திங்கள், 31 மார்ச், 2014

உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு அறுக்கிற நாளில் அரிவாளோடு வருவதா?

 

 கட்டுரையாளர் :தோழர்.ஜி.ராமகிருஷ்ணன், 
               மாநிலச்செயலாளர்            
               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி       

 
                 “நான் மின்சாரப் பிரச்சனையை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மின்சாரத்தைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழும்” மதுரையில் அஇஅதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் சேகரிக்கும் பிரச்சாரத்தின்  போது முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
            தமிழகத்தில் கோடை வெயில் தனது உக்கிரத்தைக் காட்டத் துவங்கியுள்ள வேளையில், மக்களை மேலும் துயரத்தில் மின்வெட்டு தள்ளிவரும் நிலையில், கவலைப்படாதீர்கள் என்று ஆறுதல் வார்த்தைகளை சொல்லி வருகிறார் முதலமைச்சர். மேலும் “சில இடங்களில் மின் உற்பத்தி பிரச்சனையால், ஓரிரு நாட்கள் தமிழகத்தில் சில மணிநேரம் மின்வெட்டு இருந்தது. அந்த மின்வெட்டும் விரைந்து சரிசெய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்திருக்கிறார். நான் மார்ச் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கோவைத் தொகுதிக்கு தேர்தல் வேலையாக சென்றிருந்தேன்.
            அங்கு சுமார் நான்கு மணி நேரம் மின்வெட்டு இருந்தது. இந்த மின்வெட்டு சிறு, குறு தொழில்களைக் கூடுதலாக பாதிக்கிறது. கோவை மாநகரத்தில் மட்டுமல்ல, சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் இதே நிலைமைதான். தற்போது மின்வெட்டால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. பொருளாதாரச் சுழற்சியில் ஒரு கண்ணி அறுந்தாலும் ஒட்டுமொத்த வளையமும் கழன்றுவிடும். உற்பத்தி பாதிப்பால், தொழிலாளர்களுக்கு வேலையின்மை, அதனால் அவர்களின் குடும்பங்கள் துயரில் ஆழ்தல் என்கிற துயரச் சுழற்சி அல்லவா உருவாகி வருகிறது. இந்த அவலநிலை கண்டு கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? திருப்பூர், இந்தியாவிற்கு அதிகமான அளவில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஒன்றாகும். மின்வெட்டால் அங்கும் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
                இப்படி உற்பத்தி பாதிப்பதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகிறது. மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. மின்வெட்டு அவர்களையும் பாதிக்கிறது. பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கவலைப்பட வேண்டாம் என்று எப்படி கூறுகிறார் தமிழக முதலமைச்சர்? 2001 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம்ஆண்டு வரையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்தவித மின்திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தப் பத்தாண்டு காலத்தில் அஇஅதிமுகவும், திமுகவும் தலா ஐந்தாண்டுகள் ஆட்சியில் அமர்ந்திருந்தன. தற்போது மாறி, மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு இருவருமே தப்பித்துக் கொள்ளும் வழியைத் தேடுகிறார்கள்.
                    ஆனால்இல்லாத மின்சாரத்திற்கு மின்கட்டணத்தை ஏற்றுவதில் மட்டும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் இருந்தனர். தனது ஆட்சியின்போது ஆண்டுதோறும் மின்கட்டணத்தை திமுக உயர்த்தியது. 2009-10 ஆண்டில் 954 கோடி ரூபாய்க்கு மின்கட்டணம் உயர்ந்தது. மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவோம் என்று ஆட்சிக்கு வந்த அஇஅதிமுக, 2011 ஆம் ஆண்டில் 42 சதவிகிதம் அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது. மக்கள் கடும் துயரத்துக்குள்ளாகினர். மின்வாரியத்தின் வருமானம் 35 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. தனியார் நிறுவனங்களிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை 12 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி ஆட்சியாளர்கள் வாய் திறக்க மாட்டேன் என்கிறார்கள். மின்வாரியத்திற்கு நட்டம் என்றால், எந்தக் கல்லாவிற்கு பணம் செல்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
            2011 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்குக் கிடைத்த தோல்விக்கு மின்வெட்டு ஒரு முக்கியமான காரணமாகும். மின்மிகை மாநிலமாக மாற்றுவோம் என்று அஇஅதிமுக தலைமை வாக்குறுதி அளித்தது. தற்போது மக்களைப் பார்த்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர்.தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இந்த அவல நிலைக்குக் காரணம் என்பதோடு, மத்திய ஆட்சியாளர்களின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் மின்னுற்பத்தியைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அனைத்து மக்களுக்கும் மின்சாரம் வழங்க தனியார் மின்னுற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும் என்று அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். காங்கிரஸ், பாஜக, திமுக, அஇஅதிமுக, மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் கைகளைத் தூக்கி ஆதரவளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக்கட்சிகள் மட்டுமே இதைக் கடுமையான எதிர்த்தன. தனியார்மயக் கொள்கை மக்களுக்குப் பலன் அளிக்கவில்லை. ஏற்கெனவே மின்னுற்பத்தி நடந்துவரும் மின்வாரிய மின்நிலையங்களின் ஆயுளும் முடிந்து கொண்டிருக்கிறது. தனியார் நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கூடுதலாக வாரி வழங்கத் தயாராக இருக்கும் அரசுகள் மின்வாரியத்திற்கு வழங்கினால், நட்டத்தில் ஓடுவதாக சொல்லப்படும் மின்வாரியம் அபாரமாக தனது பணியைச் செய்யத் துவங்கிவிடும். தனியார் நிறுவனங்களுக்கு அவசியமே இருக்காது.
                “உழுகிற நாளில் ஊருக்குப் போய்விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளோடு வந்து என்ன பயன்“ என்றொரு சொல்வடைதான் நினைவுக்கு வருகிறது. நீண்டகாலத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் அதுபற்றித் திட்டமிடாமலேயே அஇஅதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இருந்துவிட்டு தற்போது அரசியல் லாவணி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த கடுமையான பாதிப்பு உருவாவதற்குக் காரணமான கொள்கைகளை நடைமுறைப்படுத்திய காங்கிரஸ் மற்றும் பாஜக, அதற்கு ஆதரவாக கை தூக்கிய மதிமுக, பாமக ஆகிய கட்சிகளும் மின்வெட்டிற்கான உண்மையான காரணத்தைச் சொல்லாமல் தட்டிக் கழிக்கின்றன.
              இந்த நாசகரக் கொள்கைகளைத்தான் பாஜகவும் பின்பற்றுகிறது. அதனுடன் அணி சேர்ந்துள்ள தேமுதிக தலைமை இதுபற்றி மூச்சுவிடுவதில்லை. வருகிற தேர்தலில் இந்த வெற்று லாவணிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனைகளைத் தீர்க்க மாற்றுக் கொள்கைகளோடு வரும் இடதுசாரிக்கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

கருத்துகள் இல்லை: