திங்கள், 25 மார்ச், 2013

ஆன்மீகமும், ஆட்சியாளர்களும் கைவிட்ட பிருந்தாவன் விதவைப் பெண்கள்....!


 
         உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் (விருந்தாவன்) என்ற நகரம் ''புண்ணிய நகரம்'' என்றும், ''புனித ஸ்தலம்'' என்றும் ஆன்மீகவாதிகளால் போற்றப்பட்டு வருகிறது. மதுராவிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக விருந்தாவன் செல்லாமல் வரமாட்டார்கள். ஏனென்றால் அந்த நகரம் கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ள தவமாய் தவமிருந்த மீரா வாழ்ந்து மறைந்த இடம் என்ற நம்பிக்கையில் அந்த நகரம் முழுதும் ஏராளமான ஆசிரமங்கள் இருக்கின்றன. எந்த ஆசிரமங்களுக்கு சென்றாலும் இது மீரா தொடங்கிவைத்த ஆசிரமம் என்று ஒரு கதை சொல்லுவார்கள். அந்த ஆசிரமத்திற்கு உள்ளே சென்று பார்த்தால், ஏராளமான பெண்கள் 14 - 15 வயதிலிருந்து முதுமையடைந்த பெண்கள் வரை வெள்ளைப்புடவை அணிந்து நெற்றியில் நாமம் இட்டு தலையில் முக்காடு போட்டு கைத்தட்டிக் கொண்டு மீராவின் பஜனைப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்கள். இது போன்று பல ஆசிரமங்கள் மீராவின் பெயரில் இயங்கிக்கொண்டிருந்தன.

யார் இவர்கள்...?

           உத்திரபிரதேசம் மற்றும் பக்கத்து மாநிலங்களான மேற்குவங்கம், பீகார், ஒடிஸா போன்ற பகுதிகளிலிருந்து பெற்றோர்களினாலும் உறவினர்களாலும் அழைத்துவரப்பட்டு இந்த ஆசிரமத்தில் சேர்க்கப்படும் அத்தனைப் பெண்களும் கணவனை இழந்தப் பெண்கள் என்பது குறிப்படத்தக்கது. குழந்தைப் பருவத்தில் 14 - 15 வயதில் திருமணமாகி கணவனை இழந்த குழந்தைகள் உட்பட இளம்பெண்களும் மற்றும் வயதான பெண்களும் அவர்களில் அடங்குவர். அதுமட்டுமல்லாது, இவர்களில் பெரும்பாலானோர்  வயதான பணக்காரனுக்கு இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இந்த பகுதிகளில் வாழும் இளம் வயது பெண்கள் தங்களின் கணவன் மறைந்த பிறகு வேறொரு துணையைத் தேடிக்கொள்ளும் உரிமை பெண்களுக்கும் கிடையாது. கணவனை இழந்த தன்  மகளுக்கு வேறொரு துணையை அமைத்துத் தரும் பொறுப்பும் அவர்களின் பெற்றோர்களுக்கும் கிடையாது. மாறாக பிற்போக்குத்தனமான எண்ணங்களும் வழக்கங்களும் தான் இன்றைக்கும் அங்கு புரையோடி இருக்கின்றன. கணவனை இழந்த அந்தப் பெண்ணின் மனதில் வேறு எந்தவித எண்ணங்களும், ஆசைகளும், கற்பனைகளும் இயற்கையாக எழுந்துவிடக்கூடாது என்பதற்காக பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை இந்த மீரா ஆசிரமத்தில் சேர்த்து விடுகிறார்கள். அதுமட்டுமல்ல அத்தோடு அந்தப் பெண்ணையும் மறந்துவிடுவார்கள். கணவன் இறந்த பிறகு தன்  சொந்த பிள்ளைகளால் இங்கு அழைத்து வரப்பட்டு விடப்பட்டப் பெண்களும் இருக்கிறார்கள்.
         அதேப்போல் ஆசிரமத்திலும், அந்தப் பெண்களின் இயற்கையான எண்ணங்களையும், ஆசைகளையும் திசைத்திருப்புவதற்கு எந்நேரமும் கிருஷ்ணனையே வணங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று மீரா பஜனையை பாடிக்கொண்டேயிருப்பார்கள். கூடவே அந்தப் பெண்களும் கைகளைத் தட்டிக்கொண்டு பாடிக்கொண்டே இருப்பார்கள்.  பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் கவனம் முழுதும் ''ஹரே கிருஷ்ணா... ஹரே கிருஷ்ணா...'' துதிப்பதிலேயே இருக்கச் செய்து மூளைச் சலவை செய்துவிடுவார்கள்.  இவர்கள் சாப்பிடும் உணவில் சுவைக்குப் பயன்படுத்தப்படும் உப்பே இருக்காது என்பது  கொடுமையானது. பெரும்பாலான காலங்களில் இவர்கள் பிச்சையெடுத்து தான் சாப்பிடுகிறார்கள் என்பது அதைவிடக் கொடுமையானது.
                அதுமட்டுமல்லாது அவர்கள் பயன்படுத்தும் இடம் காற்றோட்ட வசதியுடனோ, சுத்தமாகவோ, சுகாதாரமாகவோ இருக்காது. அவர்கள் அருந்துவதற்கு குடிநீர் கூட சுத்தமான குடிநீர் கிடையாது. இவர்களுக்கு எழுத படிக்கத் தெரியாது. இவர்களுக்கென்று ரேஷன் கார்டு கிடையாது. முதியோர் பென்ஷன் கிடையாது. இவர்கள் அறிந்ததெல்லாம் கிருஷ்ணனும், மீரா பஜனையும் தான் என்பது தான் வேடிக்கையானது. ஆனால் இதுவரை இவர்கள் துதித்த கிருஷ்ணனும் காப்பாற்றவில்லை. இவர்கள் மூச்சிறைக்க பஜனைப் பாடினார்களே அந்த மீராவும் காப்பாற்றவில்லை. வழக்கம் போல் மத்திய - மாநில  இவர்களை கண்டுகொள்ளவே இல்லை.
         ஆனால் இவர்களின் இந்த அவல நிலையை கண்டு  ''சுலப் இன்டர்நேஷனல்'' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதி மன்றம் செல்ல, நீதிமன்றமோ அந்த பாதிக்கப்பட்ட பெண்களை பாராமரிக்கும் பொறுப்பை அவர்களிடமே சென்ற ஆகஸ்ட் மாதம் கொடுத்தது என்பது சற்றே ஆறுதலான விஷயமாகும். அந்த தொண்டு நிறுவனமானது, விருந்தவன் நகரில் ஆசிரமங்களிலும், வாடகை வீடுகளிலும் என எங்கெல்லாம் கணவனை இழந்த பெண்கள்  வசித்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்களைத் தேடிக் கண்டுப்பிடித்து அரசே நடத்தும் ஐந்து ஆசிரமங்களில் தங்கவைத்து பராமரிக்கிறார்கள். இதுவரை 700 பெண்களை கண்டுபிடித்து பராமரிக்கிறார்கள்.  இவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2000 உதவித்தொகை வழங்கிவருகிறார்கள். எழுத படிக்க கற்றுக்கொடுக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கென்று வருமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு பூக் கட்டுவது, ஊதுபத்தி செய்வது போன்ற சுயதொழில் சொல்லிக்கொடுக்கிறார்கள். இவர்களுக்கென்று சிறப்பு மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்களின் மனநிலையிலும், வாழ்நிலையிலும் ''சுலப் இன்டர்நேஷனல்''  தொண்டு நிறுவனம் மாற்றங்களை கொண்டுவந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும்.
          நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்த தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த ஹோலிப்பண்டிகையை அந்தப் பெண்கள் புதிய அனுபவத்துடனும், மிகுந்த மகிழ்ச்சியுடனும் தங்கள் மீது வண்ண வண்ண மாவுகளை வீசிக்கொண்டும், பூக்களை வீசிக்கொண்டும் சிறப்பாக கொண்டாடினார்கள் என்பது தான் இதுவரை விருந்தவனமே கண்டிராத காட்சிகளாகும். இத்தனை காலமாய் பாலைவனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையிலும் வண்ண வண்ண மலர்கள் பூத்து மனம் வீசத் தொடங்கியிருக்கிறது என்பதை பார்க்கும் போது நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நேரத்தில் அந்த தொண்டு நிறுவனத்தையும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

கருத்துகள் இல்லை: