வியாழன், 16 மே, 2013

மக்களையே சந்திக்காமல் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு பிரதமர் - ஜனநாயகத்தில் இப்படியும் ஒரு கோளாறு....!




              பிரதமர் என்பவர் மக்களவைத்தேர்தலில் போட்டியிட்டு மக்களை சந்தித்து வாக்குகளை பெற்று மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் அவருக்கு மக்களை பற்றிய சிந்தனையும், மக்களைப் பற்றிய அக்கறையும், இன்னும் சொல்லப்போனால் நாளை அடுத்தத் தேர்தலில் மக்களை சந்திக்க வேண்டுமே என்ற மக்களைப் பற்றிய அச்சமும் இருக்கும். பிரதமரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறைதான் உண்மையான ஜனநாயகம் ஆகும். அப்போது தான் பிரதமரின் திட்டங்களும், செயல்பாடுகளும் மக்களைச் சார்ந்ததாக இருக்கும்.
         ஆனால் நம் நாட்டு பிரதமரோ, மக்களை சந்திக்காமல் - மக்களின் தயவு இல்லாமல் - மக்களின் ஓட்டுக்களை பெறாமல், சட்டமன்ற உறுப்பினர்களால் - அதுவும் அவருக்கு சம்பந்தமில்லாத மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டு, ''நேர் வழியில்'' வராமல், ''பின்பக்க வழியில்'' வந்து பிரதமாராக பொறுப்பேற்று கொள்வதால், மக்களைப் பற்றிய உண்மையான சிந்தனையோ, அக்கறையோ அவருக்கு கிடையாது என்பது அவரது நடவடிக்கைகளிலிருந்தும், செயல்பாடுகளிலிருந்தும், அரசை நடத்தும் விதங்களிலிருந்தும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். இது தான் நம் ஜனநாயகத்தில் உள்ள கோளாறு.
         யார் இந்த நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர அவரை முன்மொழியும் அமெரிக்க ஏகாதிபத்தியமோ, இந்திய-வெளிநாட்டு பெருமுதலாளிகளோ அல்லது அவரை வழிமொழியும் சட்டமன்ற உறுப்பினர்களோ அல்ல என்பதை இந்திய மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வரும்.

கருத்துகள் இல்லை: