வியாழன், 15 மார்ச், 2012

இலங்கையில் கால் பதிக்க துடிக்கிறது அமெரிக்கா - அதற்கு இந்தியா ஏன் அதரவு தரவேண்டும்...?

       ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனத்  தீர்மானம் ஒன்று  அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்களை தயங்காமலும், அச்சமில்லாமலும் செய்த அமெரிக்கா தான் இந்த கண்டனத் தீர்மானத்தைக் கொண்டுவருகிறது. இதன் மூலம்  மனித உரிமைகள் மீது அக்கறையுள்ள மனித நேயமிக்க நாடாக தன்னை உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 
           இலங்கைத் தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு திடிரென்று அப்படி என்ன அவ்வளவு அக்கறை...? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பிறகு ஏன் இலங்கை அரசின் மீது அமெரிக்கா கண்டனத் தீர்மானம் கொண்டுவரவேண்டும். 
             பொதுவாக அமெரிக்கா ஒரு நாட்டின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டுவருகிறது என்றால்,  ஒன்று அந்த நாட்டின் மீது ஆக்கிரமிப்பு செய்யப்போகிறது அல்லது போர் தொடுக்கப்போகிறது என்று பொருள் அல்லது ஒரு நாட்டில் உள்ள எதோ ஒன்றை  எதிர்ப்பார்த்து அது கிடைக்காமல் போய் அதனால் அந்த நாட்டின் மீது எரிச்சல் அடைந்திருக்கிறது அல்லது கோபம் அடைந்திருக்கிறது என்றும் பொருள். 
           இலங்கை அரசின் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன எரிச்சல்...? அப்படி என்ன கோபம்...?   அமெரிக்கா எதிர்ப்பார்த்த  ஒன்று என்ன இலங்கையில் கிடைக்காமல் போய்விட்டது...?  ஆம்... அமெரிக்கா தன் கைக்கு வரும் என்று எதிர்ப்பார்த்த ஒன்று அதன் கைக்கு கிடைக்காமல் போனது தான் இலங்கை மீதான அதன் எரிச்சல்.

             அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் வடபகுதியில் உள்ள திரிகோணமலை மீது ஒரு கண் வைத்திருந்தது. அதற்கு காரணம் உண்டு...! இலங்கையின் தென் கடற்கரைப் பகுதியில் இந்தியப்பெருங்கடலில் - இந்திய தென் முனையிலிருந்து  சுமார் 2200 கிலோ மீட்டர் தொலைவில் ''டீகோ கார்சியா - DIEGO GARCIA'' என்ற தீவு உள்ளது. நீங்க உலக வரைபடத்தைப் பார்த்தால்  கண்ணுக்குத் தெரியாத தீவு ஒன்று தெரியும். அது இங்கிலாந்திற்கு சொந்தமான தீவு ஆகும். ஆனால் அந்த தீவை அமெரிக்கா தன் கைவசம் வைத்துள்ளது.  அந்த தீவில் தான் அமெரிக்காவிற்கு சொந்தமான விமானப்படை மற்றும் கடற்படை தளங்கள் உள்ளன. அதை படத்தில் காணலாம்.  அதுமட்டுமல்லாது. நிறைய ஆயுதங்களும்,  ஏவுகணைகளும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த படைத்தளம் என்பது  ஆசியப்பகுதியில் உள்ள இராக்,  ஈரான்,  இந்தியா, சீனா, வடகொரியா  போன்ற நாடுகளை தன் இராணுவப்பார்வைக்குள் வைத்துக்கொள்வதற்காகவே 1971 - ஆம் ஆண்டில்  அமெரிக்காவால் நிறுவப்பட்டது.  முன்பு இராக் நாட்டோடு போர் செய்த போது இங்கிருந்து தான் படைகள் எல்லாம் உடனுக்குடன் அங்கு அனுப்பப்பட்டது. இப்போதும் கூட ஈரானை தாக்குவதற்காக இங்கு படைகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
              சகல வசதிகளோடு இந்த தீவு இருந்தாலும், அமெரிக்கா திருப்தியடையவில்லை. காரணம், இந்த தீவானது மேலே சொன்ன நாடுகளிலிருந்து மிக தொலைவில் உள்ளது. அதனால் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு அருகில் வரவேண்டும் என்று ஆசைப்பட்டது. அப்போது தான் திருகோணமலை அதன் கண்ணில் பட்டது. அந்தப்பகுதி கிடைத்துவிட்டால் இந்தியாவிற்கு பக்கத்திலேயே வந்து விடலாம் என்பது மட்டுமல்ல... அரபு நாடுகளிலிருந்து இலங்கை கடற்பகுதி வழியாக  சீனாவிற்கு செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிடலாம் என்பது போன்ற கனவில் அமெரிக்கா கனவு கண்டது. ஆனால் திருகோணமலையோ  அப்போது விடுதலைப்புலிகள் வசம் இருந்தது. அதனால் அமெரிக்காவிற்கு  விடுதலைப்புலிகளின் தயவு தேவைப்பட்டது. 
              எனவே விடுதலைப்புலிகளின் நட்பைப் பெறுவதற்கும்,  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மீண்டும் பிரதமராக வந்துவிடக்கூடாது என்ற அமெரிக்காவின் எதிர்ப்பார்ப்புக்கும்,   ராஜீவ்காந்தியின் உயிர் விலைப்பேசப்பட்டது. விடுதலைப்புலிகளும் பழி தீர்த்துக்கொண்டனர். அமெரிக்காவின் எண்ணமும் நிறைவேறியது. பிறகு விடுதலைப்புலிகளும் அமெரிக்காவும் நண்பர்கள் ஆனார்கள்.
              இந்த நட்பைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் திருகோணமலைக்கு குடிபெயர்ந்து விடலாம் என்று வடைக்காக காத்திருந்த குள்ளநரிப் போல் காத்திருந்தது. ஆனால் இலங்கை ஒரே நாடாக இருந்தால் அது நிறைவேறாது என்பதை உணர்ந்த அமெரிக்கா, ஏற்கனவே தனி நாடு என்ற கோரிக்கையுடன் உள்நாட்டிலேயே இலங்கை அரசுடன் போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து இலங்கை இராணுவத்துடன் மோதவிட்டது. விடுதலைபுலிகளுக்கும், இராணுவத்திற்கும் நடைபெற்ற கடுமையான சண்டையில் விடுதலைப்புலிகள் அமைப்பு பூண்டோடு அழிக்கப்பட்டு, பிரிவினைவாதம்  ஒழிக்கப்பட்டுவிட்டது. 

              இன்று திருகோணமலை என்பது ஒன்றுபட்ட இலங்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அமெரிக்கா என்ற குள்ளநரி எதிர்ப்பார்த்த வடை கிடைக்காமல் போய்விட்டது. அமெரிக்காவின் நீண்ட காலக் கனவு நிறைவேறாமல் போய்விட்டது. இது தான் இன்றைக்கு அமெரிக்காவுக்கு இலங்கை மீது உண்டான எரிச்சலும் கோபமும் ஆகும். அதனால் தான் இலங்கை அரசின் மீது மனித உரிமை மீறல் எதிரான கண்டனம் என்ற பெயரில் தன் எரிச்சலையும் கோபத்தையும் அமெரிக்கா வெளிகாட்டியுள்ளது. 
                இந்த சூழ்நிலையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஏன் இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் சற்று சிந்திக்க வேண்டும். தேர்தல் ஓட்டுக்காக இந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூச்சல் போடுவது என்பது எந்த விதத்திலும் நியாயமில்லை. இந்த தீர்மானத்தை அமெரிக்கா ஏன் கொண்டுவரவேண்டும்..? என்பதை தமிழர்கள் நன்கு யோசிக்கவேண்டும். இலங்கை தமிழர்கள் மீது அமெரிக்காவிற்கு அப்படி என்ன அக்கறை என்பதையும் யோசிக்க வேண்டும்...?
            நியாயப்படிப் பார்த்தால் இந்த கண்டனத் தீர்மானத்தை இந்தியா தான் கொண்டுவந்திருக்க வேண்டும். ஏனென்றால் இலங்கையில் நடைபெற்றக் கொடுமைகளை நேரடியாகப்பார்த்து இரத்தக்கண்ணீர் வடித்தவர்கள் நாம் தான். அப்பாவித் தமிழர்கள், நம்முடைய சகோதர- சகோதரிகள், நம் வீட்டுக் குழந்தைகளும், வயதானவர்களும் தான் கொடுமையான முறையில் கொல்லப்பட்டனர். இன்றைக்கு மிச்ச மீதி இருக்கிற தமிழர்களும் தன் சொந்த நாட்டிலேயே வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதை நம் மத்திய - மாநில அரசுகள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படி இருக்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தனியாக ஒரு தீர்மானத்தை கொண்டுவர இங்குள்ள மத்திய - மாநில அரசுகளுக்கு ஏன்  எண்ணம் வரவில்லை...? அமெரிக்கா கொண்டுவந்த இந்த தீர்மானத்தை ஆதரிக்கக் கூச்சல் போடும் எதிர்கட்சிகள், இந்திய அரசு இலங்கை அரசுக்கு எதிராக தனியாக கண்டனத் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வரவேண்டும்  என்று ஏன் கூச்சல் எழுப்பத் துணியவில்லை.

             ஏன் அமெரிக்காவின் வாலை பிடித்துக்கொண்டு அலைய வேண்டும்...? நமக்கென்று தனித்தன்மையும், மனித நேயமும், அநீதிகளுக்கெதிரான போர்க்குணமும் உண்டு. அதை நாம் காப்பாற்றுவோம்.

கருத்துகள் இல்லை: