வியாழன், 20 ஜூன், 2013

மாசற்ற மாமணிகளாய் மார்க்சிஸ்ட்டுகள்...!

  
      நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை சந்தித்துவரும் ஊழல் நடவடிக்கைகள் பட்டியல் போட்டு முடிக்க முடியாது. 1948ம் ஆண்டிலிருந்தே ஊழல் புகார்கள் எழுந்து விட்டன. முதல் புகாரே இராணுவத்திற்கு ஜீப் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, காங்கிரஸ் ஆட்சியில் நடை பெற்ற, பிரச்சித்தமான, சில ஊழல்கள் இதோ....
        முந்திரா ஊழல் (1957), 3 கோடி ரூபாய்கைரோன் வழக்கு (1964), நகர்வாலா வழக்கு (1971), 60 இலட்சம்தல்மோகன்ராவ் வழக்கு (1974), அந்துலே ஊழல் (1982), சிமென்ட் ஊழல்சூரத் லாட்டரி (1982), 5.4கோடிவெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர்போபர்ஸ் வழக்கு (1987), ஹவாலா வழக்கு (1995), உர இறக்குமதி ஊழல் (1995).........இப்படியாக பட்டியல் நீண்டுகொண்டே போகும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி, நரசிம்மராவ், மன்மோகன் சிங் , அர்ஜூன் சிங், அருண்நேரு, பூட்டாசிங், பல்ராம் ஜாக்கர், சுக்ராம், சிதம்பரம் என எண்ணற்ற தலைவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிலர் மீது வழக்குகளும் நடைபெற்றன.
      ஐக்கிய முற்போக்கு முன்னணி - UPA -II அரசின் சாதனையாக நடைபெற்ற மெகா ஊழல்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டி - சுரேஷ் கல்மாடி (காங்கிரஸ்) ஊழல் செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா (திமுக) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
         நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் குறுக்கிட்டதற்காக சட்டத்துறை அமைச்சர், அஸ்வின் குமார் (காங்கிரஸ்) பதவி விலகல். ரயில்வேயில் பணி நியமனம் செய்ய தனது வீட்டில், மருமகன் மூலம் பேரம் பேசி கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு இரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் (காங்கிரஸ்) பதவி விலகல். கோதாவரி கிருஷ்ணா நதிப்படுகையில் எரிவாயு எடுப்பதற்கான அனுமதி வழங்குவதில்கோடிக்கான ஊழல். கார்கில்போரில் மரணமடைந்த தியாகிகளுக்கு கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கியதில் ஊழல். இத்தாலி நிறுவனம் ஒன்றில் ஹெலிகாப்டர் வாங்கியதில் லஞ்சம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு. வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தரப்பட்ட லஞ்சம். எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமர் மன்மோகன் சிங் மீதே ஊழல் புகார்.
        நிலக்கரி சுரங்க ஓதுக்கீடு 2004 முதல் 2009ம் ஆண்டு உட்பட்ட காலத்தில் நடந்துள்ளது. இந்த காலகட்டத்தில் அந்த துறை மன்மோகன் சிங்   பொறுப்பில் தான் இருந்தது. ஏல முறையில் ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் அரசிற்கு ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை ஆணையம் தெரிவித்துள்ளது.
         சிபிஐ இது குறித்து விசாரித்து வருகிறது. சிபிஐ நடவடிக்கையில் பிரதமர் அலுவலகமும் சட்டத் துறையும் தலையிட்டதை உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இந்திய நாட்டுமக்கள் இனி காங்கிரஸை நம்ப முடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டனர். இதை தெரிந்துகொண்டுதான் காங்கிரசார், இன்று மத்தியில் மைனாரிட்டி அரசாக இருந்தாலும், எதிலும் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல் என மூழ்கிவிட்டனர். மத்திய அமைச்சர்கள் ஊழலில் சிக்கி பதவி விலகுவதும், மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், ஜாமீனில் வெளியே வருவதும் இன்று அன்றாட நிகழ்ச்சியாக மாறிவிட்டது.
         காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி கட்சிகளும் ஊழலில் சாதனை புரிந்து வருகின்றனர்.
ஊழலுக்கு பெயர் பெற்ற பிஜேபி கார்கில் போர் நடைபெற்ற நேரத்தில் சவப் பெட்டிகள் வாங்கியதில் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்தவர்கள் பிஜேபியினர். பிஜேபியின் முன்னாள் அகில இந்திய தலைவர், பங்காரு இலட்சுமணன், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் வழங்கப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளார். பிஜேபியின் மற்றும் ஒரு முன்னாள் தலைவர் நிதின் கட்கரிக்கு சொந்தமான புர்த்தி என்ற மின்சாரம் மற்றும் சர்க்கரை நிறுவனம் 7 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டு வருமான வரித்துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே அவரது கட்சி தலைமை பதவி பறிபோனது.
         கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர், எடியூரப்பா (பிஜேபியிலிருந்து தற்போது விலகி தனி கட்சி துவக்கியுள்ளார்) நில முறைகேடு மற்றும் சட்ட விரோத சுரங்க பணிகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்ற படிகள் ஏறி வருகின்றார். பீகார் மாநிலத்தில் ரூ.950 கோடி மாட்டுத் தீவன ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக முன்னாள் முதலமைச்சர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
       இதில் மொத்தம் உள்ள 53 வழக்குகளில் 44வது வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் முன்னாள் எம்எல்ஏ துரவ் பகத் மற்றும் முன்னாள் எம்.பி. ஆர்.கே.ராணா ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ராணா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியையும், துரவ் பிஜேபி கட்சியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மற்றும் அவரின் மகள் அஜய்க்கு 10 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 199 மற்றும் 2000 ஆண்டுகளில் 3,206 ஆசிரியர்களை நியமனம் செய்ய போலி ஆவணங்களைத் தயாரித்தது, சுமார் 150 கோடி ரூபாய் அள வுக்கு லஞ்சம் பெற்று பணி நியமனம் செய்தது ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டது.
                         இந்திய தேசிய லோக்தள் என்ற கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனாவார். இப்படி சுதந்திர இந்தியாவை கடந்த 65 ஆண்டுகளில் ஆண்டவர்கள் கொள்ளையடித்து வெளிநாட்டில் கொண்டுபோய் குவித்து வைத்துள்ள கருப்பு பணத்தின் மதிப்பு சுமார் 400 லட்சம் கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி தற்போது சுமார் 75 லட்சம் கோடி அளவிற்கான கருப்பும் பணம் கண்டறியப்பட்டுள்ளது. 200 ஆண்டுகாலம் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்து சுரண்டிய ஏகாதிபத்திய சக்திகளை விஞ்சும் அளவிற்கு இந்திய அரசியல்வாதிகளின் கைவரிசை ஓங்கி விட்டது. இன்றைய உலகமய கொள்கைகளின் காரணமாக ஊழல் தலைவிரித்தாடி வருகின்றது.
          ஊழலின் உச்சக்கட்டத்தை இந்தியா இன்று சந்தித்துக் கொண்டுள்ளது. இதற்கு மத்தியில்தான் மேற்குவங்கத்திலும், கேரளாவிலும், திரிபுராவிலும் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்து மார்க்சிஸ்ட்டுகள் ஊழல்களுக்கு அப்பாற்பட்டு நின்று தூய்மையான ஆட்சியைத் தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
         மார்க்சிஸ்ட்டுகள் மாசற்றவர்கள் என நிருபித்துள்ளனர். மாசற்ற மாமணிகளாய் மார்க்சிஸ்ட்டுகள். மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், இ.கே. நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், ஜோதி பாசு, புத்ததேவ், நிருபன் சக்கரவர்த்தி, தசரத் தேவ், மாணிக்சர்க்கார் என 8 முதலமைச்சர்கள்  இந்த 65 ஆண்டுகாலத்தில் இந்தியாவின் மூன்று மாநிலங்களில் முதல்வர்களாக இருந்துள்ளனர். இவர்கள் தூய்மையானவர்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் மட்டுமல்ல திறம்பட நிர்வாகித்து மாநிலத்தின் நலன்களை பாதுகாத்தவர்கள். மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் இ.எம்.எஸ் அவர்கள்; 5-4-1957 முதல் 31-07-1959; வரையிலும், 6-03-1967 முதல் 1-11-1969 வரையிலும் 2 முறை கேரளத்தின் முதலமைச்சராக   இருந்திருக்கிறார்.
       இந்தியாவிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தத்தை நிறைவேற்றி ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 செண்ட் நிலத்தை வழங்கியவர். தனக்கு சொந்தமான சொத்துக்களை கட்சிக்கு கொடுத்தவர் இ.எம்..எஸ். அவரை தொடர்ந்து தோழர் இ.கே.நாயனார், கேரளத்தின் முதலமைச்சராக 25-01-1980 முதல் 20-10-1981 வரையிலும், 26-03-1987 முதல் 17-06-1991 வரையிலும், 20-05-1996 முதல் 13-05-2001 வரையிலும் மூன்று முறை இருந்தார். கேரளத்தை முழுமையான கல்வியறிவு கொண்ட மாநிலமாக மாற்றி காட்டியவர். தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் 18-05-2006 முதல் 14-05-2011 வரை முதலமைச்சராக இருந்தார்.  தோழர் ஜோதிபாசு மேற்கு வங்கத்தில் 21-06-1977 முதல் 6-11-2000 வரை 23 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். இருண்டு கிடந்த மேற்குவங்கத்தில் மின்சார உற்பத்தியை பெருக்கி மின் மிகை மாநிலமாக மாற்றியவர். கேரளத்தை தொடர்ந்து நிலச்சீர்திருத்தத்தை அமல்படுத்தி வெற்றி கண்டவர்.
        தோழர் புத்ததேவ் 6-11-2000 முதல் 13-05-2011 வரை 2 முறை மேற்குவங்கத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். திரிபுராவில் தோழர் நிருபன் சக்கரவர்த்தி 5-01-1978 முதல் 5-02-1988 வரை 2 முறை முதலமைச்சராக இருந்தார். முதலமைச்சர் பதவியிலிருந்து வெளியேறியபோது இரண்டு தகர பெட்டிகளுடன் மட்டும் சென்றவர் என்று ஊடகங்கள் வியந்து பாராட்டிய பெருமைக்குரியவர்.தோழர் தசரத் தேப் 10-04-1993 முதல் 11-03-1998 வரை திரிபுராவின் முதலமைச்சராக இருந்தார். தோழர் மாணிக் சர்க்கார் 11-03-1998 முதல் இன்று வரை 4 வது முறையாக திரிபுரா வின் முதலமைச்சராக இருந்து வருகிறார்.
        வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் திரிபுராவை  அமைதி மாநிலமாக மாற்றிக்காட்டி மாற்றாரும் புகழும் சாதனையாளர். இவர்களது அமைச்சரவைகளில் நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் பணியாற்றியுள்ளனர்.  ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர்கள் பணியாற்றியுள்ளனர். இவை மட்டும் இல்லாமல் நூற்றுக்கணக்கான தோழர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டு நாடளுமன்ற உறுப்பினர்களாக பணிபுரிந்துள்ளனர், பணிபுரிந்து வருகின்றனர். மாநிலங்களவை யிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்தனர், பணிபுரிந்து வருகின்றனர்.
       இவர்கள் யாராவது ஊழல் செய்தார்கள் என்று ஏதாவது புகார் உண்டா? யாராவது சொல்ல முடியுமா? சுதந்திர இந்தியாவின் 65 ஆண்டுகளில் அரசு மட்டத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றிய மார்க்சிஸ்ட்டு கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? பிரதமர் பதவியைக் கூட வேண்டாம் என்று சொல்ல யாருக்கு துணிவு வரும் மார்க் சிஸ்ட்டுகளை தவிர. மார்க்சிஸ்ட்டுகளின் ஆதரவு இருந்தால்தான் மன்மோகன் சிங்கின் தலைமையிலான முதல் ஐக்கிய முன்னணி ஆட்சி தொடரும் என்ற நிலை யிலும் கூட, கவர்னர் பதவிக்கோ அரசு நியமனங்களுக்கோ ஆளாக பறக்காமல் மக்கள் நலன் ஒன்றையே முன்னிறுத்தி அரசியல் களத்தில் தூய்மையுடன் செயல் பட்டவர்கள்தானே மார்க்சிஸ்ட்கள்.
           இவர்கள் தானே ஊழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவிற்கு மாற்று வழியைக் காட்டமுடியும். 

நன்றி : 


கருத்துகள் இல்லை: