ஞாயிறு, 11 ஜனவரி, 2015

''மாதொருபாகன்'' நாவலை அரசியல் ஆக்குவதா...?

பத்திரிகைச் செய்தி : தோழர். ஜி.ராமகிருஷ்ணன்                  
                                               மாநிலச்செயலாளர்,                 
                                               மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி                   
          நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளர் - பேராசிரியர் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்‘ என்கிற நாவல் நான்கு ஆண்டுகளுக்கு முன் வெளியானது. இந்த நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்து, அது கோவிலுக்கு இழிவு செய்வதாகவும், பெண்களை இழிவு செய்வதாகவும் சங் பரிவார் அமைப்புகள் அரசியல் செய்து வருகின்றனர்.
               கடந்த ஜனவரி 7 ஆம் தேதி எழுத்தாளர் பெருமாள்முருகன் வெளியிட்ட செய்தியில் பெண்களையோ, கோவிலையோ இழிவுபடுத்தும் நோக்கம் தனக்கில்லை என்று சொன்னதுடன், ஆட்சேபிக்கப்பட்ட பகுதிகளை நீக்குவதாகவும் அறிக்கை விடுத்தார். ஆனால், அதன் அடிப்படையிலான பேச்சுவார்த்தைக்கு கூட மேற்கண்ட அமைப்புகள் தயாராக இல்லை. மாறாக வர்த்தகர்களை கட்டாயப்படுத்தி கடையடைப்பு செய்வதிலேயே குறியாக இருந்தனர். இதிலிருந்து, சங் பரிவார் அமைப்புகள், மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் உள்நோக்கத்துடனே செயல்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது.
              நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ‘மாதொருபாகன்‘ நாவலை இப்போது ஆட்சேபிக்க வேண்டிய காரணம் என்ன வந்தது? படிக்கவே முடியாத ஆபாசமானவை என குறிப்பிட்ட பகுதிகளை ஆயிரக்கணக்கில் பிரதியெடுத்து விநியோகித்தது ஏன்? என்ற கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது.
    தமிழகத்தில் நிலவும் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமைக் கொடுமைகளையும் அம்பலப்படுத்தும், எளியமக்கள் வாழ்க்கையைச் சொல்லும் படைப்புகளை கொடுத்துவரும் எழுத்தாளர்களில் பெருமாள் முருகன் குறிப்பிடத்தக்கவர். அவர் தொகுத்த ‘சாதியும் நானும்‘ கட்டுரைத் தொகுப்பு சாதிக் கொடுமைகளின் யதார்த்தத்தை பதிவு செய்தது. படைப்புகள் சுட்டிக்காட்டும் உண்மைகளை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத சக்திகளே, இப்படி திரிக்கப்பட்ட பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
     எனவே, மதவெறி, சாதிவெறி சக்திகளின் தூண்டுதலுக்கும், நிர்ப்பந்தத்திற்கும் இரையாக வேண்டாம் என அப்பகுதி மக்களை அன்போடு வேண்டுகிறோம். படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இத்தகைய முயற்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது. கொலைமிரட்டல் உள்ளிட்ட அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ள எழுத்தாளர் பெருமாள்முருகனுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அரசு நிர்வாகம் செயலற்று இருந்தால் சாதி, மத வெறி சக்திகள் ஆட்டம் போடும் என்பதற்கு சான்றாக திருச்செங்கோடு நிகழ்வுகள் அமைந்துள்ளன.
        தமிழக அரசின் பாராமுகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. தமிழகத்தின் அனைத்துப்பகுதி மக்களும், எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும், இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஒன்றுபட்டு குரல் எழுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
      மேலும் தேவையற்ற வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

நன்றி : Venpura Saravanan

கருத்துகள் இல்லை: