ஞாயிறு, 19 ஜூலை, 2015

பொதுமக்களின் மானியத்தை பறிக்கத்துடிக்கும் ''இம்சை அரசன்''


              பல காலமாக உலகவங்கி மற்றும் சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றின் கண்களை உருத்திக்கொண்டிருந்த பொதுமக்களுக்கு வழங்கப்படும்   உணவுப்பொருட்களுக்கான மானியமும், சமையல் காஸ் மீதான மானியமும், விவசாயப்பொருட்கள் மீதான மானியமும், எரிபொருட்கள் மீதான மானியமும் இன்று நரேந்திரமோடியையும், அவரது கூட்டாளிகளான இந்திய பெருமுதலாளிகளையும் உருத்திக்கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதன் விளைவாகத்தான் விவசாயப்பொருட்கள் மீதான மானியத்தையும், எரிபொருட்கள் மீதான மானியத்தையும் படிப்படியாக குறைத்துவந்தாலும், ஏறக்குறைய நாடுமுழுதும் ஒட்டுமொத்த  பொதுமக்களுக்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயுவிற்கு கொடுக்கப்படும் மானியத்தை ஒரேயடியாக பிடுங்கிவிடவேண்டும் என்று நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து துடித்துக்கொண்டிருக்கிறார்.
              தேர்தல் காலத்தில்  இவர், தான் ஆட்சிக்கு வந்தால் எரிவாயுவிற்கான மானியத்தை வங்கிக்கணக்கில் போடும் முறையை ஒழித்துக்கட்டுவேன் என்று சொல்லி நாடு முழுதும் பிரச்சாரம் செய்து வந்தவர், வெற்றிபெற்றவுடன் தேர்தல் காலத்தில் தான் சொன்னதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டார். சென்ற காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் செய்ததை காட்டிலும் அதிவேகமாக செய்யத்தொடங்கினார். அதில் ஒன்று தான் எரிவாயு மானியம் வெட்டு. அடாவடியாக மானியம் முழுமையும்  வெட்டினால் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் என்று தெரிந்திருக்கும் மோடி நீங்களாகவே மானியத்தை விட்டுக்கொடுங்கள் என்று கேஞ்சிப்பார்த்தார். அதற்காக பெட்ரோல் பங்க்களிலும், தொலைபேசிகளிலும் விளம்பரமும் செய்துபார்த்தார். ஆன்லைனில் ''GIVEITUP'' என்று பதிவு செய்யுங்கள் அல்லது  ''GIVEITUP'' என்று எஸ்.எம்.எஸ் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தார். ஆனால்  அவர் எதிர்ப்பார்த்தபடி  வெற்றிகிட்டவில்லை.
              எனவே நரேந்திரமோடி  தந்திரமாக வேறொரு சூழ்ச்சியில் இறங்கினார். பொதுமக்கள் தங்கள் தேவைக்கு எரிவாயு சிலிண்டரை  தொலைபேசியிலோ அல்லது கைப்பேசியிலோ பதிவுசெய்யும் போது, வழக்கமாக உங்கள் மானியத்தை விட்டுக்கொடுத்து ஏழைகள் வீட்டில் அடுப்பெரிய உதவுங்கள் என்ற விளம்பரத்திற்கு பிறகு, # கேஸ் சிலிண்டரை பதிவு செய்ய எண் ஒன்றை அழுத்தவும்... # ஆதார் எண்ணை பதிவு செய்ய எண் இரண்டை அழுத்தவும், # நீங்கள் பதிவு செய்த விபரத்தை தெரிந்துகொள்ள எண் மூன்றை அழுத்தவும்... என்ற வேண்டுகோளுக்கு தகுந்தார் போல் மக்கள் பதிவு செய்வார்கள். ஆனால் சமீபகாலமாக எரிவாயு சிலிண்டரை பதிவு செய்யும் போது, மேலே சொன்ன  விட்டுக்கொடுக்கும் விளம்பரத்திற்கு பிறகு, வழக்கமான அந்த மூன்று வேண்டுகோளுக்கு  முன்பாகவே  புதிதாக ஒரு  வேண்டுகோளையும் மக்கள் முன்பு ''தந்திரமாக'' வைக்கிறார் ''நரிதந்திர'' மோடி....!
           #  மானியத்தை விலக்கிக்கொள்வதற்கு எண் சீரோவை அழுத்தவும்...!!!!!???? என்று  கூசாமல் அன்புக்கட்டளையாக வேண்டுகோள் வைக்கிறார். எனவே பொது மக்களே... கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போது  நிதானமாகவும், பொறுமையாகவும் செயல்படுங்கள். அவசரத்தில்  ''பூஜ்ஜியத்தை'' அழுத்திவிட்டால், உங்கள் எரிவாயுவுக்கான மானியமும் ''பூஜ்ஜியமாக'' போய்விடும்.... ஜாக்கிரதை... எச்சரிக்கை....!

கருத்துகள் இல்லை: