செவ்வாய், 17 டிசம்பர், 2013

சவுரவ் கங்குலிக்கு வலை வீசிய நரேந்திர மோடி...!

         தேர்தல் நெருங்க நெருங்க காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாக் கட்சியும் பண்ணுகிற கூத்துகளைப்  பார்க்க சகிக்கமுடியவில்லை. நான்கு மாநிலத்தேர்தல்களில் மண்ணைக் கவ்விய காங்கிரஸ் கட்சியோ அண்மையில் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய கட்சியின் ''பிரச்சார பீரங்கியாக'' பயன்படுத்தி சச்சின் இரசிகர்களின் ஓட்டுக்களை ஸ்வாகா பண்ணி ஜெயித்துவிடலாம் என்று கனவு கண்டு சச்சினுக்கு ''பாரத ரத்னா'' அறிவிப்பெல்லாம் செய்து அமர்க்களப்படுத்தியது.
         இதைப் பார்த்த பாஜக-வின்  ''பிரதமர் கனவு வேட்பாளர்''  மோடிக்கு அரிப்புத் தாங்கல. உடனே கொல்கத்தாவில் வாசம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணியின் இன்னொரு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு எதிர் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புத் தருவதாகவும், தேர்தலில் வெற்றி பெற்ற பின் பாஜக அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆக்குவதாகவும் கூச்சமில்லாமல் ஆசை வார்த்தைகளை கூறி அழைப்புவிடுத்தார்.
         இதற்கெல்லாம் மயங்காத கங்குலி கொல்கத்தா செய்தியாளர்களிடம், இப்படியொரு அழைப்பை மோடி தனக்கு விடுத்துள்ளார் எனவும், அதை தான் நிராகரிப்பதாகவும் கூறி மோடியின் முகத்தில் கரியை பூசினார். போகிறப் போக்கைப்பார்த்தால், ''பிரதமர் கனவு வேட்பாளர்'' மோடி, பிரபலங்களுக்கு வலைவீசி அவர்கள் கேட்காமலேயே மக்களவைத் தேர்தலில் போட்டியிட சீட்டும் கொடுத்து, மந்திரிப்பதவியையும் கொடுத்து, அமைச்சரவைப் பட்டியலையும் இப்போதே குடியரசுத் தலைவரிடமும் கொடுத்துவிடுவார் போலிருக்கிறதே. மோடியின் கோமாளித்தனத்தை தாங்கமுடியலடா சாமி...!

கருத்துகள் இல்லை: