வெள்ளி, 2 மார்ச், 2012

மோட்டார் வாகன சட்டம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பள்ளியிலேயே கற்றுக்கொடுங்கள்...!

                            
 இன்றைய இளையத்தலைமுறை         
 நாளைய தேசத்திற்கு வழிகாட்டும்...!   





          இன்றைக்கு சாலை விபத்தென்பது ஒரு அன்றாட நிகழ்வாக மாறிவிட்டது. தொலைக்காட்சியானாலும், செய்தித்தாளானாலும் சாலை  விபத்தும்,   மரணமும் இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம்.    விபத்தில்லாத நாளே இல்லை தான். இதற்கென்ன காரணமாக இருக்கும். 1 ) போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது.      2 ) கவனக்குறைவும் மற்றும் தூக்கமின்மையும். 3 ) குடித்துவிட்டு போதையில் வண்டி ஓட்டுவது.   4 ) செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது. 5 ) கண்மூடித்தனமான அதிவேகமாக வாகனம் ஓட்டுவது. இவைகள் தான் சாலை விபத்திற்கு மிக முக்கிய காரணிகளாகும்.  இவைகள் மட்டுமல்ல சாலை விபத்திற்கான காரணிகள் பல வகைகள் இருக்கின்றன.    இப்படிப்பட்ட  சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
               இதன்படி மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவருக்கு அதிகபட்சம் 4 ஆண்டு சிறையும், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுபவருக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
          இதேபோல் மத்திய அரசு கொண்டு வரும் சட்டதிருத்தத்தில் 43 வகையான சாலை விதிமீறல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை வருமாறு:-

          1. சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது.  2. இன்டிகேட்டர் போடாமல் இடதுபுறம் நோக்கி வாகனத்தை ஓட்டிச் செல்வது.  3. அனுமதி இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்துவது.  4. மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணம் செய்வது. 5. ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 6. நம்பர் பிளேட் இல்லாமை. 7. பயணிகளிடம் கார் ஓட்டுனர் தவறாக நடந்து கொள்வது. 8. வாடகை கார்-ஆட்டோ டிரைவர் அதிக கட்டணம் வசூலிப்பது.        9. வாடகை கார் டிரைவர், பயணி அழைக்கும்போது வரமறுப்பது. 10. இரவில் லைட் போடாமல் செல்வது. 11. ஹாரன் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 12. சைலன்சர் இல்லாமல் வாகனம் ஓட்டுவது.  13. எண் சரியாக தெரியாத நம்பர் பிளேட்டுடன் வண்டி ஓட்டுவது. 14. சாலையில் வாகன நிறுத்தகோட்டை கடந்து சென்று நிற்பது. 15. சட்டத்திற்கு உட்பட்ட திசையில் வாகனம் ஓட்ட மறுப்பது. 16. வாகனம் ஓட்ட அனுமதி பெறாதவரை வண்டி ஓட்டச் செய்வது. 17. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது. 18. 18 வயதுக்குட்பட்ட மைனர்கள் வாகனம் ஓட்டுவது. 19. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்). 20. அதிக வேகமாக வாகனம் ஓட்டுவது (அடுத்தடுத்து செய்யும் குற்றம்)  21. வேகமாக வாகனம் ஓட்டுவதற்கு உடந்தையாக இருப்பது. 22. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (முதல் குற்றம்) 23. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவது (2-வது குற்றம்) 24. பதிவு செய்யாத வாக னங்களை ஓட்டிச் செல்வது. 25. மஞ்சள் கோட்டை கடப்பது. 26. சில ரோடுகளில் அமல்படுத்தப்படும் போக்குவரத்து தடை நேரத்தை மீறுவது. 27. ஒரு வழிப்பாதை, இடதுபுறம்-வலதுபுறம் செல்ல தடை, ஹாரன் அடிக்கத் தடை போன்றவற்றை மீறுவது. 28. வாகனங்களில் அதிக புகை வெளியேறுவது. 29. அதிக ஒலியுடன் ஹாரன் ஒலிப்பது. 30. நடத்துனர் சீருடை அணியாமல் இருப்பது. 31. டிரைவர் சீருடை அணியாமல் இருப்பது. 32. நடத்துனர் ‘பேட்ஜ்’ அணியாமல் இருப்பது. 33. சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது. 34. பயணிகள் வாகனத்தில் சரக்குகளை ஏற்றி செல்வது. 35. வாகனங்களில் அமர்ந்து புகை பிடிப்பது. 36. வாகனங்களில் வண்ண விளக்குகளை பயன்படுத்துவது. 37. வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசுவது.
38. தவறான முறையில் முன்புறம் செல்லும் வாகனத்தை முந்துவது. 39. மது அருந்தி விட்டு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது. 40. வாடகைக்கு பயன்படுத்த அனுமதி பெறாமல் வாகனம் ஓட்டுவது. 41. ஓடும் வாகனத்தில் டிரைவர் ஏறுவது. 42. ஓடும் வாகனத்தில் பயணிகள்  ஏறுவது. 43. சட்டப் பிரிவு 192 (1) (2 அல்லது அதற்கும் மேற்பட்ட தடவை குற்றம் செய்வது)                                                                                                                                                     இது நல்ல விஷயம் தான். சாலை விபத்துகளை குறைப்பதற்கு மேலே சொல்லப்பட்ட விதிமுறைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதை சட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தமுடியுமா ? என்பது தான் நமது கேள்வி.                                                                                                                                                       பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் வாகன சட்டங்களை பற்றிக் கற்றுத்தரவேண்டும். இவைகளை பாடத்திட்டத்திலேயே சேர்க்கவேண்டும். ஓய்வு நேரங்களில் மாணவர்களை நெரிசலான சாலைகளுக்கு அழைத்துச்சென்று விதிமுறைப்படி வாகனப் போக்குவரத்துகளை சரி செய்வது  மற்றும் சிக்னல் மூலம் சாலைகளில் வாகனங்களை முறையாக அனுமதிப்பது போன்றவற்றை நேரிடையாக செய்முறைகள் வாயிலாக கற்றுத்தருவதன் மூலமே எதிர் காலத்தில் சாலைவிபத்துக்களை குறைக்கமுடியும்.             
மத்திய அரசுக்கு ஆலோசனையாக : நீங்கள் கொண்டுவரும் சட்டத்திருத்தத்தில் இன்னொன்றையும் நீங்கள் சேர்க்கலாம். அதாவது...
                     சமீபக்காலமாக நாட்டிலுள்ள சிறிய சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் காரில் செல்பவர்கள் தான்  சாலை விபத்து ஏற்பட்டு குடும்பத்தோடு மரணமடைபவர்கள். இந்த மாதிரியான விபத்துக்களில் சிக்கிக்கொள்வது பெரும்பாலும் வாடகைக்கார்கள் ( டாக்ஸி ) தான்.  இந்த விபத்துக்கள் பெரும்பாலும்  நடுநிசி பன்னிரண்டு மணி முதல் விடியற்காலை ஐந்து மணி வரை நடப்பவையாக இருக்கின்றன.  தன் முதலாளி சம்பாதிப்பதற்காக கார் ஓட்டுனர் தூக்கமில்லாமலும், ஓய்வில்லாமலும் வாகனம் ஓடுவது தான் இது போன்ற விபத்துக்களுக்கு காரணம். எனவே நடுநிசிக்கு பிறகு விடியற்காலை ஐந்து மணி வரை சாலைகளில் கார் ஓடுவதை நிறுத்தவேண்டும். அம்புலன்ஸ், பஸ், லாரி, வேன் போன்ற வாகனங்களை வழக்கம் போல் அனுமதிக்கலாம். கார் மட்டும் ஐந்து மணி நேர தூக்கத்திற்குப் பின் - ஓய்விற்குப்பின் ஓட்டுவது தான் அதில் பயணம் செய்பவர்கள்  அவர்கள் போய் சேரவேண்டிய இடத்திற்கு நலமுடன் போய் சேரமுடியும்.                                                                                    

கருத்துகள் இல்லை: