வெள்ளி, 9 ஜனவரி, 2015

மூடர்கள் கையில் சிக்கித்தவிக்கிறது தேசம்...!

                     பாரதீய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வந்தவுடனேயே... அதுவும் அதீத பலத்துடன் ஆட்சிக்கு வந்தவுடனேயே, இனி நம்  தேசம் பின்நோக்கி அழைத்துச்செல்லப்படும் என்ற அச்சம் நம் எல்லோருக்குமே இருந்தது. பழங்கதைகளையும், பழமைவாதத்தையும் இவர்கள் உளறித் திரிவார்கள் என்பது நாம் எதிர்ப்பார்த்தது தான். ஆனால் பதவியேற்று ஆறு மாதத்திற்குள்ளாகவே   ஏகப்பட்ட மூடர்களும், கிறுக்கர்களும் பேசுவதை கேட்டால் நமக்கு கிறுக்கு புடிச்சிடும் போல இருக்கு. தாங்க முடியல. அறிவியலுக்கு அப்பாற்பட்டு சிந்திக்கும் இந்த அறிவிலிகளின் அறிவார்ந்த அற்புத உளறல்களை கேட்க நாம் என்ன தவம் செய்தோம்...? 
              முன்பு ஒரு அறிவியல் மாநாட்டில் இந்த நாட்டின் பிரதமர் தன்னுடைய ''அரிய கண்டுபிடிப்புகளை'' வெளியிட்டார். பிள்ளையார் உருவத்தை பார்க்கும் போது அந்தக்காலத்திலேயே ''பிளாஸ்டிக் சர்ஜரி'' முறை இருந்திருப்பதை நம்மால் உணரமுடிகிறது என்றும், அதேப் போல் கவுரவர்கள் குளோனிங் முறையில் தான் பிறந்தார்கள் என்றும் தன்னுடைய ''அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை உளறித் தள்ளினார். ''என்ன தவம் செய்தனையோ யெசோதா இவரை உன் கண்ணாளனாய் பெறுவதற்கு....?'' 
                 பிரதமரே இப்படியென்றால் அவரது கட்சியில் இருப்பவர்கள் இன்னும் ''அதிபுத்திசாலிகள்'' என்று சொன்னால் அது மிகையாகாது. அண்மையில் மும்பையில் நடைபெற்றுவரும் இந்திய அரசியல் மாநாட்டில் கட்டுரை வாசித்த பிரதமரின் நண்பரும்,   கேப்டன் ஆனந்த் ஜே போடோஸ் என்ற ''அறிவார்ந்த அறிவியல் விஞ்ஞானி'' -யுமான ஒருவர் தன்னுடைய அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார். சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இந்தியாவில் விமானப்போக்குவரத்து இருந்துச்சாமாம்... அந்த விமானங்கள் கண்டம் விட்டு கண்டம் தாண்டி போச்சாமாம்... கிரகம் விட்டு கிரகம் தாண்டிக்கூட போச்சாமாம்... அந்த அளவிற்கு அன்றைய இந்தியர்கள் வல்லமை பெற்றிருந்தாங்களாமாம். இப்படியாக போடோஸ் உளறித் தள்ளியிருக்கிறார். அதுமட்டுமா... ஜம்போ ரக விமானங்கள் கூட அக்காலத்தில் இருந்ததாமாம்...! 40 இன்ஜின்கள் அந்த விமானங்களில் பயன்படுத்தப்பட்டதாமாம்...! இதை எல்லாம் கேட்டதும் அந்த அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட விஞ்ஞானிகளுக்கு மயக்கமே வந்துவிட்டதாம். 
              ஏழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இராமர் கட்டிய பாலம் கடலுக்கு அடியில் செல்கிறது என்று சொல்லி சேது சமுத்திரத் திட்டத்தையே முடக்கி வைத்திருப்பவர்களாயிற்றே இவர்கள்...! இன்னும் என்னமெல்லாமும் சொல்லப் போறாங்களோ....?
                மோடி கட்சியில் இன்னும் சில கிறுக்குகள் இருக்கிறது. அண்மையில் புதுடெல்லியில் பிஜேபி எம்பியான பெண் சாமியார் ஒருவர் பாரதீய ஜனதாக்கட்சிக்கு வாக்களிப்பவர்கள் இராமனின் பிள்ளைகள் என்றும், பா.ஜ.க-விற்கு வாக்களிக்காதவர்கள் யாருக்கோ பிறந்தவர்கள் என்று உளறித் தள்ளி பெரிய சர்ச்சைக்குள் மாட்டிக்கொண்டார். அவர் தான் அப்படியென்றால், இன்னொரு சாமியார் எம்பி-யான சாக்ஷி மகாராஜ் இந்து பெண்கள் எல்லோரும் நான்கு குழந்தைகளை பெற்று இந்து மதத்தை வளர்க்கவேண்டும் என்று திருவாய் மொழிந்துள்ளார்.
            இப்படித்தான் நம்ப ''பாரத்ரத்னா'' அண்ணன் வாஜ்பாய் ஆட்சி செய்த போது, பொன்னான வாசகம் ஒன்றை திருவாய் மலர்ந்தது நினைவிற்கு வருகிறது. சமூகத்திலிருந்தும், மக்களின் மூளையிலிருந்தும் ஒழித்துக்கட்டப்பட்ட ''சதி''  என்ற பெண்கள் உடன்கட்டை ஏறும் பழக்கம் மீண்டும் வரவேண்டும் என்றும், கணவன் இறந்தபிறகு மனைவி உயிருடன் இருப்பதில் அர்த்தமில்லை என்றும் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் கருத்து கூறினார். ஒரு வாசகம் என்றால் திருவாசகம் போல் ஒலித்தார். நாடு முழுதும் எதிர்ப்பலை கிளம்பியவுடன் வாஜ்பாய் அப்படியே பம்மிட்டார்.
                 இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே இப்படித்தான் எதையாச்சும் அவிழ்த்து விட்டுகிட்டே இருப்பாங்க. நாம்ப தான் உஷாரா இருக்கோனோம். 

கருத்துகள் இல்லை: