வெள்ளி, 16 நவம்பர், 2012

மூடப்பட்ட பல்கலைக்கழகம் - வேடிக்கைப்பார்க்கும் கழக அரசு.....!

           தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதாலேயே நந்தனுக்கு ஆலயத்தில் நுழைய அனுமதி மறுத்த சிதம்பரத்தில், சமூகத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களின் இளைஞர்கள் கல்லூரியில் - பல்கலைக்கழகத்தில் நுழைந்து படிக்கவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம் தான் அண்ணாமலை பல்கலைக்கழகம் என்பதை நாடறியும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், அன்றைய ஆட்சியாளர்களோடு நெருக்கமானவர்களும், உயர்சாதி குடும்பத்தை சேர்ந்தவர்களும் மட்டுமே உயர்கல்விக்காக கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகத்திற்கும் போகமுடியும் என்ற காலகட்டத்தில், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்களால் சாதாரண மக்களின் உயர்கல்விக்காக 1920 - ஆம் ஆண்டு மீனாட்சி கல்லூரி தொடங்கப்பட்டு, பின்னர் 1928 - ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.
            ஆரம்பத்திலிருந்தே இப்பல்கலைக்கழகத்தில் அலுவலக ஊழியர்களும், பேராசிரியர்களும் பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பணியிலமர்த்தப்படுவதாலும், அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த பல்கலைக்கழகத்தில் குறைந்த செலவில் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதாலும் வசதிபடித்தவர்கள் மற்றும் உயர்சாதியினர்கள் மத்தியில் பல்கலைக்கழகத்தைப் பற்றிய ஏளனங்களும், கேளிக்கைகளும், உண்மையல்லாத தவறான கருத்துகளும் மக்கள் மத்தியில் தூவப்பட்டன என்பது இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை இந்தக் கூட்டத்தினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையே காட்டுகிறது.
         இப்படியாக பல ஆண்டு காலமாக எதிர்நீச்சல் போட்டு வளர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகமானது, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மறைவிற்கு பிறகு சிறிதளவும், ராஜா முத்தையா செட்டியார் மறைவிற்கு பிறகு முழுவதுமாகவும், நிர்வாக திறமையின்மை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி வணிகமயம், ஊழல் மற்றும்  நிதி முறைகேடு போன்ற காரணங்களால் இன்றைக்கு சீரழிந்து போயிருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. இலஞ்சமாக பணத்தைப் பெற்றுக்கொண்டு தேவைக்கு அதிகமான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பணியிலமர்த்தியதும், 7000 கோடி ரூபாய் அளவிலான நிதி முறைகேடுகளும் தான் இந்த பல்கலைக்கழகம் சீரழிந்துப் போனதற்கு முக்கிய காரணங்களாகும்.
            இந்த பிரச்சனைகளிலிருந்து மீள்வது எப்படி என்ற எந்த விதமான ஆய்வும் செய்யாமலும், 7000 கோடி அளவிலான நிதி முறைகேடுகளை விசாரணை செய்யாமலும் பல்கலைக்கழக நிர்வாகம் முன்னறிவிப்பு ஏதுமின்றி திடுதிப்பென சென்ற வாரம்  காலவ்ரையரையன்றி மூடிவிட்டது என்பது அதிர்ச்சியளிக்கக்கூட்டியது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கது.  அதை விட பிரச்சனைகளுக்கு தீர்வாக பணியில் இருக்கின்ற  ஆசிரியர்களையும், ஊழியர்களையும் பழிவாங்குவது என்பது முறையாகாது. நேர்மையானதுமல்ல. பழம்பெருமை வாய்ந்த பல்கலைக்கழகம், பல இலட்சம் பட்டதாரிகளையும், கல்வியாளர்களையும், ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கித் தந்த பல்கலைக்கழகம், ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கொண்ட பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்திலேயே நேரடியாக பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்களையும், இலட்சக்கணக்கான இளைஞர்கள், வயதானவர்கள், வெளியிடங்களில் பணியிலிருப்பவர்கள், குடும்பத்தலைவிகள், வசதியில்லாதவர்கள் என வித்தியாசமில்லாமல் தொலைதூரக்கல்வி பயில்பவர்களையும் வாழ்க்கையில் - சமூகத்தில் உயர்த்தி முன்னேற்றும் ஒரு உன்னதமான பல்கலைக்கழகம் மூடப்பட்டது என்பது அது எந்த ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இந்த பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதோ அந்தப் பணியில் தோற்றுவிட்டதாக பொருளாகிவிடும்.
           ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வயிற்றில் அடிக்கின்ற, மாணவ - மாணவிகளின் எதிர்காலக் கனவுகளில் மண்ணை வாரி போடுகின்ற பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை துளிக்கூட கண்டிக்காமல், கொஞ்சம் கூட சலனமே இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருப்பது அதைவிட கொடுமையானது. கடுமையாக கண்டிக்கத் தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல்கலைக்கழகத்தை திறக்கத் கோரியும், வேலை உத்திரவாதம் வற்புறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் அனைத்துக் கட்சி போராட்டக்குழு சிதம்பரத்தில் தொடர்ந்து போராடி வருகிறது.

1 கருத்து:

ப.கந்தசாமி சொன்னது…

இப்போது போராட்டம் நடத்தும் கட்சிகள் பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடந்தபோது ஏன் தட்டிக்
கேட்கவில்லை?