு அளிக்கும் பரிந்துரைகளைப் பெற்று மூன்று வாரங்களுக்குள் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளது. அதன் படி   தமிழக அரசு நிபுணர் குழுவை நியமித்தது.  அந்தக் குழுவில் கல்வியாளர்கள் என்றப் பெயரில்  இரண்டு தனியார் பள்ளி உரிமையாளர்களை அறிவித்துள்ளது என்பது  ஏற்கக்கூடியதல்ல. சமூக அக்கறையுள்ள பொருத்தமான கல்வியாளர்கள் தான்  இக்குழுவில் இணைக்கப்பட  வேண்டும்.  கடந்த திமுக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தில் பல்வேறு  அம்சங்களை அமலாக்காத சூழ்நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளோடு அனைவரது ஆதரவோடு அமைந்த  புதிய அதிமுக அரசு   . ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொதுப்பாடத்திட்டம் என்ற முதல் படியை இந்தாண்டு அமுலாக்கிக் கொண்டே, அதிலுள்ள குறைகளை நீக்கி சமச்சீர் கல்வியை  அமலாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்பது தான் தமிழக மக்களின் - பெற்றோர்களின் - மாணவ-மாணவியரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் ஆகும்.

கருத்துகள் இல்லை: