சனி, 12 நவம்பர், 2011

ரஷ்யாவில் எழுச்சிமிக்க புரட்சிதினம்....!

              சோவியத் யூனியன் சிதறுண்டு போன பிறகு  உலகின் முதல் புரட்சி நடைபெற்று 94 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ரஷ்யக் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்களும், பொதுமக்களும்  கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். கடந்த  2010 - ஆம் ஆண்டு மேதினத்தன்று மீண்டும் நிறுவப்பட்ட ஸ்டாலின் நினைவிடத்தில் பொதுமக்கள் கூடி மலரஞ்சலி செய்தனர். 











                தலைநகர் மாஸ்கோவில் உள்ள வெர்ஸ்க்யா சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். பெரும்பாலானவர்கள் கைகளில் செங்கொடிகளை ஏந்தியிருந்ததால் சாலை முழுவதும் செம்மயமாகக் காட்சியளித்தது. இந்த ஊர்வலத்திற்கு ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் தலைமை வகித்தார். நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெற்றி கிடைக்கும் என்றும், ஒவ்வொரு ரஷ்யருக்கும் அந்த வெற்றியால் பலன் கிடைக்கும் என்றும் அவர் ஊர்வலத்தில் பேசும்போது குறிப்பிட்டார். சிவப்பு அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் பெயர்களையும் அவர் பட்டியலிட்டார்.
                  புரட்சியைக் கொண்டாடும் வகையில் வெர்ஸ்க்யா சாலையில் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமாக ஊர்வலம் நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 ஆயிரம் பேர் வரை இந்த ஊர்வலத்தில் பங்கேற்பது வழக்கம். ஆனால் இம்முறை ஊர்வலத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தையும் தாண்டிச் சென்றுவிட்டது. பொதுவாக, இந்த ஊர்வலத்தில் வயதானவர்களே கடந்த ஆண்டுகளில் பங்கேற்று வந்தனர். ஆனால் தற்போது நடந்த ஊர்வலத்தில் கம்யூனிஸ்டு இளைஞர் யூனியனில் உறுப்பினர்களாக உள்ள இளைஞர்கள் ஏராளமான அளவில் திரண்டிருந்தார்கள்.  

கருத்துகள் இல்லை: