சனி, 16 நவம்பர், 2013

''கிரிக்கெட் கடவுள்'' சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே...!

      

 
       கடந்த ஒரு வாரகாலமாகவே நாட்டுல ஒரே பரபரப்பாகவே இருக்கிறது. கேஸ் விலை  ரூ.1000/-தை தாண்டியபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. வெங்காயம் விலை ரூ.100/-ஐ தொட்டபோதும் மக்களிடம் இவ்வளவு பரபரப்பு இல்லை. ஆனால் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாராம். என்ன ஆரவாரம்... என்ன பரபரப்பு... ஊரெல்லாம் சச்சின் பேச்சு தான். அதுவும் இன்றைய இளைஞர்கள்  சச்சின் ஓய்வு பெறுகிறாரே என்று வருத்தப்பட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிகொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
           அதிலும் இளைஞர்களெல்லாம் சும்மா இருந்தாலும் இங்கிருக்கக்கூடிய ஊடகங்கள் சும்மாயிருப்பதில்லை. இவர் ஏதோ தன்னலம் கருதாமல் மக்களுக்காக உழைத்தவர் போலவும், இவர் பணம் ஏதும் சம்பாதிக்காமல் கிரிக்கெட் விளையாட்டை காப்பாத்தி வைத்திருப்பது போலவும் இந்த ஊடகங்களெல்லாம் சேர்ந்து டெண்டுல்கரை ''கிரிக்கெட் கடவுள்'' ரேஞ்சுக்கு உயர்த்தி தங்கள் இலாபத்தை அதிகரிக்க சும்மாயிருக்கிற  இளைஞர்களையும்  உசுப்பெற்றிக்கொண்டுத் திரிகிறார்கள்.
           சச்சின் டெண்டுல்கர் யார்...? சுதந்திரப்போராட்டத் தியாகியா...? அல்லது கலை, இலக்கியம், அறிவியல், இராணுவம்  அல்லது பொதுச்சேவை போன்ற ஏதாவது ஒரு துறையில் சாதனை புரிந்தவரா...? அல்லது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் பணி செய்தவரா...? அல்லது சாதாரண மக்களின் உயர்வுக்காக பாடுபட்டவரா....? அல்லது இவர் தான் ஒரு கவுரவ எம்.பி-யா இருக்கிறாரே, பாராளுமன்றத்தில என்றைக்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியிருப்பாரா...அல்லது பாராளுமன்றத்துல அவர்களுக்காக பேசியிருப்பாரா....? அப்படி எதுவும் இல்லையே...! ஒரு சாதாரண கிரிக்கெட் வீரர் தானே. அதுவும் தன்னுடைய நாட்டுக்காகவோ, தன்னுடைய டீமுக்காகவோ ஆடமாட்டார். தன்னுடைய சொந்த சாதனைகளை உயர்த்திக்கொள்வதற்காக மட்டுமே இதுவரை விளையாடியவர். இவர் மும்பை அரசியல்வாதிகளின் செல்லப்பிள்ளையாகவும் பெருமுதலாளிகளின் செல்லப்பிள்ளையாகவும் இருப்பதனால் தான்,  இவரைவிட சிறப்பாக விளையாடிய முன்னணி கிரிக்கெட் வீரர்களெல்லாம் ஓரங்கட்டப்பட்டு சச்சின் மட்டுமே இன்றுவரை முன்னிறுத்தப்படுகிறார். இப்போதும் கூட சச்சினுக்கோ... அவரது காட் பாதருக்கோ... ஆட்சியாளர்களுக்கோ இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதில் மனமில்லை... விருப்பமில்லை....! பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாடுகளிலிருந்தும் முன்னணி  விளையாட்டுவீரர்களிடமிருந்து விமர்சனங்கள் வரவே கட்டாயத்தின் பேரில்தான் ஓய்வு பெறுகிறார் என்பது தான் உண்மை. விட்டா சாதனை பண்ணுகிறேன் பேர்வழி என்று அறுபது வயது வரை ஆ...டி...கிட்டே இருந்திருப்பாரு.
 கிரிக்கெட்டைத் தவிர இவர் செய்த மற்ற சாதனைகளையும் பாருங்க.

     (1) இந்திய தேசியக்கொடியை தன் சட்டையில் பொறித்துக்கொண்டு, இந்திய  தேசியக்கொடியை கையில் பிடித்துக்கொண்டு கிரிக்கெட் விளையாடி சம்பாதித்த  பணத்தையும், பல்வேறு விளம்பரங்களின் மூலம் சம்பாதித்தப் பணத்தையும்  வெளிநாடுகளில் முதலீடு செய்து கொண்டிருக்கும் ஒரு நல்ல ''தேசபக்தர்'' தான் இன்றைக்கு ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர்.

           (2) கடந்த 2003 - ஆம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பந்தயக்கார் வீரர் மைக்கேல் ஷூமேக்கர் பெர்ராரி அன்றைக்கே  75 இலட்சம் மதிப்புள்ள   ''360 Modena Ferrari'' காரை அன்பளிப்பாக வழங்கினார். பிராட் மேன் சாதனையைச் சமன் செய்ததையொட்டி கார் வழங்கப்பட்டது. அன்று இவர் அந்த காரை இந்தியாவிற்கு கொண்டுவர அவர் 120% இறக்குமதி வரியாக ரூ.1.13 கோடி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அன்பளிப்பாக வந்த காருக்கு வரிவிலக்கு கேட்டு அன்றைய மத்திய அரசுக்கு விண்ணப்பித்தார். உடனே மத்திய அரசும்  அவருக்கு வரி விலக்கு அளித்தது. இப்படியாக  அரசிடம் வரிவிலக்கு பெற்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்த அந்த காரை சச்சின் பின்னர் சூரத்தைச் சேர்ந்த ஜெயேஷ் தேசாய்க்கு விற்று விட்டார்.      இதற்காக அன்றே சச்சின் அரசுக்கு மூலதன லாபவரி கட்டியிருக்கவேண்டும். ஆனால் அவர் அந்த வரியை கட்டவில்லை.

          (3) சச்சின் உலகிலேயே மிகப்பெரும் ''பணக்கார'' கிரிக்கெட் வீரர் என்பதை எல்லோரும் அறிந்ததே. அப்படிப்பட்டவர்தான்  தன்னுடைய சொந்த ஊழியர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிய செலவுக்கான ரூ.57,969 - க்கு வருமான வரி விலக்கு கேட்டிருக்கிறார். தொலைபேசி, கேளிக்கைச் செலவுகள் ஆகியவற்றுக்கு ரூ.50ஆயிரமும், இவரிடம்  உள்ள 40 கார்களுக்கும் ஆன  செலவுகளுக்காக ரூ.1,42,824-ம் வரிவிலக்கு கேட்டுள்ளார். ஆனால் வருமானவரித்துறை இவற்றையெல்லாம்  நிராகரித்துவிட்டது.

        (4) சச்சின் டெண்டுகர் 2001-02 மற்றும் 2004-05 நிதியாண்டுகளில் ESPN - Star Sports, PepsiCo மற்றும் Visa நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்ததற்காக அந்நிய செலாவணியாக Rs.5,92,31,211/- பெற்றிருக்கிறார். இந்த வருமானத்திற்காக அவர்  வருமான வரியாக மட்டும் ரூ.2,08,59,707 செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறையினர் [(CIT-A)- Commissioner of Income Tax-Appeal] நோட்டிஸ் கொடுத்தனர்.
                  இதை எதிர்த்து நம்ம சச்சின் என்ன செய்தார் தெரியுமுங்களா...?  ''அய்யா...! எனக்கு கிரிக்கெட் ஆடுவது தான் முதல் தொழில்னு நீங்களெல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கீங்க.  அது நெசமில்லீங்க.  அடிப்படையில நான் ஒரு கலைஞனுங்க... நடிகனுங்க... நடிப்புதான் என் பிரதான தொழிலுங்க. இந்த  கிரிக்கெட்டெல்லாம் அப்புறம்தானுங்க. அதனால என்னோட  நடிப்புத் தொழில் மூலமா நான்  சம்பாரிச்ச பணத்துக்கு  under Section  80RR - Income Tax Act -ன்  படி வரிச்சலுகை குடுங்க அய்யா..."  அப்படின்னு கேட்டவர் தான் கிரிக்கெட் ஆட்டக்காரர் என்று நீங்க நினைத்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் என்பதை மறந்துவிடாதீர்கள். அவர் கொடுத்த பதில் கடிதத்தை பெற்று அவரின் நடிப்புத்தொழிலைப் பற்றி ''தீர'' விசாரிச்ச வருமானவரித்துறையும்  "ஆமாங்க நெசமாவே இவர் ஒரு நடிகர்தானுங்க. நாங்க தான் தப்பாப் புரிஞ்சிகிட்டோம்'' என்று சான்றிதழ் கொடுத்து, வரியாக கேட்ட அந்த இரண்டு கோடி சொச்சத் தொகையையும் கட்டவேண்டாம் என்று சொல்லி வரிச்சலுகையும் கொடுத்துட்டாங்க.
        சச்சினுக்காக வருத்தப்படும் வாலிபர்களே... இப்படிப்பட்டவரைத் தான் ஊடகங்களெல்லாம் ''கிரிக்கெட் கடவுள்'' என்று சொல்லி உங்களை உசுப்பேத்தித் திரிகிறார்கள். நீங்களும் இப்படிப்பட்டவருக்காக  வருத்தப்படுகிறீர்கள்.
     அடுத்தவர்களுக்காக வருத்தப்படுங்கள்... வருத்தப்படவேண்டாம் என்று சொல்லவில்லை. நீங்கள் அடுத்தவர்களுக்காக வருத்தப்பட்டால்தான் மனிதன். ஆனால் யாருக்காக வருத்தப்படவேண்டும் என்பது தான் என் கேள்வி...?

3 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

உங்க கட்சியில் அல்லது உங்களுக்கு தெரிந்து 100% நல்லவர்கள் யாரையாவது காட்டுங்கள் பார்ப்போம். எதுக்கொடுத்தாலும் மறியல் போராட்டம்னு சொல்லி மக்களை கஷ்டபடுத்துற கூட்டத்தை விட அவர் எவ்வளவோ பரவாயில்லை.

காரிகன் சொன்னது…

நன்றாக மண்டையில் அடிக்கும் பதிவு. ஆனால் இதை யார் கேட்கப்போகிறார்கள்? வழக்கம் போல உங்களுக்கு முட்டாள் என்ற பட்டம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

rajamelaiyur சொன்னது…

இறந்த தந்தைக்கு மகன் செய்ய வேண்டிய
கடமைகளை செய்து முடித்த கையோடு அடுத்த
நாளே விமானம்
ஏறி நாட்டுக்கு ஒரு விளையாட்டு வீரனா ஆற்ற
வேண்டிய கடமையை செய்ய போனாரு சச்சின்.
உங்க அரசியல்"வியாதி"கள் யாரைவாது இதுபோல காட்டுங்கள்???