திங்கள், 24 செப்டம்பர், 2012

ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றிபெற இந்திய தேசத்தை விலை பேசும் மன்மோகன் சிங்....!






 இந்திய மஹா ஜெனங்களே...!

மேலே உள்ள படத்தைப் பாத்தீங்களா..? மாமனும் மச்சானும் கொஞ்சி குலாவுறாங்க... இவ்வளவு கொஞ்சலும் கெஞ்சலும் எதற்கு....?
கொஞ்ச நேரம் டி. வி. பொட்டி, மெகா சீரியல், விளம்பரம், இலவசங்கள் போன்ற மாயையிலிருந்தும், மயக்கத்திலிருந்தும் கொஞ்சம்  விடுபட்டு வெளியில வாங்களேன். ஓ... வந்துட்டீங்களா...! இப்போ கொஞ்ச நேரம் கண்ணை மூடிகிட்டு... உங்க கண்ணை மூடிகிட்டு உங்களோட நினைவுகளை சற்றே பின்னோக்கி செலுத்துங்கள். ரொம்ப தூரம் போகவேண்டாம். மே 2004 முதல் நவம்பர் 2008 வரையிலான காலகட்டத்தில் நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். 
         கடந்த 2004 முதல் 2008 வரையில் இடதுசாரிகளின் தயவோடு ஆட்சியிலிருந்த முதலாம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியில் நம் நாட்டில்,  பெட்ரோல் விலை என்பது  ரூபாய் 35 - லிருந்து ரூபாய் 40 - க்குள் தான் இருந்தது. சமையல் எரிவாயுவின் விலை என்பது  ரூபாய் 280 தான் இருந்தது. மன்மோகன் சிங் - ப.சிதம்பரம் கூட்டாளிகள் பெட்ரோல் - டீசல் - மண்ணெண்ணெய் - சமையல் கேஸ் விலைகளை உயர்த்துவதற்கு முற்பட்ட போதெல்லாம், இடதுசாரிகளின் நிர்பந்தம் காரணமாக  அவர்களால் உயர்த்த முடியாமல் போனது. எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை ஆன்  - லைன் வர்த்தகத்தில் சேர்த்திட மன்மோகன் சிங் துடித்த போதும் இடதுசாரி கட்சிகள் நிர்பந்தம் காரணமாக அவ்வாறு அவரால் செய்ய முடியவில்லை. பொதுத்துறை பங்குகளை விற்க முயன்ற போதும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி மூதலீட்டை நுழைக்க முயன்ற போதும், இன்சூரன்ஸ் மற்றும் வங்கி போன்ற நிதித்துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்த முயன்ற போதும், அமெரிக்காவின் கட்டளைப்படி தேச நலனுக்கு எதிராக - மக்கள் நலனுக்கு எதிராக செயல்பட துணிந்த போதும் அவைகளுக்கு எதிராக பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்தின் வெளியிலும் இடதுசாரி கட்சிகள்  போராட்டங்கள் நடத்தியும், மீறி செய்தால் ஆதரவை திரும்பப்பெறுவோம் என்று மிரட்டியும் ஒரு குறைந்த பட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வதற்கு இடதுசாரி கட்சிகள் அந்த ஆட்சிக்கு வழிகாட்டினர் என்பதால் நாட்டில் மேலே சொன்ன இடைப்பட்ட காலங்களில் விலைவாசி உயர்வே இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். 
             ஆனால், தான் நினைத்த படி எதையுமே சாதிக்கமுடியவில்லை  என்பது  அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எரிச்சலையும் கோபத்தையும் ஊட்டியது. 2004 - ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில், ஆட்சி செய்வதற்கு காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லாததால், 62 எம்பி - க்களை கொண்ட இடதுசாரி கட்சிகளின் தயவில் ஆட்சி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதால் தான், அந்த ஆட்சியை  மக்களுக்கு எந்தவிதமான இடையூறும்  செய்யாமல் சரியான  பாதையில் செலுத்த முடிந்தது. ஆனால் தான் நினைத்தபடி எதையும் சாதிக்க முடியாமல் அமெரிக்கா  ஏமாந்துபோனது. 
              2009 - ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு தான் ஆட்சி நடத்த முடியும் என்ற  சூழ்நிலை அமைந்துவிடக்கூடாது என்பதில் காங்கிரஸ் கட்சியைவிட அமெரிக்கா தான் துடித்தது. அதனால் 2009 - நாடாளுமன்றத்தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் தலையீடு என்பது இருந்தது. மீண்டும் மன்மோகன் சிங்கே பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலை விட காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும், 2004 - ஆம் ஆண்டு தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 62 இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்காவின் ஆசைகளை நடத்தவிடாமல் மன்மோகன் ஆட்சிக்கு வழிகாட்டிய இடதுசாரிக் கட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க  வேண்டும் என்பதற்காகவும், அவர்களது தயவில் மீண்டும் ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் அமெரிக்கா காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலைகளை செய்தது.
           அமெரிக்க உளவுத்துறை - சி.ஐ.ஏ - வும், இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் மற்றும் துணை தூதர்களும், தூதரக அதிகாரிகளும்  காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் களத்தில் இறங்கினர். தேர்தல் அறிவிப்பு வெளியான நாட்களிலிருந்து சி. ஐ. ஏ - வின் தலைவர் வெளிப்படையாகவே புதுடெல்லியில் தங்கியிருந்து காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களையும், ஆலோசனைகளையும் வழங்கிவந்தார். அவ்வப்போது அவரை இந்திய நாட்டின் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து ஆலோசனைகளை பெற்று வந்தார். அமெரிக்க தூதர்கள் எல்லோரும் கூட்டணிக்கட்சித் தலைவர்களோடும், மற்ற சிறு கட்சிகளின் தலைவர்களோடும் பேச்சுக்களை நடத்தி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை சிதராமல் பார்த்துக்கொண்டனர். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றிபெறுவதற்கு ரூபாய் ஒரு இலட்சம் கோடிக்கு மேல் அமெரிக்கப் பணம் இந்தியாவில் இறக்கிவிடப்பட்டு செலவு செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கட்சிகளின் ஆட்சி நடந்த மேற்கு வங்கம், கேரளம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் மட்டுமே இடதுசாரிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்பதற்காகவே மிக அதிகமாக செலவு செய்யப்பட்டது மட்டுமல்ல, சி. ஐ. ஏ - வும், தூதர்களும் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து தீவிரமாக தேர்தல் வேலைகளையும் செய்தார்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது. 
                 அமெரிக்காவின் இத்தனை சித்து  விளையாட்டுகளின் மூலமாகத்தான் காங்கிரஸ் கட்சித் தலைமயிலான கூட்டணிக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. இடதுசாரிக் கட்சிகளின் தயவு இல்லாமல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக உட்கார முடிந்தது. இடதுசாரிகட்சிகளின் எண்ணிக்கை குறைக்க முடிந்தது. இந்த சித்து விளையாட்டுகளில் இன்றைய அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவிற்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.
           இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தல்களில் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெறுவதற்கு ''ஒசாமா பின்லேடன்'' உதவினார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ''இரட்டை கோபுர தகர்ப்பு நாடகம்'' நடத்தி அந்த பழியை ''ஒசாமா பின்லேடன்'' மீது சுமத்தி, ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் ஒசாமா பின்லேடன் தொலைக்காட்சியில் தோன்றி மீண்டும் அமெரிக்காவை தாக்குவேன் என்று சொல்லுவது போல மற்றொரு நாடகத்தை நடத்தி தான் ஜார்ஜ் புஷ் இரண்டாவது முறையாக வெற்றிபெற முடிந்தது.
           ஆனால் இப்போது இந்த ஜனாதிபதி தேர்தலில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சென்ற  ஜனாதிபதி தேர்தலின் போது  வீழ்ந்துவிட்ட அமெரிக்காவின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவேன் என்று சொல்லி வெற்றிபெற்ற ஒபாமாவால் அவ்வாறு செய்யமுடியாமல் திணறினார் என்பது மட்டுமல்ல, நாட்டை முன்பைவிட மோசமான பொருளாதார நிலைமைக்கு இட்டுச்சென்றுள்ளார் என்பது தான் உண்மை. இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமை  என்பது மட்டுமல்ல பல இலட்சம் இளைஞர்களின் வேலையிழப்பு  என்பதும் ஒபாமாவிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. அங்கும் விலைவாசி உயர்வு, வருமானத்திற்கு அதிகமான செலவு போன்ற பொருளாதார நெருக்கடிகள் மக்களின் கழுத்தை நெருக்கியது. அதனால் விழிப்படைந்த இளைஞர் கூட்டம்   கடந்த பத்து மாத காலமாக தொடர்ந்து நடத்தி  வரும் '' வால் ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்'' போராட்டம் என்பது ஒபாவிற்கு பின்னாடி பச்சை மிளகாய் வைத்தது போல் இருக்கிறது.
            இதையெல்லாம் தாண்டி ஒபாமாவுக்கு  வெற்றி என்பது எட்டாக்கனியாக போய்விடுமோ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. அவரது வெற்றிக்கு மன்மோகன் சிங்கின் ஒத்துழைப்பு மிக அவசியமாக தேவைப்படுகிறது. அதற்கு அமெரிக்க பொருளாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்துவது போல காட்டிக்கொள்ளவேண்டும். ''ஆதலினால் இந்திய பொருளாதாரத்தை நாசம் செய்வீர்'' என்று ஒபாமா மன்மோகன் சிங்கிற்கு கட்டளையிட, ஏற்கனவே தன் கட்சியின் வெற்றிக்கு ''ஒத்துழைப்பு'' கொடுத்த ஒபாமாவிற்கு அவர் எதிர்ப்பார்ப்பது போல் இந்தியாவை விலைபேசி விற்றுவிட்டால், அதையே ஒரு சாதனையாக மக்களிடம் சொல்லி ஓட்டுக்களை பெற்று வெற்றிபெற்று விடலாம் என்ற கணக்கில் தான் மன்மோகன் சிங்கும் தன்  நண்பரின் வெற்றிக்காக, சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதித்தல், இன்சூரன்ஸ், வங்கி, விமானம் போன்றத் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை உயர்த்துதல், உழைப்பாளி மக்களின் பென்ஷன் நிதியை பங்கு சந்தைக்கு திறந்து விடுதல், பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு விற்றல் போன்ற ''பொருளாதார சீர்த்திருத்தங்களை'' செய்ய மன்மோகன் சிங் துணிந்திருக்கிறார் என்பது தான் உண்மை. இது ஒபாமாவிற்கு மன்மோகன் சிங் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

            இந்திய மஹா ஜெனங்களே... ரௌத்திரம் பழகுங்கள்... கோபப்படுங்கள்... அநியாயங்களைக் கண்டு கோபப்படுங்கள்... நாமிருக்கும் நாடு நமதென்பதை அறியுங்கள்...  

கருத்துகள் இல்லை: