வியாழன், 5 செப்டம்பர், 2013

யார் நல்லாசிரியர்....?

      
     
''மாற்று'' - வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட எனது கட்டுரை : 

              இன்று  ஆசிரியர்  தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ஆம் தேதி நாடு முழுதும் ”ஆசிரியர்கள் தினம்” சிறப்பாக கொண்டாடுப்படுகிறது.  மத்திய – மாநில அரசுகள் கடந்த காலங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர் – ஆசிரியைகளை தேர்ந்தெடுத்து ”நல்லாசிரியர் விருது” அளித்து வருகிறது.
           ஆனால் நம் மனதில் எப்போதும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். விருது பெற்றவர்கள் மட்டுமே நல்லாசிரியர்களா..? இதில் அரசியல் தலையிடு இல்லையா? தேர்வு முறைகளில் நியாமான வகையில் இருக்கிறதா? இத்தகைய கேள்விகள் இருந்தாலும் விருதுபெறாத பெற விரும்பாத  மற்ற ஆசிரியர்களெல்லாம் நல்லாசிரியர்கள் இல்லையா..?  அப்படியென்றால், யார் நல்லாசிரியர்..? இப்படியெல்லாம் கேள்விகள் நமக்குள்ளே எழுந்து கொண்டே இருக்கும்.
          தூய்மையான குடிநீர் இல்லாமலும், ஊட்டச்சத்துள்ள  உணவு  இல்லாமலும், வாழ இருப்பிடமில்லாமலும், சுகாதாரமான கழிப்பிட வசதி இல்லாமலும்,  கல்வி பெரும் சூழல் இல்லாமலும், பாதுகாப்பும் பரிவும் இல்லாமலும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான வசதியற்றக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டும் அரசு ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு, தன் வீட்டுக் குழந்தைகளை மட்டும் தன்னலத்தோடு தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்கள், இந்த கல்விக்காக ஏங்கும் – கல்விக்காக தவிக்கும் மாணவ சமூகத்தின் ஒட்டுமொத்த நன்மைக்காக தனது வருமானத்தில் சிறு பகுதியையோ அல்லது மற்றவர்களை விட தங்களுக்கு அதிகமாக கிடைத்துள்ள ஓய்வு நேரத்தையோ செலவிடாமல்,  தன் வருமானத்தை மேலும் பெருக்கிக் கொள்ள காலையிலும் மாலையிலும் தனி வகுப்பு நடத்துகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
         மனித மாண்புகளையும், மனித உரிமைகளையும், மனிதநேயத்தையும் கற்றுக் கொடுக்காமல், பன்னாட்டுக் கம்பெனிகளில்  அடிமை வேலைகள்  செய்ய கற்றுக் கொடுக்கும் இன்றைய கல்வி முறையின் குறைகளைப் பற்றி சற்றும் சிந்திக்கத் தெரியாமலேயே, தான் உண்டு  தன் வேலை உண்டு என்ற வாழ்வியல் சிறைக்குள்ளே பிள்ளைகளை  அடைத்து, எதிர்காலத்தில் தவறுகளை தட்டிக்கேட்கவும், அநீதிகளை எதிர்க்கவும் எண்ணமில்லாத  மனிதர்களாக, தோல்விகளை தாங்கிக்கொள்ள முடியாத கோழைகளாக மாணவர்களை உருவாக்குகிறார்களே…. அந்த ஆசிரியர்கள் நல்லாசிரியர்களா..?
  • எந்த ஓர்  ஆசிரியர்,  தான்  பணி செய்யும் பள்ளிகளில்  வகுப்பறை சுதந்திரத்தையும் வகுப்பறை ஜனநாயகத்தையும் கடைப்பிடித்து மாணவர்களை சுதந்திரமாக பேசுவதற்கும், சிந்திப்பதற்கும் வாய்ப்பளிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர், தன் ஓய்வு நேரத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் பள்ளிக்கு வெளியே தனி வகுப்பு எடுப்பதை தவிர்த்து, கல்விக்காக ஏங்கும் மாணவர்களை கைகொடுத்து கரையேற்றத் துடிக்கின்றாரோ..
  • எந்த ஓர் ஆசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவர்கள் ஒருவர் கூட வெளியில் தனிவகுப்புக்கு செல்லும் கட்டாயத்தை  உருவாக்காமல்  தன்னலமில்லாமல் நேர்மையாக கல்வி அளிக்கின்றாரோ…
  • எழுதப் படிக்க மட்டும் கற்றுக்கொடுப்பது ஓர் ஆசிரியரின் பணியல்ல.. வெறும் மனப்பாடத் திறமையில் தகவல் தொகுப்பாக மாணவர்களை தகுதியானவனாக மாற்றுவது ஓர் ஆசிரியரின் கடமையல்ல.. மாறாக ஒட்டு மொத்த சமூகத்தின் அனைத்து அம்சங்களையும் விருப்பு வெறுப்பின்றி விசாரணை செய்வதும், அதன் மூலம் சமூக அநீதிகளைக் களைவதும், ஒரு சிலர் மட்டும் அனுபவிக்கும் முறையற்ற செல்வப் பகிர்வை ஒழித்து உலகில் உள்ள அனைவருக்கும் பயனுடையதாக மாற்றுவதும் ஓர் ஆசிரியரின் நோக்கமாக இருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட ஆசிரியர்களே மிக சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும். அவர்களே இந்த தேசத்தின் நல்லாசிரியர்கள் என்பதை நாடு உணரவேண்டும். இத்தகைய நோக்கோடு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நாம் சொல்வோம் ஒரு வாழ்த்து ஆசிரியர் தின நல்வாழ்த்து.

கருத்துகள் இல்லை: