ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சீன கம்யூனிஸ்ட் கட்சியும், ''MISSED CALL'' கட்சியும்...!

                 
                  அண்மையில் செய்தித்தாள்களில் நகைச்சுவை ஊட்டும் செய்தி ஒன்று வந்திருந்தது. ''இந்தியாவில் உள்ள பாரதீய ஜனதாக்கட்சியில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பா.ஜ.க-வின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை என்பது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையையே மிஞ்சி உலக சாதனைப்படைக்கும்'' என்பது தான் அந்த நகைச்சுவைத் ததும்பும் செய்தி.
                முதலில் இந்தியாவில் பாரதீய ஜனதாக்கட்சி எப்படி உறுப்பினர்களை சேர்க்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். ஏழு மாதத்திற்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ''எதிர்பாராத'' வெற்றி மற்றும் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட எட்டமுடியாத காங்கிரஸ் கட்சியின் தோல்வி இவைகளெல்லாம் மோடியை உற்சாகப்படுத்தியது. அதனால் தனது கட்சியை இப்போது இருக்கும் சூழ்நிலையில் ஒரு ராட்சச பலத்துடன் வளர்த்துவிடவேண்டும்  என்ற கனவில்,  தன் மனம் அறிந்து நடந்துகொள்ளும் தனது கூட்டாளியான அமித் ஷாவை பா.ஜ.க-வின் தலைவர்  ஆக்கினார். பிறகு இருவரும் சேர்ந்து கட்சியை ஊதி பெரிதாக்கப்போறோம் என்று முடிவெடுத்து உலக அளவில் இதுவரையில் யாரும் செய்யாத - ''உலக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக'' மாபெரும் கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினார்கள். அந்த தகவல்கள்  நாடு முழுதும் அனைத்து மொழி தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும், வார மற்றும்  மாதாந்திர பத்திரிக்கைகளிலும், வானொலிகளிலும் கடந்த இரண்டு மாதகாலமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.    
                அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணிற்கு  ஒரு ''missed call'' கொடுத்தால் போதும் பா.ஜ.க-வின் உறுப்பினராகிவிடலாமாம். missed call கொடுத்து மத்திய மந்திரி ஆன அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது. உலக அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக மிக சுலபமான முறையில் கட்சி உறுப்பினர் சேர்க்கை பா.ஜ.க-வில் நடைபெற்று வருகிறது. புதிதாக சேருகிற உறுப்பினர் யார்...? எப்படிப்பட்டவர்...? எங்கிருக்கிறார்...? என்ன செய்கிறார்...? என்பதை பற்றி எல்லாம் கவலையில்லை. கட்சித் தலைமைக்கோ அல்லது ஏற்கனவே உள்ள சாதாரண உறுப்பினருக்கோ கூட அறிமுகமானவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது போல் உறுப்பினர்களை சேர்ப்பதை இந்திய தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கிறது என்று தான் தெரியவில்லை. இதைப்பற்றியே தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை. ஆக இப்படியாக கடந்த இரண்டு மாதங்களில் missed call கொடுத்தவர்கள் எண்ணிக்கை என்பது இதுவரையில்  மூன்று கோடியை தொட்டிருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார்கள். 
             சரி அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பத்து கோடிக்கு மேல் உறுப்பினர்களை சேர்த்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையையும் தாண்டி பாரதீய ஜனதாக்கட்சி உலக சாதனை படைக்கும் என்று பா.ஜ.க-வின் தலைமையில் உள்ளவர்கள் பீற்றிக்கொள்கிறார்கள் என்பது தான் விழுந்து  விழுந்து சிரிக்க வைக்கும் இன்றைய தலைசிறந்த நகைச்சுவையாக கருதப்படுகிறது. 
              மக்கள் சீனம் உட்பட உலகத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளில் இவர்கள் போல் missed call கொடுத்து உறுப்பினர் ஆகமுடியாது. கம்யூனிஸ்ட் கட்சியில் ஒருவர் சேரவேண்டுமென்றால் அவரைப்பற்றி அறிந்த ஏற்கனவே  கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் அவரை முன்மொழிய வேண்டும். அதேப்போல் அவரைப்பற்றி அறிந்த கட்சியில் உள்ள வேறொரு உறுப்பினர் வழிமொழிய வேண்டும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு அவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணிக்கப்படுவார். அவர் பெயர் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து கட்சியில் அவர் காட்டும் ஈடுபாடு, இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் அவரது பங்களிப்பு, கட்சிக்கல்வியில், மக்கள் பிரச்சனைகளில் அவர் காட்டும் அக்கறை, நேர்மை, நன்னடத்தை, தனிமனித ஒழுக்கம் இப்படியாக கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவதற்கு நிறைய அளவுகோள்கள் இருக்கின்றன.  இந்தியா போன்ற நாடுகளில் இது போன்ற சோதனைக்கட்டங்களை வெற்றிகரமாக கடந்தபின் தான் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். 
          சீனா போன்ற நாடுகளில் இன்னும் கடுமையான பரிசோதனைகள் நடைபெறும். சீன நாட்டை சேர்ந்தவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவேண்டுமென்றால் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும். அங்கு உறுப்பினராவதற்கு மேலே சொன்ன அளவுகோள்கள் மட்டுமல்லாது, அவர்களுக்கு கட்சியினால் ஏதாவது ஒரு பகுதி கொடுக்கப்பட்டு மக்கள் நலத்திட்டப்பணிகளில்  கடுமையாக உழைக்கவேண்டும். அவரது திட்டப்பணிகளினால் மக்களுக்கு கிடைத்திருக்கும் பலன்கள் கணக்கிடப்படும். இவ்வளவு சோதனைகளில் வெற்றிபெற்ற பிறகு தான் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக முடியும். அதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகளாகும். சீன கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக உள்ள 10கோடி பேர்களில் ஆறு ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள்  சோதனைக்கு பிறகு உறுப்பினர்களாக ஆனவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்போதும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் - ஆறு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் கட்சியின் உறுப்பினர்களாக சேர்வதற்கு காத்திருப்பவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. 
          எனவே இங்குள்ள missed call கட்சியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஒரு சிறு துளி கூட ஒப்பிட முடியாது. அந்த எண்ணிக்கையை எட்டக்கூட முடியாது என்பதும் உண்மை.

கருத்துகள் இல்லை: