புதன், 10 ஏப்ரல், 2013

சுவீடன் கம்பெனிகளுக்கு ‘தரகராக’ செயல்பட்டார் ராஜீவ் காந்தி....! - ‘விக்கிலீக்ஸ்’

             நாட்டின் பிரதமராவதற்கு முன்பு விமானியாக பணிபுரிந்த போது சுவீடன் நாட்டு நிறுவனங்களுக்கான தரகராக ராஜீவ்காந்தி செயல்பட்டிருக்கிறார் என்று ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் அதிரடித் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. 

         இரண்டு நாட்களுக்கு முன்பு ‘தி இந்து’ நாளிதழ் வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களின்படி 1970களில் ஸ்வீடன் நிறுவனமான சாப்-ஸ்கானியா இந்தியாவுக்கு போர் விமானங்களை விற்பனை செய்ய முன்வந்தது. இதில் ராஜீவ் காந்தி இடைத்தரகராக செயல்பட்டிருக்கிறார். இந்தியாவின் போர் விமான கொள்முதலில் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் 1975ஆம் ஆண்டு ஆவணத்தில், சுவீடன் தூதரக அதிகாரி ஒருவர், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானியாக பணிபுரிந்து வந்த ராஜீவ் காந்தி ‘தொழில்முனைவோர்’ என்ற பெயரில் விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருந்தார் என்று கூறியுள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான ஆவணங்களையும் இந்து நாளிதழ் வெளியிட்டிருக்கிறது.ஆனால் இதை நிராகரித்திருக்கும் காங்கிரஸ், விக்கிலீக்ஸின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதாகும். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளது.
          மன்மோகனுக்கு நெருக்கமானவர்கள் : நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக எம்.கே.நாராயணன் 2005-ல் நியமிக்கப்பட்டபோது பிரதமருக்கான நெருக்கமான இடத்தில் ‘கேரள மாஃபியா’ உட்கார்ந்திருக்கிறது என்று அமெரிக்கத் தூதராக இருந்த முல்போர்டு கருத்து தெரிவித்த ஆவணத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது.எம்.கே.நாராயணன் 2005 - ஆம் ஆண்டில் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது ஏற்கனவே பிரதமரின் முதன்மை ஆலோசகராக டிகேஏ நாயர் இருந்தார். அவர் ஒரு கேரளக்காரர். பொதுவாக மத்திய அரசு வட்டாரங்களில் இந்தி மொழி பேசுவோர் ஆதிக்கமே அதிகம். ஆனால் தற்போது மன்மோகன்சிங்குக்கு மிக நெருக்கமான இடத்தில் கேரளத்தைச் சேர்ந்த 2 பேர் செயல்படுவது ஆச்சரியாமக இருக்கிறது. இவர்கள் ‘கேரள மாஃபியா’ என்று முல்போர்டு அமெரிக்காவுக்கு அனுப்பிய ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக் கிறது.
          ‘சிஐஏ’விடம் நிதி உதவி கோரிய பெர்னாண்டஸ் : இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசர நிலை நடை முறையில் இருந்த போது அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக அமெரிக்காவின் நாசகர உளவு அமைப்பான சிஐஏ வின் நிதி உதவியை முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கோரியதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டிருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் பாஜக கூட்டணி ஆட்சிக் காலத்தில்  மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1975-ல் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் அவசரநிலை அமல் படுத்தப்பட்டது. அதை எதிர்த்து கடுமையாகப் போராட்டம் நடத்தி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர் பெர்னாண்டஸ். அமெரிக்காவை எதிர்த்து ‘சோசலிசம்’ பேசக் கூடியவராக அப்போது பார்க்கப்பட்டார். ஆனால் அதே பெர்னாண்டஸ் அவசரநிலைக் காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கைகளுக்காக அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏவிடம் நிதி கோரினார் என்கிறது விக்கிலீக்ஸ். விக்கிலீக்ஸ் தகவலின் படி, 1975 ஆம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியன்று பிரெஞ்சு தொழில்துறை அமைச்சர் மான்பிரெட் துரல்ச்சை பெர்னாண்டஸ் சந்தித்துப் பேசியிருக்கிறார். அப்போது இந்திய அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு பிரெஞ்சு அரசின் உதவியை பெர்னாண்டஸ் கோரியிருக்கிறார். ஆனால் பிரெஞ்ச் அரசு உதவி செய்ய மறுக்கிறது. இதைத் தொடர்ந்து சிஐஏவின் தொடர்புகளை ஏற்படுத்தித் தருமாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கேட்டிருக்கிறார். மேலும் இந்த உரையாடலின் போது இந்திய அரசுக்கு எதிராக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபட 300 பேர் தம்முடன் இருப்பதாகவும் தென்னிந்தியாவில் ரயில்வே பாலங்களையும் மும்பை- புனே இடையேயான ரயில் பாலத்தையும் தகர்த்திருக்கிறோம் என்றும் பெர்னாண்டஸ் கூறியுள்ளார் என அதில் இடம்பெற்றுள்ளது.
        இந்திரா வீட்டில் அமெரிக்க உளவாளி : இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் இந்திரா காந்தியின் அரசியல் நடவடிக்கைகளை புரிந்து கொள்ள முடியாமல் ஒரு பக்கம் அமெரிக்கா கடுமை யாக திணறியபோதும், இந் திராவின் வீட்டுக்குள்ளேயே கிட்டத்தட்ட 2 ஆண்டு காலத்திற்கு தனது உளவாளியை வைத்திருந்தது என்ற அதிர்ச்சித் தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 1975ம் ஆண்டு முதல் 1977 வரை இந்த உளவாளி, இந்திரா காந்தியின் வீட்டுக்குள் ஊடுருவியிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவிக்கிறது. 1975ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி அவசர நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா காந்தி. அப்போது அவருக்கு பின்பலமாக இருந்தவர்கள் இளையமகன் சஞ்சய் காந்தியும், ஆர்.கே.தவாணும்தான். இதை இந்திரா வீட்டில் நுழைந்த உளவாளி மூலம் உறுதிப்படுத்த முடிந்ததாக அமெரிக்கத் தூதரகத்தகவல் தெரிவித்துள்ளது. நெருக்கடி நிலைக்குப் பிறகு சஞ்சய் காந்தியின் பிடி காங்கிரஸ் கட்சிக்குள்ளும், ஆட்சி அதிகாரத்திற்குள்ளும் வலுத்து வருவதாகவும் அந்த உளவாளி தெரிவித்ததாக கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 
 நன்றி :

கருத்துகள் இல்லை: