புதன், 21 டிசம்பர், 2011

சாகித்ய அகாதமி விருது பெற்ற தோழர். சு.வெங்கடேசனுக்கு பாராட்டுகள்...!

               2011க்கான தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு அவர் எழுதிய ''காவல் கோட்டம்'' நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள செய்தி மகிழ்ச்சியையும் பெருமித்தையும் ஒருசேர எமக்கு வழங்கியுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளரான அவர் பெற்றுள்ள இவ்விருது எம் அமைப்புக்கே கிடைத்த விருதாக எமது இயக்கத்தின் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களும் பெருமையுடன் கொண்டாடுகிறார்கள்.
          தமிழ் நாவல் வரலாற்றில் அழுத்தமான தடம் பதித்த காவல் கோட்டம் நாவலுக்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது இன்னும் சிறப்பான செய்தியாகும். அறுநூறு ஆண்டுகால மதுரையின் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு கி.பி.1300லிருந்து 1900 வரையிலான காலத்தின் கதையை அரசியல், சமூகவியல், இனவரைவியல் கண்ணோட்டத்துடன் இந்நாவல் பேசுகிறது. வரலாறும் புனைவும் பிரித்தறிய முடியாதபடிக்குப் பின்னிச்செல்லும் நுட்பமான அழகியலோடு இந்நாவல் படைக்கப்பட்டுள்ளது. தாதனூர் என்னும் சிறு கிராமத்து மக்களின் களவும் காவலுமான வாழ்வினூடாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மதுரையைக் கைப்பற்றுவதில் துவங்கி ரேகைச்சட்டத்தால் களப்பலியாகும் ஒரு மக்கள் குழுவின் வரலாறாகவும் இந்நாவல் விரிகிறது. என்னதான் முயன்றாலும் ஆங்கிலேய மூளைகளால் கணித்திடவே முடியாத ஒரு எளிய ஆனால் வலுவான உள்ளூர் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்வதாகவும் காவல் கோட்டம் அமைகிறது. ஏற்கனவே இருந்த பண்பாட்டை அழித்து புதிதாக எதையும் தராத ஆங்கில அரசு என்று கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்ட ஒரு வரலாற்று உண்மையின் கலாபூர்வமான வடிவமாகவே காவல் கோட்டம் நாவல் அமைந்துள்ளது. 1050 பக்கங்களில் விரியும் ஒரு பெருங்கதையாக ஓர் உள்ளூர் வரலாறு சொல்லப்பட்டிருப்பது தமிழில் அரிதாக நடக்கும் படைப்பு முயற்சியாகும்.ஏழு ஆண்டுகால கடுமையான ஆய்வுகளையும் உழைப்பையும் உண்டு செறித்து எழுந்து நிற்கும் காவல் கோட்ட்த்துக்காக இவ்விருது வழங்கப்பட்டிருப்பது அந்த உழைப்புக்குக் கிடைத்த உரிய அங்கீகாரமாகவே தமுஎகச கருதுகிறது.
ஓட்டையிடாத புல்லாங்குழல், பாசி வெளிச்சத்தில், ஆதிப்புதிர் போன்ற தொகுப்புகளின் வழியே ஒரு நுட்பமான கவிஞராக வெளிப்பட்ட எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொடர்ந்து ஆட்சித்தமிழ்,கலாச்சாரத்தின் அரசியல், கருப்பு கேட்கிறான் கிடா எங்கே, மதமாற்றத்தடைச்சட்டம், சமயம் கடந்த உ.வே.சா போன்ற பல நூல்களால் ஓர் ஆழமிக்க ஆய்வாளராக முகம் காட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக அவர் ஆற்றிவரும் களப்பணிகள் அவரது இன்னொரு முகம்.தன் ஆவேசமிக்க உரைகளின் மூலம் அணிகளை மன எழுச்சிகொள்ள வைப்பவர் சு.வெங்கடேசன்.
     2011 செப்டம்பரில் விருதுநகரில் நடைபெற்ற தமுஎகசவின் மாநில மாநாட்டில் அவர் தமுஎகசவின் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்வளவு இளம் வயதில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தமிழ்ப் படைப்பாளி என்கிற பெருமையையும் இதன்மூலம் அவர் பெறுகிறார்.
    தமுஎகச படைப்பாளிகள் இன்னும் உற்சாகத்துடன் தம் படைப்பு முயற்சிகளில் ஈடுபட இவ்விருது தூண்டுதலாக அமையும். தோழர் சு.வெங்கடேசனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் ஆவிசேரக் கட்டியணைத்துத் தெரிவித்துக்கொள்கிறது.
அருணன்                          ச.தமிழ்ச்செல்வன்
கௌரவத்தலைவர்           மாநிலத்தலைவர்

4 கருத்துகள்:

Lakshmanan17 சொன்னது…

1972-ல் தனது 38-ஆவது வயதில் தோழர் ஜெயகாந்தன் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படைப்புக்கு சாகித்திய அகாடமி விருது பெற்று பெருமை பெற்றார். வென்கடேசனுக்கு தற்போதைய வயது 39 என அறிகிறேன்.
லட்சுமணன் சேலம்

Lakshmanan17 சொன்னது…

1972-ல் தனது 38-ஆவது வயதில் தோழர் ஜெயகாந்தன் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படைப்புக்கு சாகித்திய அகாடமி விருது பெற்று பெருமை பெற்றார். வென்கடேசனுக்கு தற்போதைய வயது 39 என அறிகிறேன்.
லட்சுமணன் சேலம்

Lakshmanan17 சொன்னது…

1972-ல் தனது 38-ஆவது வயதில் தோழர் ஜெயகாந்தன் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படைப்புக்கு சாகித்திய அகாடமி விருது பெற்று பெருமை பெற்றார். வென்கடேசனுக்கு தற்போதைய வயது 39 என அறிகிறேன்.
லட்சுமணன் சேலம்

Lakshmanan17 சொன்னது…

1972-ல் தனது 38-ஆவது வயதில் தோழர் ஜெயகாந்தன் “சில நேரங்களில் சில மனிதர்கள்” படைப்புக்கு சாகித்திய அகாடமி விருது பெற்று பெருமை பெற்றார். வென்கடேசனுக்கு தற்போதைய வயது 39 என அறிகிறேன்.
லட்சுமணன் சேலம்