ஞாயிறு, 6 ஜனவரி, 2013

புத்தகம் பேசுது -திவாலாகும் நாடு தீர்மானிக்கும் சக்தி ஆவது எப்படி?

             ‘‘முகத்திரை கிழியும் சுதந்திரச்சந்தை முதலாளித்துவம்” என்கிற துணைத் தலைப்பையும் சேர்த்து நூல் தலைப்பைப் பார்த்ததும் உடன் ஒருவர் ஊகித்துவிட முடியும் - ‘இது இன்றையப் பொருளாதார நெருக்கடிகள்’ குறித்து ஆழமாக அலசும் நூல். அந்த யூகம் சரியானதே. பூலோக சொர்க்கம் அமெரிக்கா என்கிற மாயையை கூர்மையாகக் கிழித்தெறியும் நூல் இது. இன்று உலகம் சந்திக்கும் சகல நோய்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மூலமாய் இருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் குரூரச் செயல்பாடுகளைத் தோலுரிக்கிறது இந்நூல். ‘புதிர் நிலையில் அமெரிக்கப் பொருளாதாரம்’ என்கிற முதல் கட்டுரை தொடங்கி - ‘மொத்தமாக மீறப்பட்ட சமூக ஒப்பந்தம் : பென்ஷன் பெருங்கொள்ளை’ முடிய 27 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. 2008 முதல் 2011 வரை இன்சூரன்ஸ் ஒர்க்கர் மாத இதழில் எழுதப் பட்ட 26 கட்டுரைகளும் 2003 மார்ச்சில் எழுதிய ஒரு கட்டுரையும் - அத்துடன் முதல் கட்டுரையும் சேர்ந்தது இந்நூல். “AIIEA போன்ற தொழிற்சங்கத்தில் ஐம்பதாண்டு காலமாக முன்னணிப் பாத்திரம் வகித்ததன் பயனாக அவருக்கு (தோழர். என். எம். சுந்தரத்துக்கு) கிடைத்திருக்கும் அனுபவத்தினையும் பக்குவத்தினையும் இந்நூல் வெளிப்படுத்துவதாக உள்ளது.” என்ற அமானுல்லா கான் கூற்று மிகையன்று.
         இ.எம்.ஜோசப்பின் மொழியாக்கம் நன்று. வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜெர்னல், பைனான் சியல் டைம்ஸ் ஆப் லண்டன், கம்யூனி கேஷன்ஸ் நியூஸ் அப்டேட், எக்னா மிக்ஸ் ஏடு, டைம் மேகசீன், மணி மார்னிங், நீயூஸ் வீக், ஃபிலடெல்லோ மிரர்,   இப்படி டஜனுக்கும் மேற்பட்ட ஏடுகள், பால்க்ருக்மேன், தாமஸ் ஃப்ரீட்மேன், ஹைமன் மின்ஸ்கி, க்ரீன்ஸ்பேன், ஸ்டீபன் ப்ரூவியல், ஜோசப் ஸ்ட்க் லிட்ஸ்,அஷோக் பர்தன், டிவைட் ஜாஃபீ, ஹெர்பெர்ட் ஹூவர், ஜெப்ரி சாக்ஸ்,சைமன் ஜான்சன், ராபர்ட் பி ஸ்டின்னாட், ஜான் ப்ரோதஸ், ஜுவான் சமாவியா , ஜார்ஜ் ஹாங்க் உட்பட பலரின் கூர்மையான விவாதங்கள், மைக் ஸ்திடேஸ், ராபர்ட் ஜேஷில்லர்,லிண்டா பிளைம்ஸ், டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் உட்பட பல பொருளாதார நிபுணர்கள் எழுதிய பல ஆழமான பொருளாதார நூல்கள் - இவற்றின் சாற்றைப் பிழிந்து இந்திய அனுபவத்தில் குழைத்துத்தந்துள்ளார் நூலாசிரியர். “.....இவ்வளவு பெரும் கடன் உள்ள வேறு எந்த ஒரு நாடும் இந்நிலையில் திவாலாகிவிட்டது என அறிவிக்கப் பட்டிருக்கும்.” “ அமெரிக்க மக்களுக்கு செலவழிப்பது என்பது போதைப் பழக்கமாக மாறிவிட்டது. அதீத நுகர்விலும், கடன் வாங்குவதிலும் அவர்கள் ஊறித் திளைத்து வருகின்றனர்.” இப்படி போகிற போக்கில் புழுதிவாரித் தூற்றவில்லை. இதனை ஆதாரங்களுடன் நிறுவி இருக்கிறார். பன்னாட்டு நிறுவனங்களும் ஊழல்களும் முறைகேடுகளும் எப்படி பின்னிப் பிணைந்துள்ளன என்பதை படம் பிடித்துக் காட்டுகிறார். இந்தியாவை கபளீகரம் செய்ய அவர்களைத்தாம் வெற்றிலை பாக்கு வைத்து மன்மோகன் சிங் அரசு அழைக்கிறது என்பதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார்.
        ‘கடனே மிக மோசமான வறுமை’ என்று தாமஸ் ஃபுல்லர் எழுதினார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!  ஏழை நாடுகளும் வளர்ச்சியடையாத நாடுகளும் கடன் வாங்கிய போது, அவர்களுக்கு விதிக்கப்பட்ட குருதியை உறிஞ்சும் நிபந்தனைகள், அவர்கள் மீது மேலும் விலங்குகளைப் பூட்டியது.” இதனை நூல் நெடுக விவரிக்கிறார். திவாலாகும் நிலையிலுள்ள நாடு உலகில் மிகப்பெரிய கடன்சுமையுள்ள நாடு அமெரிக்கா ; ஆனால், அந்த நாடு உலகை மிரட்டுகிறது, பணியவைக்கிறது, மூன்றாம் உலக நாடுகளை கொள்ளையடிக்கிறது, சூறையாடுகிறது, யுத்தங்களை ஏவுகிறது, இத்தனைக்கும் பிறகும் ஜனநாயக வேடம் போடுகிறது. உலக ரட்சகன் என நம்ப வைக்க நாடகமாடுகிறது. 
         இந்த நிதிமூலதன அரசியலை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “அவன் ஏழை என்றால் அழுதாலும் விடமாட்டார்கள் ; கொடுங்கோன்மையின் துணை வடிவங்கள் அனைத்தும் அவன் மீது பாய்ந்துவிடும். மற்றவர்களுக்கு பாதுகாப்பானது அனைத்தும் அவனுக்கு எதிரியாகிவிடும். ” என்கிற ஆலிவர் கோல்ட் ஸ்மித்தின் மேற்கோளுக்கு சரியான எடுத்துக்காட்டாக இன்றைய நிதிமூலதனம் குறிப்பாக அமெரிக்கா செயல்படுவதை தக்க ஆதாரங்களோடு போட்டு உடைக்கிறார். அமெரிக்காவின் ராணுவவலிமையும், அரசியல் வலிமையும்; அதன் சுமை முழுவதையும், வலி முழுவதையும், நெருக்கடி முழுவதையும் வளரும் நாடுகள் தோள் மீது ஏற்றிவிட கருவியாகிறது. கடன்கள், ஆலோசனைகள், மிரட்டல்கள், சதிகள், வஞ்சகம், அரசியல் நாடகங்கள் என பலவகைகளில் தன் மேலாண்மையையும் சுமையையும் வளரும் நாடுகள் ஏற்கச் செய்வதை மிகநுட்பமாக- மிக வலுவாக இந்நூல் பதிவு செய்கிறது. எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டது எப்படி? அதனை அமெரிக்கா எப்படி தன் நலனை மட்டுமே முன்னிறுத்தி அணுகியது? பயங்கரவாதம் எப்படி யாரால் உருவாக்கப்பட்டது? எப்படி ஏகாதிபத்தியத்தால் பயன்படுத்தப்படுகிறது? 1929 க்கு பிறகு முதலாளித்துவம் மீண்டும் மீண்டும் நெருக்கடியில் சிக்குவது ஏன்? இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் வேர் எங்குள்ளது? அது புதை சகதியில் மூழ்கும் போதும் மற்றவர்கள் தலைமுடியைக் கெட்டியாகப் பிடித்து இழுத்துக் கொண்டே மூழ்குவது ஏன்? எப்படி? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தது மாதிரி இந்நூல் பதில் தருகிறது.
        “நாம் அனைவரும் ஒரே படகில் இருக்கிறோம்” என்ற பால் ராப்சன் பாடல் வரிகளையும்; ஜான் ஸ்டீன்பெக் எழுதிய ‘ சீற்றத்தின் திராட்சைகள்’ என்ற நாவலையும் மிகப் பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ளது நூலுக்கு வலிமை சேர்க்கிறது. சுவையாகவும் ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அமானுல்லா கான் அணிந்துரையில் கூறியுள்ளது போல, “தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் மட்டுமல்லாது , தொழிலாளி வர்க்கம் வாழ்வதற்கு ஒரு சிறந்த வாழ்விடமாக இந்தியாவை மாற்றப் போராடும் அனைவரும் கற்றுப் பயன் பெற வேண்டிய நூல்.” ஆம். இதில் ஐயமே இல்லை. ஏற்கெனவே இந்நூலாசிரியர் எழுதிய ‘ நிதி மூலதனச் சூறாவளி’ , ‘ வளர்ச்சிக்கு எதிரான அரசியல்’ என்கிற நூல்களின் தொடர்ச்சியே இந்நூல். இவை அனைத்தும் ஏகாதிபத்திய பொருளாதாரத்தை , அரசியலை , மக்களின் துன்ப துயரங்களை உரக்கப் பேசுகின்றன. சோஷலிசமே மாற்று என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. வில்லனை வலுவாக சித்தரித்திருக்கிற இந்நூல், கதாநாயகனையும் மாற்றுப் பாதையையும் இன்னும் வலுவாகச் சொல்லி இருந்தால் இந்த ஆயுதம் மேலும் கூர்மையுடையதாகி இலக்கை தப்பாது தாக்கி அழிக்கும் வல்லமையை தொழிலாளி வர்க்கத்திற்கு அளித்திடும். அடுத்த நூலில் அதனை எதிர்பார்ப்போம்.
நூல் மதிப்புரை : 
சு.பொ.அகத்தியலிங்கம்
தகர் நிலையில் உலக நிதிமூலதனம் 
ஆசிரியர் : என்.எம்.சுந்தரம்,
தமிழில் : இ.எம்.ஜோசப்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை,
                    சென்னை - 600 018. பக் :338, விலை : ரூ.200/-

கருத்துகள் இல்லை: