ஞாயிறு, 2 அக்டோபர், 2011

பிரதமர் - நிதியமைச்சரை நோக்கிய இந்திய கடைகோடி கிராமத்து குடிமகனின் கோபம்..!

          உச்சநீதிமன்றத்தில் கடந்த செவ்வாயன்று (செப்.20) ஒரு விசாரணைக்காக தனது வாக்குமூலம் ஒன்றைத் தாக்கல் செய்த திட்டக்குழு, ஒரு நாளைக்கு கிராமப்புறத்தில் ரூ.25-க்கும், நகர்ப்புறத்தில் ரூ.32-க்கும்  மிகாமல் வருமானம்  இருப்பின் அவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள்  என்று சொல்லி இருக்கிறது. ஒருவர் தனது உணவுக்காகவும் கல்விக்காகவும் மருத்துவத்துக்காகவும் செலவிட கிராமப்புறமாக இருந்தால் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.25 வரை ஈட்டினால் போதும் என்று கூறியிருப்பதை கேள்விப்பட்ட, இந்தியாவின் வடபகுதியில் கடைகோடியில் இருக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ராம்பன் மாவட்டத்தில் உள்ள பாகோடே கிராமத்தில் வசிக்கும் தர்விந்தர் சிங் என்பவர் கோபமுற்று,  தலா  ரூ. 26 - க்கு வரைவு ஓலை மூன்றை வங்கியில் எடுத்து பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறார்.
            அதுமட்டுமல்லாமல், இவ்வளவு குறைவான பணத்தை வைத்துக் கொண்டு ஒரு நாளை எப்படி கழிக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டு, அந்த வரைவு ஓலையுடன் ஒரு கடிதத்தையும் இணைத்து அனுப்பியிருக்கிறார்.
                கிராமப்புறத்தில் வாசிப்போர்க்கு ரூ. 25 போதுமானது என்று மத்திய திட்டக்குழு உச்சநீதிமன்றத்திற்கு கொடுத்த வாக்குமூலம் வாயிலாக  தாங்கள் சொல்லியிருப்பது என்பது அர்த்தமற்றது..... நியாயமற்றது....நடைமுறைக்கு ஒத்துவராதது ஆகும். எனவே உச்சநீதிமன்றத்தில் கொடுத்த அந்த வாக்குமூலத்தை திரும்பப்பெறவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
         தாறுமாறாகப் போகும் அரசை, இது போல் குடிமக்கள் தட்டிக்கேட்பது என்பது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

             அதேப்போல், சோனியா காந்தி தலைமையிலான தேசிய ஆலோசனை பேரவையின் உறுப்பினர்களான அருணா ராய் மற்றும் ஹர்ஷ் மாந்தர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், வறுமைக்கோடு பற்றிக்  கொடுத்த வாக்குமூலத்தை, அதை கொடுத்த திட்டக்குழு துணைத்தலைவர் அலுவாலியாவே திரும்பப்பெறவேண்டும் அல்லது துணைத்தலைவர் பதவியை விட்டு விலகவேண்டும் என்றும் கோரியுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.                       

கருத்துகள் இல்லை: