திங்கள், 7 நவம்பர், 2011

எழுச்சிகொள் இந்தியா...எழுச்சிகொள்...! புரட்சி தானாய் எழும்...!

மாற்றத்திற்கான 
போராட்டம் தான் புரட்சி...!    

மூடிய சன்னலும்
நம்மிரு கண்களும்
திறந்திருந்தால் தான்
நம் அறிவுக்கு
வெளிச்சம் கிடைக்கும்...
எனவே
சன்னலையும்
கண்களையும்
திறந்து வை...
வெளியே நடப்பதைப்
பார்... உனக்கு 
தானாக கோபம் வரும்...      

                 இன்று காலை தான் தோழர். அ. குமரேசன் அவர்களின் கவிதையைப் பார்த்ததும் என் மனதில் உதித்தது இந்த  புதுக்கவிதை.
             அதுவும் இன்று நவம்பர் ஏழு - புரட்சி தினம்.. இந்த நாள் மனிதகுல விடுதலைக்காகவும்,  உரிமைகளுக்காகவும் போராடுபவர்கள் நினைத்துப் பார்க்கும் நாள்.  அவர்கள் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்தின் - முதலாளித்துவத்தின் சுரண்டலினால் பாதித்த -  பலியான உலக மக்கள் அனைவரும் நினைத்துப் பார்க்க வேண்டிய நாள். வழக்கம் போல் இன்று இந்த நாளை பார்க்கமுடியாது. இன்று இந்த நவம்பர் ஏழு எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது.
              ஆறு மாதங்களுக்கு  முன்பு தான்  எகிப்து மற்றும்  லிபியா போன்ற நாடுகளில் அந்த நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் பொங்கி எழுந்தார்கள்... ஏன் அந்த கோபம்...?
          இதோ கடந்த ஒரு மாத காலமாகவே  அமெரிக்கா நாடு  முழுவதும், ஆஸ்திரேலியா மற்றும்  பல ஐரோப்பிய நாடுகளிலும் இன்று வரை  மக்களின்  எழுச்சி ஆங்காங்கே உயர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறதே... ஏன் இந்த கோபம்..?
             இந்தியாவைப் போலவே அங்கேயும்... அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு,  கடுமையான வேலையில்லா திண்டாட்டம்,   பெருகி வரும் வேலையிழப்பு, பெரிய நிறுவனங்களும், பெருமுதலாளிகளும் மக்களை ஏமாற்றிச் செய்யும் சுரண்டல்கள், எப்போதும் உயராமல் நிற்கும் சம்பளம், குறைந்து வரும் வாங்கும்  சக்தி.... இப்படி எல்லாவற்றாலும் பாதிக்கப்பட்ட - பலியான அந்த மக்கள் தான் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் கொதித்து எழுந்து வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.             
             இது போன்ற சுரண்டல்களுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக 1917 - ஆம் ஆண்டே எழுந்த உரிமைக்கான எழுச்சிப் போராட்டம் தான் இந்த ''நவம்பர் - ஏழு''.  
                  உலகமெங்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் தான், இந்தியாவிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தான்தோன்றித்தனமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், பெருமுதலாளிகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் காட்டுகிற சலுகைகளும்,  மக்களுக்கு எதிராக செய்கிற தாக்குதல்களும் இந்திய மக்களை பெரிதும் வதைக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து தான் இருக்கிறார்கள்.
                இங்கேயும் இன்று ஆட்சியாளர்கள் பல்வேறு கோணங்களில் மக்களை வதைக்கிறார்கள்..
                # தறிகெட்டு உயர்ந்துகொண்டே போகும் விலைவாசி.. நாம் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை சாமான்கள், அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிவகைகள் - இவைகளின் விலைகளை கேட்டாலே மயக்கம் வரும்.. மாமிசங்களை வாங்க முடியாத ஏழை - எளிய மக்கள் வாங்கி சாப்பிடும் முட்டையின் விலைக் கூட அவர்களுக்கு எட்டாத தூரத்தில் உயர்ந்துகொண்டே போகிறது.
                 # உழைப்பாளி மக்களின் - ஊழியர்களின் ஊதியம் உயராமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.  
                   #  பி. எப். போன்ற  மக்களின் சேமிப்பிற்கு வரி குறைக்கப்படுகிறது. அதே சமயத்தில் மக்கள் வாங்கும் வீட்டுக் கடன்களுக்கு வரி உயர்த்தப்படுகிறது.            
              # உயராத ஊதியம் - உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி அதனால் குறைந்துகொண்டே போகும் மக்களின் ''வாங்கும் சக்தி''.
               # அதனால் பெரும்பாலோர் வீடுகளில் ஏற்படும் உணவு பற்றாக்குறை. குழந்தைகளுக்கு பெண்களுக்கு சத்தான உணவு குறைவு.  நோய்கள் அதிகரிப்பு.                இவைகளெல்லாம்  அன்றாடம் நம் வீடுகளில் சாதாரணமாக நாம் பார்க்கும் விஷயங்களாகும்.
               #  நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்கள் பதினைந்து கோடி பேர். அதேபோல்  வேலையிழக்கும் இளைஞர்கள்  இன்னொரு பக்கம்.
                #  இது மட்டுமா... அரசே தான்தோன்றித்தனமாக செய்யும் பெட்ரோல் - டீசல் - சமையல் கேஸ் விலை உயர்வு.
               ஓ.. இந்தியனே...!  இவைகளெல்லாம் நீ அன்றாடம் சந்திக்கும்  - தீர்க்கப்படாமல் உயர்ந்துகொண்டே போகும் பிரச்சனைகள் என்பதை நீ உணர்கிறாயா..? இதைப் பார்த்து உனக்கு கோபம் வராதா..? 
                  நாம் அடிமைகளாய் இருந்த காலத்திலேயே  நம் முன்னோர்களுக்கே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் மீது கோபம் வந்ததில்லை. முப்பது கோடி ஜெனங்கள் வாழ்ந்த இந்த நாட்டில் வெறும் இரண்டு லட்சம் பேர் தானே  இந்த தேசத்தின் விடுதலைக்காக போராடியவர்கள். மற்றவர்களெல்லாம் விடுதலைப் போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சொகுசாய் வாழ்ந்தவர்கள் தானே. அவர்கள் வாரிசுகள் தானே நாம். நாம் மட்டும் எப்படி இருப்போம். எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் அப்படி தானே இருப்போம்.
               நமக்கு கோபம் என்பதே வராது. 
              தெருவில் போகும் நாயை கல்லால் அடித்தால் கூட அது திரும்பி குறைக்கும்... தன்னை அடித்தால் நாய்க்குக் கூட கோபம் வரும்.
                  பாதையில் ஓரமாய் சென்றுக்கொண்டிருக்கும் பாம்பை கம்பால் தட்டினால் அது திரும்ப சீரும்... பாம்புக்கும் கோபம் வரும்...
                  ஒரு கோலி சோடாவை எடுத்து அதன் தலையில் கட்டைவிரலை வைத்து தட்டிப் பாருங்கள். புஸ்ஸ் -ன்னு சத்தம் வரும். கோலி சோடாவுக்கு கூட தலையில் தட்டினால் கோபம் வரும்.
                  ஆனால் என்ன தட்டினாலும் கோபம் வராத ஒரே ஜென்மம் நாம்ப தான். என்ன தட்டினாலும் கோபமே வராது.
                 முன்பு... ஆட்சியாளர்களும் முதலாளிகளும் தலையில் அடித்தார்கள்... முதுகில் அடித்தார்கள்... இப்போதோ வயிற்றில் அடிக்கிறார்கள்...
              அப்போதும் நமக்கு கோபம் வரவில்லை என்பது தான் இந்த நாட்டின் வேதனையான விஷயமாகும்.
                எப்போது கோபம் வரும்.. மீண்டும் மேலே உள்ள அந்தக் கவிதையை படியுங்கள்... ரௌத்திரம் பழகுங்கள்.. இங்கேயும் எரிமலைகள் இருக்கத்தான் செய்கின்றன.. அவைகளை விழித்தெழச் செய்யுங்கள்... எழுச்சியுறச் செய்யுங்கள்... மாற்றத்திற்கான போராட்டம் தான் புரட்சி...
              விழித்தெழு... இந்தியா... விழித்தெழு..!!!.
                            எழுச்சிகொள்... இந்தியா...எழுச்சிகொள்...!!!
                                           புரட்சி செய்... இந்தியா... புரட்சி செய்....

கருத்துகள் இல்லை: