புதன், 7 ஜனவரி, 2015

தொழிற்சங்கத்தின் தேவையை உணர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர்கள்...!

                 
       உலகமயத்தின் இந்திய குழந்தைகளில் ஐ.டி கம்பெனிகளும் ஒன்று. புதுடெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உட்பட நாடு முழுதும் பரவியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் கணினி அறிவியல் (CS) போன்ற பாடங்களை கொண்ட  பி.இ / பி.டெக் என வகைவகையாய் படித்துக் கொண்டிருக்கும் போதே, ''வளாக நேர்காணல்'' - Campus Interview என்ற பெயரில் தனக்கு நேரம் பாராமல் இலாபத்தை ஈட்டிக்கொடுக்க கல்லூரிகளாலும், பல்கலைக்கழகங்களாலும் தயார்செய்யப்பட்ட   ''நவீன அடிமைகளை''  IT Professionals என்ற பெயரில் தேர்ந்தெடுத்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். பெரும்பாலும் ஐ.டி கம்பெனிகள் வெளியூர்களிலிருந்து தான் இது மாதிரியான இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் பெற்றோர்களிடமிருந்து  பிரித்து அழைத்து சென்றுவிடுகிறார்கள். அதற்கும் காரணம் இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையில் சம்பளம் என்றதும் பெற்றோர்களும் தங்களால் சம்பாதிக்க முடியாததை தன் பிள்ளைகள் செய்கிறார்கள் என்ற பிரமிப்புடன் சந்தோஷமாக அனுப்பிவைத்துவிடுகிறார்கள்.
               இன்றைய தனியார் பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்   படிக்கும் போதே இந்த இளைஞர்கள் எண்ணங்களில் ''மல்டி நேஷனல் கம்பெனிகள்'' பற்றியும்,  ''ஐ.டி கம்பெனிகள்'' பற்றியும் கனவையும், இலட்சியத்தையும் மூளைச்சலவை செய்து விதைத்து விடுகிறார்கள். அரசு துறையில் வேலை செய்வது பற்றியே அவர்களின் மனதில் எண்ணம் உருவாகாமல் திசைத்திருப்பி விடுகிறார்கள். அரசுத்துறையை விட அதிக சம்பளம் கிடைக்கும் எனது மட்டுமே சொல்கிறார்களே தவிர,  பணி பாதுகாப்பு இருக்கிறது என்பதையும், 58 அல்லது 60 வயது வரை நிரந்திர வேலைவாய்ப்பு என்பதையும், Provident Fund, Gratuity, Bonus, வகைவகையான விடுப்புகள், அதையும் விரும்பும்போது எடுத்துக்கொள்ளும் உரிமைகள், குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, இன்சூரன்ஸ் பாதுகாப்பு, பென்ஷன், பணிக்காலத்தில் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரருக்கு வேலைவாய்ப்பு என போராடிப்பெறப்பட்ட பல்வேறு உரிமைகள் அரசு துறைகளில் வேலை செய்வதால் மட்டுமே கிடைக்கும் என்பதை திட்டமிட்டே மறைத்து விடுகின்றனர்.  மல்டி நேஷனல் கம்பெனிகளில் - ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்வதால் அபரிதமான சம்பளம், துரிதமான பதவி உயர்வு, வேலைக்கு ஏற்றார் போல் அவ்வப்போது சம்பள உயர்வு, வெளிநாட்டு பயணம், வெளிநாட்டு பணி போன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லி அவற்றின் மீது ஒருவிதமான மயக்கத்தையும், ஈர்ப்பையும் உண்டாக்கிவிடுகிறார்கள். அந்த நிறுவனங்களில் நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இல்லை என்பதையோ.... இவர்களின் பணிக்கு அரசு பாதுகாப்போ அல்லது பணி  பாதுகாப்போ இல்லை என்பதையோ, இவர்களின் 30 - 35 -ஆவது வயதில் நிறுவனத்திலிருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்பதையோ, இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்பது சொற்பமே என்பதையோ அல்லது  இரவு நேரவேலை,  அதிக நேரவேலை மற்றும் வீட்டுவேலை போன்ற புதிய பணிக்கலாச்சாரம் பற்றியோ  அந்த இளைஞர்களுக்கு எடுத்து சொல்லாமல் திட்டமிட்டு மறைத்துவிடுகிறார்கள். 
            அவர்களும் அந்த மயக்கத்திலேயே பொறியியல் படிப்பை முடித்ததும் வீட்டை விட்டு - பெற்றோர்களை விட்டு பறந்துவிடுகிறார்கள். புதிய சூழல், புதிய கலாச்சாரம், புதிய நட்பு, தங்கள் தாய் - தந்தையர் செய்யாத புதிய பணி, புதிய நடை -உடை- பாவனை ஆகியவை தங்கள் உரிமைகள் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை கூட அறியாமல் பிடித்துவிடுகிறது. கம்பெனியின் ''டிஜிட்டல் திறவுகோலை'' பெருமையுடன் கையில் வைத்துக்கொண்டு தங்களை தாங்களே சிறைப்படுத்திக்கொண்டு மணிக்கணக்காய் வேலை, எளிதில் யாரும் உள்ளே நுழையவும் முடியாத, வெளியேறவும் முடியாத  சிறைக்கதவு,  வாரத்தில் இரண்டு நாள் இடுமுறை என்றாலும் ''work at home'' என்ற பெயரில் வீட்டிலும் ஓய்வில்லாத வேலை, அவர்களின் மன இறுக்கத்தைப் போக்க ''weekend party'' என்ற பெயரில் கலாச்சார சீரழிவு, பெண்கள் மீதான பாலியல் சீண்டல்களும், தாக்குதல்களும் அவர்கள் அறியாமலேயே அவர்கள் அனுமதியின்றி ஆளுமை செய்கின்றது. 
            சென்ற வாஜ்பேயி காலத்தில் அந்நிய - இந்திய பெருமுதலாளிகளுக்கு சாதகமாக ''தொழிலாளர் நலச்சட்டங்கள்''  நாசம் செய்யப்பட்டதால், மூன்று மாத முன்னறிவிப்பு இன்றி இ-மெயில் மூலமாகவே இந்த கம்பெனிகளில் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர்கள் வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். வேலையை இழந்த இளைஞர்களும்,  நிர்வாகத்தின் இந்த மோசமான நடவடிக்கைகளை எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் இதுவரையில் அச்சத்தோடே வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்படி வேலையிழந்த பல இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். இன்னும் சிலபேர் மனநிலை பாதிக்கப்பட்டு வீதிகளில் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியே தொடர்ந்து வேலையில் நீடிப்பவர்கள் கூட அதிகபட்சம் 35 ஆவது வயதில் சக்கையாக பிழியப்பட்டு வீதியில் தூக்கியெறியப்படுகிறார்கள். இப்படியாக கேள்விக்குறியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த இளைஞர்களிடம்  உங்கள் பணிப் பாதுபாப்பிற்கும், உங்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் உரிமைகளுக்கும், பணியிலிருக்கும் பெண்களின் பாதுகாப்பிற்கும் உங்களுக்கென்று தனியாக ஒரு தொழிற்சங்கம் தேவையில்லையா....? ஏன் உங்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் தொடங்கக்கூடாது....? என்று கேட்டால், ''தொழிற்சங்கம்'' என்றாலே ஒரு அருவருப்பான வார்த்தைபோல முகம் சுளிப்பார்கள். நாங்க நல்லாத்தான் இருக்கோம்... யூனியன் எல்லாம் தேவையில்லை... யூனியன் என்றால் சிகப்பு கொடி பிடிக்க சொல்லுவாங்க... கோஷம் போடுவாங்க... ஸ்ட்ரைக் பண்ண சொல்லுவாங்க... அதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை சார்.... என்று சொல்லிவிட்டு நம்மை விட்டு ஒதுங்கி ஓடிவிடுவார்கள்.
           இப்படிப்பட்ட இவர்கள் தான் இன்று தங்களுக்கென்று - தங்கள் பணி பாதுகாப்புக்கென்று தனி அமைப்பு ஒன்றை ஆரம்பித்து போராடுகிறார்கள் என்பது வரவேற்கவேண்டிய அம்சமாகும். இன்று TCS என்று சொல்லக்கூடிய டாட்டாவிற்கு சொந்தமான ஐ.டி கம்பெனியில் பணிபுரியும் 25,000 இளைஞர்களை ஒரே சமயத்தில் வெளியேற்றப்பட இருக்கிறார்கள் என்ற அநீதியை எதிர்த்து இன்று இவர்கள் துணிச்சலுடன் ஒரு தனி அமைப்பை உருவாக்கி கொடிபிடித்து போராடுகிறார்கள். போராடினால் தான் வாழ்க்கை என்பதை இப்போதாவது உணர்ந்த அந்த இளைஞர்களை நெஞ்சார வாழ்த்துவோம். உழைப்பாளி மக்களுக்காக போராடும் அமைப்பையும் இணைத்து போராடுங்கள். அப்போது தான் உங்கள் போராட்டம் வலுப்பெறும். வெற்றிபெறும்.

கருத்துகள் இல்லை: