புதன், 2 ஜனவரி, 2013

திமுக முயன்றிருந்தால் முடிந்திருக்கும்...!

தோழர். ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
   

         காங்கிரஸ் மற்றும் பாஜக தலை மையிலான மத்திய கூட்டணி அரசுகளில் திமுக மாறி மாறி அங்கம் வகித்து வருகிறது. ஆனால், தமிழக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசின் அங்கம் என்ற முறையில் திமுக உரியமுறையில் தலையிடுவதில்லை. மக்களை பாதிக்கக் கூடிய பல்வேறு முடிவுகளை திமுகவும் அங்கம் வகிக்கும் மத்திய அரசுகள் எடுக்கும் போது, அதை எதிர்ப்பதுபோல திமுக அறிக்கைவிடும். அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, விலைவாசி உயர்வுக்கு காரண மாக உள்ள ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி, மானியங்கள் வெட்டு என பல்வேறு பிரச்சனைகளில் திமுக முதலில் எதிர்ப்பு காட்டுவதும், ஆனால் அரசில் அகலாது அங்கம் வகித்து அந்த முயற்சிகளையெல்லாம் மறைமுகமாக ஆதரிப்பதும் அந்தக் கட்சி பின்பற்றி வரும் அணுகுமுறையாக உள்ளது. தற்போது தமிழக மக்களின் பிரச்சனைகளாக முன்னுக்கு வந்துள்ள காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடுவது, கேபிள் டிவி பிரச்சனை, மக்களை வாட்டி வதைக்கும் மின்வெட்டு ஆகிய பிரச்சனைகளில் மத்தியஅரசின் அணுகுமுறை தமிழக மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது மட்டுமல்ல, பாதகமாக இருக்கிறது என்பதே உண்மை.
            மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் திமுக இந்தப் பிரச்சனைகளில் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நிர்ப்பந்தம் செய்யவில்லை. மாறாக, மவுனம் காக்கிறது. அனுசரித்துப் போகிறது என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்து. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திமுக தலைவர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்புடையதாக இல்லை.தமிழகத்து மக்களை பாதிக்கக்கூடிய பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மத்திய அரசினுடைய தலையீடு போதுமானதல்ல என்பதோடு, பாதகமாக இருக்கிறது. மத்திய அரசில் பங்கேற்றிருக்கும் திமுக தலைமை தமிழகத்து மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில் போதுமான அளவுக்கு தலையீடு செய்யவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக தலைவரின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை.நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக அமைந்தது. எனினும், இத்தீர்ப்பு வெளியாகி பல ஆண்டுகள் ஆனாலும் மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இதற்கு மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக கடந்த காலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தன என்பதை அந்தக் கட்சிதான் கூற வேண்டும். தற்போது மாநில அதி முக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதி மன்றமே நடுவர் மன்ற தீர்ப்பை அரசித ழில் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து மத்திய நீர் வளத்துறைச் செயலாளர் டிசம்பர் மாத இறுதிக்குள் நடுவர் மன்றத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படும் என்று டிசம்பர் 7 ஆம் தேதி அறிவித்தார். ஆனால், ஜனவரி துவங்கிவிட்டது இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தகைய முக்கியப் பிரச்சனையில் நாங்களும் மத்திய அரசாங்கத்தை வலியுறுத்திவிட்டோம், எங்களை யாரும் குறை சொல்லக்கூடாது என்று திமுக தலைவர் கூறுவது ஏற்க முடியாதது. எதிர்க்கட்சிகள் வலியுறுத்துவது என்பது வேறு, ஆனால் ஆளும் கூட்டணியிலேயே இருக்கும் திமுக தலைமை மேற்கண்ட பிரச்சனைக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்கவில்லை என்பதைத் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியது. நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டுமென்ற பிரச்சனை உள்ளிட்டு காவிரி நதிநீர் பிரச்சனையில் மாநில அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரதமரை சந்திக்க மாநில அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்தியது. 
         இன்றும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. காவிரி டெல்டா பிரதேசத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் குறுவை சாகுபடியே செய்யப்படவில்லை. தற்பொழுது சம்பா பயிர் கருகிவிட்டது. இச்சூழலில் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதி விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ளது. பேரிடர் பாதிப்பு சட்டப்படி டெல்டா பிரதேசத்தையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்களை யும் மத்திய அரசினுடைய நிபுணர் குழு பார்வையிட்டு, பாதிப்பு எவ்வளவு என்று நிர்ணயித்து மத்திய அரசு நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். மத்திய அரசு அறிவிக்கும் நிவாரணத் தொகையோடு மாநில அரசும் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து, தற்கொலை செய்து கொண்ட விவசாய குடும்பங்கள் உள்ளிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் அளிக்க வேண்டும். மத்திய அரசையும் மாநில அரசையும் வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கமும் போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.
       மத்திய அரசில் இடம் பெற்றுள்ள திமுக இப்பிரச்சனையில் தலையிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தலையிட வேண்டும் என்பதன் பொருள், தங்கள் கருத்தை பதிவு செய்வது என்பதல்ல, ஆளும் கூட்டணியின் அங்கம் என்கிற முறையில் இதை நிறைவேற்றும் முறையில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதுதான். தமிழக மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கருத்தை கூறிவிட்டதாக கூறும் திமுக, மத்திய அமைச்சரவையில் பொறுப்புகளை பெறுவதில், சிக்கல்கள் வந்தபோது, அதிலிருந்து மீள்வதில் காட்டிய அக்கறையை, அணுகுமுறையை தமிழக மக்கள் நன்கறிவார்கள். 
           அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதி என்பதைப் பொறுத்தமட்டில் திமுக அரசாங்கம் தானே அதை முதலில் முன்மொழிந்தது. இப்போது அதிமுக அரசாங்கம் அரசு கேபிள் நிறுவனத்திற்கு அனுமதிகோரி அது மத்திய அரசால் வழங்கப்படாமல் இருக்கிறது. திமுக தலைவர் இதற்கு காரணம் டிராய்-ன் பரிந்துரைதான் என்கிறார். பரிந்துரை, ஆணை, தீர்ப்பு இவற்றிற்கெல்லாம் வேறுபாடு அறியாதவரல்ல திமுக தலைவர். ஒரு பரிந்துரையை ஏற்பதற்கும் மறுப்பதற்கும் அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என்கிறாரா?. எனவே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான பிரச்சனையில் எதிர்ப்பது போல் போக்கு காட்டி, உண்மையில் எதிர்க்க வேண்டிய மன்றத்தில் ஆதரித்து வாக்களித்ததைப் போல வாய்வார்த்தையில் அரசு கேபிள் நிறுவனத்திற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நானும் தான் கோரிக்கை வைத்தேன் என்று கூறிவிட்டு, டிராய்-ன் பரிந்துரையை காரணம் காட்டி திமுகவின் நிலைபாட்டை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
            நடுநிலையோடு சிந்திக்கிற யாரும் திமுக தலைவரின் இந்த வாதத்தை ஏற்க மாட்டார்கள். டிராய் என்பதெல்லாம் மத்திய அரசை விட அதிகாரமிக்கதல்ல என்பதும், மத்தியஅரசு நினைத்தால் இதில் மாற்றம் செய்ய முடியும் என்பதும் பெரிய ரகசியம் அல்ல. கடந்த காலத்தில் அப்படி நடந்தும் இருக்கிறது. இது மட்டுமல்ல, தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத மின்வெட்டிற்கு திமுக, அதிமுக, மத்திய அரசு அனைவருமே காரணம். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் உடனடி தீர்வாக மின் உற்பத்திக்கான டீசலுக்கு மானியம் வழங்குவது, இதர மாநிலங்களில் உள்ள உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு பெறுவது ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்து வருகிறது. வட மாநிலங்களில் உபரியாக உள்ள மின்சாரத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு மின் பாதை உரிய வலுவற்றதாக உள்ளது என்கிற வாதத்தை மத்திய அரசாங்கம் முன்வைக்கிறது. இந்த வாதம் மத்திய அரசாங்கத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகும். உபரி மின்சாரத்தை அருகில் உள்ள வேறு மாநிலங்களுக்கு அளித்துவிட்டு, அந்த மாநிலங்களிலிருந்து தமிழகம் மின்சாரம் பெறுவதற்கும் மத்திய தொகுப்புக்கு தமிழகத்திலிருந்து செல்லும் மின்சாரத்தை தமிழகமே பயன்படுத்திக் கொண்டு வேறு மாநிலங்களிலிருந்து கிடைக்கும் உபரி மின்சாரத்தை மத்தியத் தொகுப்பிலிருந்து பெற வேண்டிய மாநிலங்களுக்கு கொடுப்பதன் மூலம் தமிழக மின்வெட்டை போக்குவதற்கு மத்திய அரசாங்கம் உதவ முடியாதா?. இதைச் செய்ய மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்த ஓரவஞ்சனையான அணுகுமுறையை ஆளும் கூட்டணியில் அங்கம் என்கிற முறையில் முடிவுக்குக் கொண்டு வர திமுக என்றேனும் முயற்சித்ததுண்டா?. இப்படி தமிழக மக்களின் நலனை வலியுறுத்திட திமுக தலைமை கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண் டும், மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு போதுமான அளவுக்கு திமுக தலைமை முயற்சி செய்யாததை விமர்சித்தால், பிரச்சனையை திசை திருப்புவது, தமிழக மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு உதவாது. மீண்டும் சொல்கிறோம், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடவும், அரசு கேபிளுக்கு உரிமம் பெறவும், தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் பெறவும் திமுக தலைமை முயற்சி எடுத்தால் முடியும். அத்தகைய முயற்சி எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, திமுக தலைமையை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

1 கருத்து:

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்