ஞாயிறு, 10 ஜூன், 2012

''இந்தி எதிர்ப்புப் போராட்டம்'' - ஓர் அரசியல் வியாபாரம் - தமிழை ஒழித்துக் கட்டி ஆங்கிலத்தை தான் வளர்த்தது...!


''யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
 இனிதாவது எங்கும் காணோம்'' - இந்த வரிகள் பாரதியின் வரிகள். மற்ற மொழிகளை காட்டிலும்  இனிதானது தமிழ் மொழி என்று பாரதி தமிழ் மொழியின் இனிமை குறித்து செய்த பிரகடனம். அவரது தாய் மொழியாம் தமிழ மொழி மீதான பற்றுதல் அல்லது ஈடுபாடு காரணமாகவோ அல்லது இன்றைய திராவிட கட்சிகளைப் போல் பகட்டுகாகவோ  ஓட்டு அரசியல்களுக்காகவோ பாரதியால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல இது. 
                  பாரதி தமிழ் மட்டும் கற்றவனல்ல. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, பிரஞ்சு போன்ற மொழிகளை கற்றிருந்ததாலும் அறிந்திருந்ததாலும் தான் அவரால் இவ்வாறு எழுதமுடிந்தது.
            அதனால் மொழிகள் எதுவும் நமக்கு எதிரிகளல்ல. எல்லா மொழிகளையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மற்ற மொழிகளின் மீதுள்ள ஈர்ப்பில்  நமது தாய்மொழியை  தூக்கி எரிந்துவிடக்கூடாது.
               ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடந்தது...? நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே 1937 -ஆம் ஆண்டில் ராஜாஜி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி அன்றைய சென்னை மாகாணத்தில் பள்ளிகளில் மீது சட்டத்தின் மூலம்    நடத்தப்பட்ட கட்டாய இந்தி மொழி திணிப்பை எதிர்த்து தந்தை பெரியார் அவர்களும், அன்றைய நீதிக்கட்சியினரும் போராடினார்கள். அன்றைய சூழ்நிலையில் அது சரியானதே. ஒரு மொழி தெரியாத மக்களின் மீது அந்த மொழியை திணிப்பது என்பது சரியானதல்ல என்பதைத் தான் அந்த  போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
                அனால் பிற்காலத்தில் 1950 - 1960 - களில் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ்நாட்டு மக்களை ஈர்த்து ஆட்சியில் அமர்வதற்கு ''இந்தி எதிர்ப்பை'' ஒரு  ஆயுதமாக பயன்படுத்தியது. அதில் வெற்றியும் கண்டது. ''இந்தி எதிர்ப்பு'' என்ற கோஷம் ஒன்றை மட்டுமே வைத்தே ஆட்சிக்கு வந்த கட்சி தி. மு. க., அன்றைய பிரதமர் நேருவுக்கும் திமுக-வின் இந்த வளர்ச்சி தேவைப்பட்டது. இப்படி திமுக வளர்ந்தால் தான், தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியை தடுக்கமுடியும் என்பது தான் நேருவின் கணக்கு. எந்த மாநிலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்  வளர்ந்தாலும், பற்றி எரியக்கூடிய அளவிலான  அந்த மாநிலம் சம்பந்தமான ஒரு பிரச்சனையை கொளுத்திப்போட்டு ஊதி பெரிதாக கொழுந்துவிட்டு எரியச்  செய்து விட்டு, மக்களை திசைத் திருப்பி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டுவது தான் அன்றைக்கும், இன்றைக்கு காங்கிரஸ்காரர்களின் வேலை.
             அப்படித் தான் நேருவும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஊதிவிட்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியை ஒழித்துக்கட்டி திமுக- வை வளரச்செய்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.  
            அந்த வகையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது தமிழ்நாட்டு மக்களை  ஈர்த்தது என்றே சொல்லவேண்டும். அதிலும் குறிப்பாக மாணவர்களை வெகுவாக ஈர்த்தது. மாணவர்களெல்லாம் திமுக -வின் பக்கம் சாய்ந்தனர். திமுக -வின் இந்த வளர்ச்சி தான்,  காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் அன்றைய முதலமைச்சருமான காமராஜர் அவர்களையே ஒரு மாணவன் மூலம் தோற்கடிக்கச் செய்தது.
            இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது, தமிழக மக்களின் தாய் மொழியாம் தமிழ் மொழியை அழியாமல் வளர்க்க வேண்டும் என்பது தான். அந்த போராட்டத்தின் உள்நோக்கம் அது தான். ஆனால் நடந்தது என்ன...? இந்தி எதிர்ப்பு கோஷத்தை முன் வைத்து ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா தி.மு.கழகம் போன்றக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும், ஹிந்தி மொழியை பள்ளி மற்றும் கல்லூரிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டது. ஆனால், மாறாக தமிழை வளர்ப்பதற்கு பதிலாக ஆங்கிலத்தை தான் வளர்த்தார்கள் என்பது தான் இந்த இரு திராவிடக் கட்சிகளும் செய்த மகத்தான சாதனையாகும்.

கருத்துகள் இல்லை: