ஞாயிறு, 22 ஜனவரி, 2012

பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்? - மத்திய நிதியமைச்சருக்கு தொழிற்சங்கங்கள் ஆலோசனை...!

                                                                                                               
பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும்?  - மத்திய நிதியமைச்சருக்கு  தொழிற்சங்கங்கள் ஆலோசனை
              
                 தொடர்ந்து மிகக் கடுமையான அளவிலேயே நீடித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் விதத்திலும், தீவிரமடைந்து வரும் வேலையின்மை பிரச்சனை மற்றும் பெருமளவில் நிகழ்ந்துவரும் வேலைப் பறிப்பை தடுத்துநிறுத்தும் விதத்திலும், உழைக்கும் மக்களுக்கான சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கும் விதத்திலும், கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர் வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளன.
                         இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சரிடம், பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைகள் அடங்கிய மனு ஒன்றை சிஐடியு, ஏஐடியுசி, பிஎம்எஸ், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐயு டியுசி, ஏஐசிசிடியு, யுடியுசி, டியுசிசி, எல்பிஎப் மற்றும் சேவா ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் அளித்துள்ளன.

இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விவரங் கள் வருமாறு:-

                                     இன்றைக்கு நிலவும் உலகப் பொருளாதாரச் சூழலில் நமது நாட்டின் பொருளாதார நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. நிதி அமைச்சகம் எங்களுக்கு அனுப்பிய இந்திய பொருளாதாரத்தின் நிலைமை குறித்த குறிப்பில் அது பிரதிபலிக்கவில்லை என்றே கருதுகிறோம். மிகக் கடுமையாக நீடித்துவரும் விவசாய நெருக்கடியால் அதிகரித்துள்ள துயரத்திற்கு இடையே, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் அளவிற்கு நிலைமையை மோசமாக் கியுள்ள பணவீக்கத்தின் விகிதம் ஏற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது; மிகப்பெரும் அளவிற்கு வேலைகள் பறிக்கப்பட்டுள்ளன; வேலையின்மைக் கொடுமை நாளுக்குநாள் தீவிரமடைந்து வரு கிறது. இந்த அடிப்படையான பிரச்சனைகள் குறித்து நிதியமைச்சகத்தின் அறிக்கையில் மீண்டும் முழுமையான கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றே கருதுகிறோம்.
                    எதிர்வரும் பட்ஜெட்டானது வறுமை, வேலையின்மை, சமூகக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான பிரச்சனை களுக்கு தீர்வுகாணும் விதத்தில் மக்கள் சார்ந்த பட்ஜெட்டாக இருக்கவேண்டும். அந்த அடிப்படையில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் சில குறிப்பிட்ட ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

* மேலும் மேலும் தொடர் விளைவாக அதிகரித்துவரும் விலைவாசி உயர்வை தடுத்துநிறுத்தவும், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்தவும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான முன்பேர ஊக வணிகத்தை தடைசெய்ய வேண்டும்; அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்கி, அதை வலுப்படுத்த வேண்டும்; பணவீக்கத்தை தடுக்கும் நடவடிக்கை களில் ஒன்றாக பெட்ரோலியப் பொருள்கள் மீதான வரிகள், தீர்வைகள் போன்றவற்றை முறைப்படுத்த வேண்டும்.

* வேலையின்மை பிரச்சனை மேலும் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், பெரு மளவில் வேலைகள் பறிக்கப்பட்டுவரும் நிலையில், அரசுத் துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்கள், இந்திய தொழிலாளர் மாநாட்டின் 43 வது அமர்வு பரிந்துரைத்ததின் படி வேலைக்கு ஆள் எடுப்பதற்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். பெரும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான ஊக்க நிதிகளும், அந்நிறுவனங்கள் தொழிலா ளர்களை வேலைப்பறித்து வீட்டிற்கு அனுப்பு வது, விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வு கொடுப்பது, வேலைகளையே முடக்கி வைப்பது, கதவடைப்பு செய்வது, கூலியை சரமாரியாக வெட்டுவது போன்ற நடவடிக்கை களில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனைக ளுடனேயே அளிக்கப்பட வேண்டும்; மேலும் இந்நிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்.

* சத்துணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், கல்வி தொண்டர்கள், கவுரவ ஆசிரி யர்கள், கல்விப்பணியாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் மக்கள் ஈடு பட்டு வருகிற துறைகள் ஒழுங்குப்படுத்தப் பட வேண்டும்; சமூக சுகாதார நடவடிக்கை களில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் உட்பட அனைவரும் குறைந்தபட்சக் கூலி மற்றும் சமூகப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட வேண்டும். பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் படி ஐசிடிஎஸ் திட் டத்தை அனைத்துக் குழந்தைகளுக்குமான தாக விரிவுபடுத்திட வேண்டும்.

* மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டத்தின் வாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில் இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு ஏகமனதாக பரிந்துரைத்ததின் படி உத்தர வாதமான சட்டப் பூர்வமான கூலியுடன் கூடிய வேலை குறைந்த பட்சம் ஆண்டு ஒன் றுக்கு 200 நாட்கள் வழங் கப்படவேண்டும்.

* வறுமைக்கோடு என்பதன் அடிப்படை யில் விதிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப் பாடுகளையும் நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்; குறிப்பாக முறைசாராத் தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2008ன் கீழ் அமையப்பட்டுள்ள திட் டங்களில் பலனடைவதற்கான தகுதி யைப் பொறுத்தவரை, வறுமைக்கோடு என்ற பெயரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும்; மேலும், இந்தியத் தொழி லாளர் மாநாட்டின் 43 வது அமர்வு மற்றும் தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு ஆகியவை அளித்த பரிந்துரை யின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள காண்ட்ராக்ட் / தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 43.5 கோடி முறைசாராத் தொழி லாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங் கிட, தேசிய முறைசாராத் தொழிலா ளர் நிதி யத்திற்கு போதிய நிதியினை இந்தப் பட் ஜெட்டில் ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

* பொதுச் சொத்துக்களை உருவாக்கிட வும், கவுரவமான வேலை வாய்ப்புகளை உரு வாக்கிடவும், அரசின் முதலீடு அவசியம் அதி கரிக்கப்பட வேண்டும். இதற்காக பொதுத் துறை நிறுவனங்கள் அவசியம் வலுப்படுத்தப் பட வேண்டும்; விரிவுபடுத்தப்பட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் தனியாருக்கு தாரைவார்க்கப்படுவது உட னடியாக தடுத்துநிறுத்தப்பட வேண்டும்; இந்த நிறுவனங்களின் மிகப்பெரும் இருப்புத் தொகையும் உபரியுமாக சேர்த்து ரூ.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக உள்ளது; இந்தத் தொகை பலவீனமான மத்திய பொதுத் துறை நிறுவனங்களை மறுசீரமைக்கவும், இதர மத்திய பொதுத் துறை நிறுவனங்களை நவீன மயமாக்கவும், விரிவுபடுத்தப்பட வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங் கள் சராசரி யாக 0.75:1 என்ற அளவிலேயே பங்குக்கடன் கள் வைத்திருக்கின்றன; ஆனால் தனியார் நிறுவனங்கள் 2.3:1 என்ற அளவில் பொதுத் துறை நிறுவனங்களை விட மிகக் அதிகமான அளவிற்கு கடன் வைத் திருக்கின்றன. எனவே பொதுத்துறை நிறுவனங்கள் வங்கி களிடமிருந்து மேலும் கூடுதலாக கடன் பெறுவதற்கும், பங்குகளை விற்பதன் மூலம் நிதியாதாரத்திற்கு திரட்டு வதற்கு பதிலாக வங்கிக் கடன்கள் மூலமாக நிதியாதாரத்தை திரட்டுவதற்கு அனுமதிக்கப் பட வேண்டும்.

* சமீபத்திய உலகப் பொருளாதார நெருக் கடி காலத்திலும்கூட சோதனைகளை எதிர் கொண்டு உறுதியுடன் நின்ற வங்கிகள் மற் றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உள்ளடங்கிய நிதித்துறை மேலும் ஊக்கத்துடன் செய லாற்ற அனுமதிக்கப்பட வேண்டும், விரிவாக் கப்படவேண்டும், அவற்றின் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும், அவற்றின் பொதுத்துறை குணாம் சத்தை பல வீனப்படுத்தும் விதத்திலும் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்குலைவு நடவடிக்கை களை திணிப்பதற்குப் பதிலாக அவற்றை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வங்கி, இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் சீர்திருத்தத்திற்கான முயற்சிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கிகளைத் துவக்க அனு மதிக்கப்படக்கூடாது.

* பாரம்பரியத் தொழில்துறைகளான சணல், ஜவுளி, தோட்டக்கலை, கைத்தறி மற் றும் கயிறு போன்றவை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளித்து முன்னேற பட் ஜெட்டில் நிதி ஆதாரம் ஒதுக்கப்பட வேண்டும்.

* ஆரம்பக்கல்விக்கு பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவேண்டும்; குறிப்பாக, குழந் தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மிகச்சிறந்த ஆயுதமாக வந்துள்ள கல்வி உரிமைச்சட்டத்தை முழுமையாக அமல் படுத்தவேண்டியதன் பின்னணியில் இந்த ஒதுக்கீடு அவசியம்.

* மூலப்பொருட்கள் மற்றும் தாதுவளங் களின் ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட வேண் டும்; இந்தத் துறைகளில் உள்நாட்டில் வேலைவாய்ப்பை தொடர்ச்சியாக உருவாக் கும் விதத்திலும், இப்பொருட்களின் மதிப் பினை மேம்படுத்தும் விதத்திலும் அரசு நேரடியாகவோ, அல்லது பொருத்தமான நிதி நிர்வாக முறையின் அடிப்படையிலோ ஏற்று மதியை கறாரான முறையில் கண்காணிக்க வேண்டும். இன்னும் குறிப்பாக, இரும்புத்தாது ஏற்றுமதி உடனடியாக தடைசெய்யப்பட வேண்டும். உள்நாட்டில் உள்ள இரும்பு எஃகு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இரும்புத்தாது ஒதுக்கீடு செய் யப்படவேண்டும்.

* இன்றைய நிலையில் நடைமுறையில் உள்ள நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் கணக்கிடும் முறையானது தொழிலாளர் களுக்கு மிகப்பெருமளவில் நிதி இழப்பை ஏற் படுத்தும் விதத்திலேயே உள்ளது. இந்த நடை முறை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். அகவிலைப்படி திருத்தம் செய்வது தற்போது 6 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதை 3 மாதங்களுக்கு ஒரு முறை என மாற்ற வேண்டும்.

* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை தீர்மானிக் கும்போது, அது சமூகப் பாதுகாப்பின் ஒரு பகுதி என்ற முறையிலும், கடுமையான பணவீக்கம் நிலவிக்கொண்டிருக்கிறது என்ற கண்ணோட்டத்திலும் பார்க்கப்பட வேண்டும். 20 ஊழியர்கள் இருந்தால் வருங்கால வைப்புநிதித் திட்டத்திற்குள் (இபிஎப்) சம்பந்தப்பட்ட நிறுவனம் கொண்டுவரப்படும் என்ற வரம்பு, இபிஎப் டிரஸ்டிகளின் மத்திய வாரியம் பரிந்துரைத் ததின்படி 10 ஊழியர்கள் என்ற அளவில் நிர்ணயிக்கப்படவேண்டும். தொழிலாளர் பென்ஷன் திட்டத்தின்கீழ் கிடைக்கும் ஓய்வூதிய பலன்களை அரசாங்கம் தன் னிச்சையாக வெட்டிச்சுருக்கியது. இது மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வரப்படவேண்டும். தொழிலாளர் பென் ஷன் திட்டம் தொடர்ந்து நீடிக்க அரசு மற் றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படவேண்டும்; தொழிலாளர் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்ததின்படி ஒவ்வொரு தொழிலா ளருக்கும் குறைந்தபட்ச நியாயமான ஓய் வூதியம் கிடைக்க வழிசெய்திட வேண்டும். மேலும், சிறப்பு டெபாசிட் திட்டத்தின்கீழ் தொழிலாளர்கள் சேமித்துள்ள தொகைக்கு 9.5 சதவீதம் அளவிற்கு வட்டி விகிதம் உயர்த்தித்தரப்படவேண்டும்.

* அனைவருக்கும் உத்தரவாதமான ஓய் வூதியம் கிடைக்கவேண்டும்.

* அனைத்து வேலைகளும் குறைந்த பட்ச கூலிச் சட்டத்தின்கீழ் அவசியம் கொண்டுவரப்படவேண்டும்; மாதம் ஒன் றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.10 ஆயி ரத்திற்கு குறையாமல் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

* ஊதியம் மற்றும் போனஸ், வருங்கால வைப்புநிதி ஆகியவற்றை பெறுவதற்கான அனைத்து உச்சவரம்புகளும் நீக்கப்பட வேண்டும்; பணிக்கொடையின் அளவு அதி கரிக்கப்படவேண்டும்.

* நிரந்தரத் தன்மைகொண்ட வேலை களை காண்ட்ராக்ட்மயமாக்கக்கூடாது; அவுட்சோர்சிங் என்ற பெயரில் வெளியில் கொடுத்து வாங்குவதும் கூடாது. காண்ட் ராக்ட் எனும் நடைமுறை ஒழிக்கப்படும் வரை, அந்த முறையில் பணியாற்றும் தொழி லாளர்களுக்கான கூலியும் இதர பலன்களும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறு வனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எந்த முறையில் வழங்கப்படுகிறதோ அதே முறையில், அதே விகிதத்தில் வழங்கப் படவேண்டும்.

* வருமானவரி விலக்கிற்கான உச்ச வரம்பு, ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 லட்சமாக உயர்த்தப் படவேண்டும்; மேலும், வீட்டு வசதி, மருத் துவ வசதி மற்றும் கல்வி வசதிகள் போன் றவை வருமானவரி வரம்பிலிருந்து விலக்கப் படவேண்டும்.

* சில்லரை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் நுழைவதை தடைசெய்யவேண் டும். (ஐஎன்என்)



நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவது?

* இறக்குமதி செய்யப்படும் மின் உற்பத்தி சாதனங்கள் மீதான தீர்வை அதிகரிக்க வேண்டும்.

* உள்நாட்டில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலிப் பொருட் களை ஏற்றுமதி செய்யும்போது அவற்றின்மீது இரட்டைவரி விதிக்கப்படவேண்டும்.

* அதிக அளவில் வரி செலுத்துவதற்கு திறன்படைத்த பெரும் பணக்காரப் பிரிவினர் மற்றும் பணக் காரர்கள் மீது வரிவிதிப்பை உறுதிசெய்யும் விதத்திலான ஒரு முற்போக்கான வரி விதிப்புமுறை கொண்டு வரப்படவேண்டும். பெரும் நிறுவன சேவைத் துறைகள், பெரும் வணிகர்கள், மொத்த வியாபாரங்கள், தனியார் மருத்துவமனைகள், தனியார் கல்வி நிறுவனங்கள் போன்றவை பரந்துவிரிந்த மற்றும் கூடுத லான வரிவிதிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும். ஆடம்பரப் பொருட்கள் மீது வரியை அதிகரிக்க வேண்டும். இதற்கு மாறாக, அத்தியாவசியப் பொருட்கள் மீதான மறைமுக வரிகளை பெரு மளவிற்கு குறைக்கவேண்டும். இந்த நிலையில், வரி வருவாயில் 86 சதவீதத்தைப் பூர்த்திசெய்கிற மறைமுக வரிவிதிப்பின்கீழ் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

* தற்போது நடந்துகொண்டிருக்கும் இரும்புத்தாது ஏற்றுமதி மீது ஏற்றுமதித் தீர்வையை அதி கரிக்கவேண்டும்.

* பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரையில் செலுத்தியிருக்கவேண்டிய வரி ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பாக்கி இருக்கிறது. இந்த வரிப்பாக்கி அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே, மேலும்மேலும் குவிந்துகொண்டிருக்கும் வரிப்பாக்கியை வசூ லிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும். இப்படி மிகப்பெரிய அளவிற்கு நடந்துள்ள வரி ஏய்ப்பு மற்றும் பெரும் நிறுவனங்கள் வரி செலுத்துவதில் காட்டப்பட்ட தாராளத்தின் விளைவாக 2009 - 2010ம் நிதியாண்டில் மற்றும் ரூ.2 லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர அனுமதிக்கக்கூடாது.

* இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை வெளிக்கொண்டுவர சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, வரி விதிக்கப்படாத சொர்க்கங்களாகத் திகழும் சில மேலை நாடுகளில் குவிக்கப்பட்டுள்ள கணக்கில் வராத மிகப்பெருமளவிலான பணம் மீட்கப் படவேண்டும். இந்தப் பணம் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு பயன்படுத்தப் படவேண்டும்.

* வங்கிகளில் பெருமளவில் கடன் வாங்கிவிட்டு, திட்டமிட்டே தாங்கள் திவாலாகிவிட்டதாக பொய்க் கணக்குக் காட்டும் பெரும் கார்ப்பரேட் மற்றும் வர்த்தக நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்க வேண்டும். இத்தகைய நிறுவனங்கள் புதிதாக கடன் பெற அனுமதிக்கப்படக்கூடாது.

* நீண்டகால அடிப்படையில் பெறப்படும் மூலதன லாபங்கள் மீதான வரி அறிமுகம் செய்யப்பட வேண்டும்; பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மீது அதிகபட்ச வரி விதிக்கப்படவேண்டும்.

* தகவல் தொழில்நுட்பத்துறை, அவுட்சோர்சிங் துறை, கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் போன்றவை வியாபார நோக்கத்தில் இயங்கும் பட்சத்தில் அவை சேவை வரி வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை: