வியாழன், 1 ஜனவரி, 2015

தேசம் காத்தல் செய்வோம்...! புதிய சபதமேற்போம்...!

                      இன்று புத்தாண்டு... இந்த புதிய ஆண்டில் என்ன தீர்மானத்தை நிறைவேற்றுவது...? புதிதாக என்ன சபதமேற்பது...? புகைப்பவர்களும், குடிப்பவர்களும் போடுகிற வெற்று சபதம் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாய் சபதமேற்போம்.         தேசம் காத்தல் செய்வோம்...!           
               தேசம் என்பது வெறும் மண்ணல்ல... தேசம்... நாடு என்று சொன்னால் நம் பார்வைக்கு அது ஒரு மண்ணாக மட்டும் தான் தெரியும்.  
ஆனால் 
தேசம் என்பது வெறும் மண்ணல்ல... உயிர்...
உயிரும் உணர்வும் கலந்த மனிதம்....    
வேற்றுமையிலும் ஒற்றுமை வளர்த்த மானுடம்....  
தாயாய் சகோதரியாய் துணைவியாய் 
மகளாய் அன்பை ஊட்டிய பெண்மணிகள்...
சேரியும் நகரமும் தந்த குழந்தை செல்வங்கள்...
வீரமும், மானமும், அறிவும், காதலும்...
மக்கள் பசியாற்றும்  உழவும், உழவனும்...
ஆடை, வீடு, பள்ளி, ஆலை, தொழில், சுகாதாரம்,
இயந்திரம், ஆயுதம் என அனைத்தும்
அவை அனைத்தும் தரும் உழைப்பாளியும்...
உழவும், தொழிலும், உழைப்பும், நிர்வாகமும்,
நீரும், நிலமும், காற்றும், வானும், மழையும், 
வயலும், பயிர்களும், ஆறும், ஏரி - குளமும், மணலும், 
கற்பாறையும், குன்றும், மலையும், பூமியும், காடும், 
மரமும்,கடலும், பறவைகளும், விலங்குகளும், 
மீன்களும் ஆன இயற்கையும்...
இயற்கை தரும் தீராத வளங்களும்...
கலை - இலக்கியமும், பண்பாடு - கலாச்சாரமும்,
அறிவியலும், அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளும்...
இரயிலும், பேருந்தும், வானூர்தியும், துறைமுகமும், காப்பீடும், 
வங்கியும், சுரங்கமும், தொலைத்தொடர்பும், குவியும் நிதியும்...
கல்வியும், பள்ளியும், கல்லூரியும், பல்கலைக்கழகமும்,
மருந்தும், மருத்துவமனையும், இராணுவமும்...
மக்கள் குறை தீர்க்கும் நாடாளுமன்றமும், நீதிமன்றமும்,
சுதந்திரமும், ஜனநாயகமும், குடியரசும், 
அரசியல் சாசனமும், நீதியும், சட்டங்களும் ...
ஆகிய இவை அனைத்தும் நம் தேசமே... 
அவை யாவும் நம் சொந்தமே... 
நாமிருக்கும் நம்  நாடு நமதென்பதை முதலில் நாம் அறிவோம்...
உணர்வோம்.... உணர்ந்து செயல்படுவோம்...
மேலே சொன்ன அத்தனை வளங்களையும் பெற்ற 
நம் தேசத்தை அந்நியர்க்கு அள்ளிகொடுத்தல் 
என்ன நீதி...?
தேச நலனுக்கு எதிராக மதத்தின் பேரால் - 
சாதியின் பேரால் தேசத்தையே கூறு போடவும்,
தேச வளங்களை அந்நியர்க்கு அள்ளிக்கொடுத்திடவும்
நாம் அனுமதித்தல் வேடிக்கைப் பார்த்தல் நீதியாகாது.
நம் பாட்டன் பாரதி கற்றுத்தந்த பாடத்தை மறந்திடலாமோ...?
எனவே இந்த புத்தாண்டில் சபதமேற்போம்....!
தேசம் காத்தல் செய்வோம்...! 
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தோழமையே...!        

1 கருத்து:

alapaheerathan சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்