புதன், 17 செப்டம்பர், 2014

நரேந்திரமோடிக்கு மக்கள் அளித்த பிறந்தநாள் பரிசு...!

                         இன்று ''வளர்ச்சி நாயகன்'' நரேந்திரமோடியின் பிறந்தநாள். முன்னெப்போதும் இல்லாத திருநாளாய் ஒரு ''மகாராஜாவின்'' பிறந்தநாளாய் இன்று இந்த பிறந்தநாளை மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் மகாராஜாவின் பிறந்தாநாளை அண்டை நாட்டு மன்னர்களை எல்லாம் அழைத்துக்கொண்டாடுவார்கள். அது போல் தான் மோடியும் தன் சொந்த மாநிலத்தில் மிகக் கோலாகலமாக விழா ஏற்பாடுகளை செய்து, தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை சிறப்பு செய்ய நம் அண்டை நாடான மக்கள் சீனத்தின் ஜனாதிபதியை அழைத்திருக்கிறார். அவரும் இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு கிளம்பிவிட்டார். நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு நடத்தும் இந்திய குடியரசுத்தலைவர் கொடியேற்றும் குடியரசு தினவிழாவை மட்டும் தான்  அண்டை நாடுகளின் தலைவர்கள் - பிரதமர் அல்லது ஜனாதிபதியை அழைத்து ஒரு சம்பிரதாய சடங்காக கோலாகலமாக கொண்டாடுவது என்பது வழக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் இப்போது இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பிரதமரின் பிறந்தநாள் விழாவிற்கு அண்டை  நாட்டின் தலைவரை அழைத்து கொண்டாடி தன்னை இந்த நாட்டின் மக்களை கவர்ந்த ''கதாநாயகனாக'' உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார் நரேந்திரமோடி என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. 
               ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே குஜராத் மாநிலத்தில் ஒரே தடபுடல் ஏற்பாடுகள் தான். பிறந்தநாள் அன்று மோடிக்கும், மக்களுக்கும் விநியோகம் செய்ய ஏராளமான  லட்டுகள்  தயாரிக்கப்படுகின்றன. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கும் சீன ஜனாதிபதிக்கென்று ஸ்பெஷலாக உணவு தயாரிப்பதற்கு ஏகப்பட்ட ''மெனு'' தான் போங்க. ஆனால் அவருக்கும் கூட அசைவம் கலக்கப்படாத ''சுத்த-சைவ பிராமணாள் ஓட்டல்'' சாப்பாடு தான் தாயாரிக்கப்படுகிறது என்றால் பாருங்களேன்.
              இவ்வளவு ஏற்பாடுகளுக்கு நடுவில், இந்திய மக்களும் தன்னை வளர்ச்சி நாயகனாக காட்டிக்கொண்டு தங்களை வளைச்சி வளைச்சி ஓட்டுக்களை வாங்கி பிரதமராக உட்கார்ந்த நரேந்திரமோடிக்கு நேற்றைய தினம் ''இடைத்தேர்தல் முடிவுகள்'' மூலம் ஒரு மறக்கமுடியாத பரிசினை தந்திருக்கிறார்கள் என்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது. சென்ற ஞாயிறன்று நாடு முழுவதும் 10 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதி, 33 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் மோடி - அமித்ஷா கூட்டாளிகளின் தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சிக்கு பெருத்த தோல்வியை தான் இந்திய  மக்கள் மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசாக மோடிக்கு கொடுத்திருக்கிறார்கள். நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்று 80 நாட்களை கடந்த நிலையில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும், 100 நாட்களை கடந்துவிட்ட நிலையில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலிலும் தங்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற்று ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடிக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷாவிற்கும், அவரது கொழுப்பான பேச்சுக்கும் மக்கள் பலத்த அடி கொடுத்திருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
மோடி சாயம் வெளுத்துப்போச்சு.... டும்.... டும்.... டும்....!                
                             ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு.... டும்.... டும்.... டும்....!                  

கருத்துகள் இல்லை: