திங்கள், 17 மார்ச், 2014

இந்தியாவில் மாற்று அரசை அமைப்பதே நம்முன் உள்ள தலையாய கடமை...!

             
           ஆர்எஸ்எஸ்/பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்குத் தாங்களாகவே முன்வந்து தம்பட்டம் அடிக்கும் இந்திய கார்ப்பரேட்டுகளில் ஒரு பிரிவினர் அவரைத் துதிபாடுவதில் புதியதொரு உச்சிக்கே சென்றுள்ளனர். 1930-களில் ஜெர்மனியில் பாசிசமும் ஹிட்லரும் தலைதூக்குவதற்கு உலகளவில் முதலாளிகள் எப்படியெல்லாம் வெளிப்படையாகவே உதவினார்கள் என்பது தெரியும். உண்மையில் பாசிசம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள உலக முதலாளித்துவத்தின் பெரும்பகுதி (முதலாளிகளுடன் அரசின் ஒற்றுமை குறித்துப் பேசிய முசோலினியைப் போன்றே) ஹிட்லரின் தலைமையிலான பாசிசம் தங்களைக் காத்திடும் என்று கருதி அதனை வரவேற்றார்கள். 1939 மாபெரும் பொருளாதார மந்தம் காரணமாக சின்னாபின்னமாகிப் போயுள்ள உலகில் மீண்டும் தங்கள் கொள்ளை லாப வேட்டை தொடரஅவர் வழிவகுத்துக் கொடுப்பார் என்றுகருதினார்கள்.
          ஜெர்மன் யுத்த எந்திரத்தைக் கட்டி உருவாக்கியமை, அதனைத் தொடர்ந்து ராணுவத்தை இயக்குவதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகளின் தேவை, ராணுவ ரீதியிலான தொழில் வளாகம் மற்றும் அதனைத் தொடர்ந்து இரண்டாம் உலகப் போர் ஆகியவை உலக முதலாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்தன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உலகின் செல்வ வளம் மிக மோசமான முறையில் அழிக்கப்பட்டது குறித்தோ, பல லட்சக்கணக்கான மனித உயிர்கள் பலியானது குறித்தோ அது சிறிதும் கவலைப்படவில்லை. கூடுதலாக, பாசிஸ்ட் அரசு மக்கள் மீது மிகவும் பயங்கரமான முறையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை வரலாற்றில் மிகவும் வேதனையுடன் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஜனநாயக உரிமைகள் மற்றும் பிரஜா உரிமைகளை ரத்து செய்தல், குறிப்பாக ஸ்தாபன ரீதியாகச் செயல்படும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை ரத்து செய்தல் ஆகியவை இத்தகைய அடக்குமுறைகளில் அடங்கும். இவ்வாறு தொழிலாளர் உரிமைகள் நசுக்கப்பட்டதன் காரணமாக முதலாளிகளின் லாபம் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்திற்குச் சென்றது.
          அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற பெரிய முதலாளித்துவ நாடுகள், தங்கள் நாடுகளின் சொந்த முதலாளித்துவ வர்க்க நலன்களைப் பாதுகாப்பதற்காக, பாசிஸ்ட் ஜெர்மனியின் உலக ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக உருவான பாசிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியில் இணைந்தன.
               குறிப்பாக சோவியத் செஞ்சேனை ஸ்டாலின்கிராடில் நடைபெற்ற முதல் தீர்மானகரமான வெற்றியின்போது தனியாகவே பாசிஸ்ட்டுகளின் வெறியாட்டத்தை வீரத்துடன் எதிர்த்து முறியடித்த போது, அதனுடன் இணைந்து கொண்டன. பாசிசத்தை முறியடித்ததில் சோவியத் யூனியன் தீர்மானகரமான முறையில் ஆற்றிய பங்களிப்பு உலக வரலாற்றின் ஒளிமிகுந்த அத்தியாயமாகும். அன்றைய தினம் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி போன்றே இன்றைய தினமும் உலக முதலாளித்துவத்திற்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், 2008-ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தம் இன்றளவும் தொடரக்கூடிய நிலையில், இந்திய கார்ப்பரேட்டுகள் தங்கள் கொள்ளை லாபவேட்டையைத் தொடர்வதற்கு சிறந்ததொரு வாய்ப்பாக இந்தியாவில் உள்ள மதவெறி பாசிஸ்ட் எந்திரமான ஆர்எஸ்எஸ்/பாஜக-வைத்தான் பார்க்கின்றன. அவற்றிற்கு நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு குறித்தோ அதிலும் குறிப்பாக மக்கள் இடையே சமூக நல்லிணக்கம் இருந்திட வேண்டும் என்பதிலோ கொஞ்சமும் கவலையில்லை, எப்படியாவது தங்கள் கொள்ளை லாபவேட்டை தொடர வேண்டும் என்பதேயாகும்.
              இதன் காரணமாகவே தங்களுக்கு ஒரு `வலுவான தலைவர்’ தேவை என்கிற ரீதியில் அவை கூப்பாடு போடுகின்றன. இதன் சமீபத்திய எடுத்துக்காட்டுதான் இந்தியப் பங்குச் சந்தையின் சமீபத்திய ஏறுமுகமான காட்சியாகும். உலக அளவில் மிகவும் சோகமாக உள்ள பங்குச்சந்தை இந்தியாவில் மட்டும் தன்னுடைய 22 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து புதிய உச்சத்திற்கு சென்றிருக்கிறது. தேசிய அளவிலான பங்குச் சந்தையும் புதிய ரிக்கார்டை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியக் கார்ப்பரேட்டுகள் ஒரு முக்கியமான நிதி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் மூலமாக தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றன. அவர், “நரேந்திர மோடி தலைமையிலான தேஜகூ அரசாங்கம் மக்களவைத் தேர்தலுக்குப்பின் ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள்’’ இருப்பதாகக் கூறியிருக்கிறார். (இந்துஸ்தான் டைம்ஸ், மார்ச் 8, 2014)தங்கள் கொள்ளை லாபவேட்டை எவ்விதமான தடங்கலுமின்றி தொடர்வதில் தங்களுக்குள்ள பேரவாவின் காரணமாகவே இந்திய கார்ப்பரேட்டுகள் பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை விளக்கிடுவதில் ஒரு விரைவான தீர்வினைக் கண்டறிய முனைந்துள்ளன.
       இதுபோன்று கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது. 1998-ல் பிரதமராகப் பதவியேற்பதற்காக வாஜ்பாய் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ஆதரவுக் கடிதம் வருவதில் தாமதம் ஏற்பட்டபோது இவ்வாறு பம்பாய் பங்குச் சந்தை தள்ளாடியது. உண்மையில் அந்த சமயத்தில் கிழக்கு ஆசிய பொருளாதாரமே நிலைகுலைந்திருந்தது. மீண்டும் 2004ல் பம்பாய் பங்குச்சந்தை தள்ளாடியது. அப்போதும் அதற்கு உண்மையான காரணமான சர்வதேச நிதி கொந்தளிப்பான சூழல்தான் காரணம். ஆயினும் அதனை மறைத்துவிட்டு அப்போது ஐமுகூ-1 அரசாங்கத்திற்கு சில நிபந்தனைகளின் அடிப்படையில் இடது சாரிக்கட்சிகள் வெளியிலிருந்து அளித்துவந்த ஆதரவுதான் காரணம் என்று பிரச்சாரம் செய்தனர். அப்போது இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் விடுத்த சில அறிக்கைகள் “சந்தைக்கு ஏற்புடையதாக இல்லை’’ என்று அவர்களால் குறை கூறப்பட்டது.
            வாஜ்பாய் தலைமையில் தேஜகூட்டணி ஆட்சிக்கு வருவதை இடதுசாரிக் கட்சிகள் தடுத்துவிட்டன என்று சில கார்ப்பரேட்டுகள் அறிவித்தன. அதேபோன்றுதான் இன்றும், சர்வதேச அளவில் சந்தைகள் மிகவும் மோசமான முறையில் தள்ளாடிக் கொண்டிருப்பதை இவை பார்க்க மறுத்து கண்ணை மூடிக்கொண்டிருக்கின்றன. வால் ஸ்ட்ரீட் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக ஆட்டங் கண்டுள்ளது. இருந்தபோதிலும் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் உலக அளவில் வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்திட முன்வந்துள்ளார்கள். இதன் காரணமாக அவர்கள் இந்தியாவில் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்து வருகிறார்கள். ஆயினும், உக்ரைன் நெருக்கடியை அடுத்து ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளிலிருந்து வரும் எதிர்மறையான செய்திகளாலும், சீனாவிலிருந்து வரும் உள்நாட்டு பொருளாதார விவரங்கள் ஆர்வத்தைக்குலைக்கக் கூடிய விதத்தில் இருப்பதாலும் இவ்வாறு அமெரிக்க முதலீட்டால் ஏற்பட்ட மகிழ்ச்சி நீடித்திருக்க முடியவில்லை.
             அவற்றின் தாக்கம் ஏற்கனவே உலக அளவில் பிரதிபலிக்கத் தொடங்கிவிட்டது. விரைவில் இந்தியச் சந்தைகளையும் பிரதிபலித்திடும். மேலும் பங்குச்சந்தை விவரங்கள் உள்நாட்டுப் பொருளாதார அடிப்படைகளுக்கும் விடையளித்தாக வேண்டும். நிதி அமைச்சரின் கூற்றின்படி 18 மாதங்களுக்குப் பின்னர் இப்போதுதான் ரூபாய், டாலருக்கு எதிராக வலுப்பட்ட நிலையில் இருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (இந்தியாவின் ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றிற்கு இடையேயான இடைவெளி) யிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆடம்பரப் பொருள்கள் இறக்குமதியில் தடைகள் விதித்திருப்பதன் மூலம் இது சாத்திய மாகி இருக்கிறது. இதைத்தான் இடது சாரிக் கட்சிகள் வெகுகாலமாக சொல்லி வந்தன. இப்போதாவது இதனை அரசாங்கம் செய்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக்கொள்வோம். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களும், அவை குறைந்த அளவில் இருந்தாலும் கூட, நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் விளைவுகளை ஏற்படுத்திடும். உலக அளவில் கார்ப்பரேட்டுகளுக்குக் கடும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் கூட அந்தப் பாதிப்புகள் இந்தியக் கார்ப்பரேட்டுகள் மீது பாயாதவாறு ஐமுகூ-2 அரசாங்கம் அவர்களைப் பார்த்துக் கொண்டது.
          உலக அளவில்பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும் இந்திய கார்ப்பரேட்டுகளின் வருமானத்தில் எந்த ஆண்டிலும் வீழ்ச்சி ஏற்படவில்லை என்று ஒரு முன்னணி முதலீட்டு வங்கியின் மேலாண் இயக்குநர் ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 5.72 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. அதேபோன்று டெல்கோ, பார்தி ஏர்டெல், 5.5 சதவீதமும், ஐசிஐசிஐ வங்கி 6 சதவீதமும் லாபம் ஈட்டியிருக்கின்றன. இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு இந்திய அரசாங்கம் சலுகைகளை வாரி வழங்கியிருக்காவிட்டால் இந்நிறுவனங்களுக்கு இவை சாத்தியமாகி இருக்காது. இத்தகைய சலுகைகளை மேலும் அபரிமிதமான முறையில் தங்களுக்கு அளிக்கக்கூடிய ஒரு `மீட்பரைத்தான்’ இந்திய கார்ப்பரேட்டுகள் எதிர்பார்க்கின்றன.
             இவர்களில் கணிசமானவர்கள் ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் மோடியால் சலுகைகள் அளிக்கப்பட்டவர்களாவார்கள். தகவலறியும் சட்டத்தின் கீழ் வெளிக்கொணரப்பட்ட பல உண்மைகளை ஹார்ட்நியூஸ் 2012 ஜூலை வெளியான செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. அதன்படி சூரத் அருகே ஹசிரா தொழிற்சாலை மண்டலத்தில் நிலக்குழு நிலத்தின் மதிப்பு சதுர மீட்டர் 950 ரூபாய் என்று நிர்ணயம் செய்திருக்கும் நிலத்தினை மோடி அரசு சதுர மீட்டர் ஒரு ரூபாய் என்ற முறையில் 8 லட்சம் சதுர மீட்டர் நிலத்தை எல் அண்ட் டி நிறுவனத்திற்கு வாரி வழங்கியிருக்கிறது. அதேபோன்று டாட்டா நானோ கார் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் சந்தை மதிப்பு சதுர மீட்டர் 10 ஆயிரம் ரூபாய் அளவிலானது. அதனை வெறுமனே சதுர மீட்டர் 900 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு 1100 ஏக்கர் நிலம் விற்கப்பட்டது. அந்நிறுவனம் வங்கியிடமிருந்து 9570 கோடி ரூபாய் வெறும் 0.10 சதவீத வட்டி விகிதத்தில் அதனையும் 20 ஆண்டு காலம் கழித்துவழங்கக்கூடிய விதத்தில் பெற்றிருக்கிறது. எந்தவொரு நிதி நிறுவனமும் தான் மேற்கொள்ளவிருக்கும் திட்டத்தின் மொத்த செலவினத்தில் 100 சதவீதத்திற்கு மேல் கடன் கொடுக்காது.
              நானோ திட்டத்தின் மொத்த செலவின மதிப்பு 2200 கோடி ரூபாய்தான். ஆனால் அது 9570 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறது. இவைதவிர மானிய கட்டணத்தில் மின்சாரம், தண்ணீர் ஆகியவையும் மற்றும் பல வசதிகளும் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றின் விளைவாக குஜராத் அரசாங்கத்திற்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நானோ கார் உற்பத்திக்கும் குஜராத் அரசாங்கம் வழங்கியிருக்கும் சலுகை என்பது 60 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று தான் மற்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதான் `வீரியம் மிகுந்த குஜராத்’’ உண்மை நிலையாகும். அதே சமயத்தில் நாட்டிலேயே மக்களின் வறுமை விகிதம் மிக அதிகமாக இருக்கும் மாநிலம் குஜராத் மாநிலம் தான். சுமார் 4 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கிடையாது. மோடி அரசாங்கத்தின் கீழ் 9829 தொழிலாளர்கள், 5447 விவசாயிகள், 919 கூலிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.
            மாநில அரசின் கடனும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2008-09ம் ஆண்டில் 87,010 கோடி ரூபாயாக இருந்த கடன், 2009-10ம் ஆண்டில் 98,528 கோடி ரூபாயாகவும், 2010-11ல் 1 லட்சத்து 12 ஆயிரத்து 462 கோடி ரூபாயாகவும் அதிகரித்திருக்கிறது. எனவேதான் கார்ப்பரேட்டுகள் மோடியை தங்கள் `இதயக்கனி’யாக ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். மக்களின் வாழ்க்கைத்தரம் கடுமையாக சீரழிந்துள்ளதைப்பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இந்தியக் கார்ப்பரேட்டுகளின் எதிர் பார்ப்புகள் ஒருவேளை ஈடேறுமானால் என்னாகும்? நாட்டில் மதவெறி வன்முறை நடவடிக்கைகளும் சலுகைசார் முதலாளித்துவமும் இணைந்து மெகா ஊழல்கள் உருவாகும். இதன் விளைவு மிகவும் கொடூரமாக இருக்கும். மனித உரிமைகள், பிரஜா உரிமைகள் நசுக்கப்படும். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூக நல்லிணக்க மாண்பே கடும்பாதிப்புக்கு உள்ளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளாகும்.
         எனவே நாட்டிற்குத் தேவை காங்கிரஸ் மற்றும் பாஜக பின்பற்றி வந்த கொள்கைகளிலிருந்து மாறுபட்ட, மாற்றுக் கொள்கைத் திசைவழிதான். அதன்மூலமாக மட்டுமே பொருளாதார வளர்ச்சியும் அதனுடன் அனைத்துப் பகுதி மக்களின் பொருளாதார வளமும் அதிகரித்திடும். ஒருசிலரை மட்டும் ஒளிரச்செய்திடும் கேடுகெட்ட கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியும். இத்தகைய மாற்றுக் கொள்கை சாத்தியமானது மட்டுமல்ல, நடைமுறைப்படுத்தக்கூடியதுமாகும். நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்த லின்போது இதனை அடையும் விதத்தில் மாற்று அரசாங்கத்தை அமைப்பதே நம்முன் உள்ள கடமையாகும்.
தமிழில் : ச.வீரமணி
நன்றி :      
 
People's Democracy

கருத்துகள் இல்லை: