ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஆப்பிள் டிஜிட்டல் வியாபாரி மரணம் - உலகமே அழுகிறது...!

                     சென்ற புதன் கிழமை அன்று, டிஜிட்டல் உலகின் நாயகன் என்று சொல்லப்படுகிற - ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணமடைந்தார். பாவம்.. 56 வயதிலேயே மரணடைந்து விட்டார். நம்முடைய அனுதாபங்களையும் அஞ்சலியையும் உரித்தாக்குகிறோம். 
                இவர் ஐபேட் கருவியை கண்டுபுடித்து,  டிஜிட்டல் யுகத்தில் சாதனைகளைப் படைத்ததால் இன்றைக்கு உலக இளைஞர்களுக்கு அதிகம் அறிமுகம் ஆனவர். கம்ப்யூட்டரைப் பற்றி தெரிந்தவர்களுக்கு, ஆப்பிள் கம்ப்யூட்டர் - ஐபேட் - ஸ்டீவ் ஜாப்ஸ் என அனைத்தும் அறிந்தவர்கள் தான் இன்றைய இளைஞர்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்காக உலகமே அழுதது. கம்ப்யூட்டர் முன்னால் தன நாட்களை கழிக்கும் - தன தோள்களில் கம்ப்யூட்டர்களை தூக்கிக்கொண்டு அலையும் - காதுகளில் சிறு ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு நேரத்தை கழிக்கும் இன்றைய இளைஞர் கூட்டங்களேல்லாம் அவரின் மறைவிற்காக கண்ணீர் சிந்தின. பேஸ் புக்கிலும் ட்வீட்டரிலும்  தங்களின் அஞ்சலியை பதிவு செய்தன. பரவாயில்லை நல்லவிஷயம் தான். ஒருவர் மரணத்தில் - துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக அவர்களை பாராட்டத்தான் வேண்டும்.
                  ஆனால் இவ்வளவும்  தெரிந்த நம் இளைஞர்களுக்கு தங்கள் பக்கத்திலேயே - பசியாலும், நோய்களாலும், அறியாமைகளாலும், சாதிகளாலும், மதங்களாலும், சுரண்டும் ஏகாதிபத்தியத்தாலும் சாகடிக்கப்படும் மக்களை மட்டும் ஏன் இந்த இளைஞர் கூட்டத்தின் கண்களுக்குத்  தெரியவில்லை. சமூகத்தின் மீது பார்வையை செலுத்த முடியாமல், இவர்கள் கண்களை கம்ப்யூட்டர் மறைத்துவிடுகிறதா...?
                     அல்லது... சமூகத்தின் மீது உன் பார்வையை திருப்பாதே.. நீ உன்னை பற்றிமட்டுமே நினை..உன் உயர்வுக்கு கம்ப்யூட்டர் மட்டுமே போதுமானது.. அதை தந்தவர்களை மட்டுமே நீ நினைத்தால் போதுமானது.. என்று மட்டுமே இன்றைய கல்வி - இன்றைய பள்ளிக்கூடம் - இன்றையக் கல்லூரி நம் இளைஞர்களுக்கு கற்றுத்  தருகிறதா என்று தெரியவில்லை.
                 இப்படி சமூகத்தைக் காட்டாத கல்விமுறை - சமூக அக்கறையை சொல்லித் தராதக் கம்ப்யூட்டர் கல்வி முறை நமக்கு எதற்கு..?

1 கருத்து:

SureshT சொன்னது…

இங்கேயும் கொண்டு வந்து விட்டீர்களா? சபாஷ். இனப்படுகொலையை வியாபாரமாக்கி வயிறு வளர்க்கும், விளம்பரம் தேடும் தமிழ் சுயநலவாதிகளை விடவும், இந்த இளைஞர்கள் மோசமானவர்கள் இல்லை.