செவ்வாய், 22 ஏப்ரல், 2014

இடதுசாரி மாற்று அணியே ஆட்சி அமைக்கும்....!

   
            சென்னையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி பிறந்த சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் மட்டுமல்ல, அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கூட. கல்லூரி நாள்களிலேயே மாணவர் இயக்கத்துடன் தொடர்பு கொண்ட சீதாராமின் அரசியல் பயணம் அவசரநிலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதுடன் தொடங்கியது. மிசாவில் கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர்களில் இவரும் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தின் வலதுகரம். இன்றைய தலைமுறை மார்க்சீய சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். இடதுசாரி இயக்கங்களின் பிரபலமான ஊடகத் தொடர்பாளர்.
''தினமணி'' ஆசிரியர் கே. வைத்தியநாதனுக்கு சீதாராம் யெச்சூரி அளித்த சிறப்புப் பேட்டி:
         "பிளவுக்குப் பிறகு, 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு அரை நூற்றாண்டு காலமாகிறது. இந்த இயக்கத்துக்கான அவசியம் முடிந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?''

          "தேர்தல் வெற்றி தோல்விகளும் அரசியல் பின்னடைவுகளும் ஒரு இயக்கத்தின் வளர்ச்சியையோ செயல்பாடுகளையோ பாதித்துவிடாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடதுசாரி இயக்கங்களின் இன்றியமையாமை இப்போதுதான் உருவாகி இருக்கிறது. இன்று இந்தியா எதிர்கொள்ளும் எல்லாவிதப் பிரச்னைகளுக்கும், இடதுசாரி இயக்கங்கள் வலுவிழந்ததும், எங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்ததும்தான் காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள்.''

"எதனால் அப்படிச் சொல்கிறீர்கள்?''
 
        "எங்களது ஆதரவில் முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்ததுவரை, மன்மோகன் சிங் அரசில் மெகா ஊழல்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது உலகறிந்த ரகசியம்.

        "ஏதோ உங்களது ஆதரவில் இருந்ததுவரை மன்மோகன் சிங் அரசு சிறப்பாக செயல்பட்டது போலப் பேசுகிறீர்களே, எப்படிச் சொல்கிறீர்கள்?''

             கடந்த 60 ஆண்டுகளாக நமது அரசியல் சட்டம் மக்களுக்கு அளிப்பதாகச் சொன்ன எந்தவித உரிமைகளையும் எந்த அரசும் நிறைவேற்றாத நிலையில், 2004இல் இடதுசாரிகளின் ஆதரவுக்கு அடிப்படையான நாங்கள் வடிவமைத்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அம்சங்கள்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம், நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம், கல்விக்கான உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு மசோதா போன்ற எல்லாமே. இந்த அம்சங்களை ஒன்றன்பின் ஒன்றாக மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றியதற்குக் காரணம் எங்களது வற்புறுத்தல்தான். இந்தத் திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர்கள் நாங்கள். பெருமை தட்டிச் சொல்வது அவர்கள்.''

          "2004இல் மன்மோகன் சிங் அரசை ஆதரித்து, ஆட்சியில் அமர்த்தியதற்கு என்ன காரணம்?''

          அந்தத் தேர்தலில், மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களது 61 இடதுசாரி எம்.பி.க்களில் 57 பேர் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்றவர்கள். அப்படி இருந்தும் நாங்கள் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆதரவளித்ததற்குக் காரணம், தேசத்தை எதிர்நோக்கியிருந்த மிகப்பெரிய பிரச்னையான மதவாதம். மத்திய அரசு 2004இல் மீண்டும் மதவாதக் கட்சிகளின் அதிகாரத்திற்கு உள்பட்டிருந்தால், இந்தியாவின் ஒற்றுமையே குலைந்திருக்கும். அதைத் தடுக்க வேண்டிய வரலாற்று நிர்பந்தம் இடதுசாரிகளுக்கு இருந்தது.''

                "நீங்கள் உறுதியாக இருந்திருந்தால் இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்குமா?''

              "அந்தத் தவறை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறோம். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியபோதே நாங்கள் ஆதரவைத் திரும்பப் பெறுவோம் என்று திட்டவட்டமாகக் கூறியிருந்திருக்க வேண்டும். எங்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்துவிட்டது காங்கிரஸ். எங்கள் தயவில் மன்மோகன் சிங் அரசு ஆட்சியில் தொடர்வது தங்களுக்கு பாதகமாக இருக்கிறது என்பதால், கார்பரேட் நிறுவனங்களும் அவர்களது கைப்பாவைகளாக செயல்படும் ஊடகங்களும், எங்களை வெளியேற்றுவதில் குறியாக இருந்தன. கடைசியில் வெற்றியும் பெற்றன.''

         "நீங்கள் 2ஜி முறைகேடுகள் பற்றி விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் உறுப்பினராக இருந்தீர்கள். உங்களது கருத்துப்படி, 2ஜி முறைகேட்டில் மன்மோகன் சிங்கிற்கும், ப. சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என்று கருதுகிறீர்களா?
 
             "தொடர்பு உண்டா இல்லையா என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், அவர்கள் இருவருக்கும் தெரிந்துதான் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு நடந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒப்புதல் வழங்காமல் நிச்சயமாக ஆ. ராசா 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அவர் கையாண்ட வழிமுறைகளைச் செய்திருக்க முடியாது. பிரதமர், நிதியமைச்சர், தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர், அதாவது, மன்மோகன் சிங், ப. சிதம்பரம், ஆ. ராசா ஆகிய மூவர் மட்டுமே கலந்து கொண்ட ஒரு மேல்மட்டக் கூட்டம் நடந்திருக்கிறது. அதைத் தொடர்ந்துதான் ஆ. ராசா அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான வழிமுறையை அறிவிக்கிறார்.''

        "இதை நீங்கள் ஏன் வெளிப்படையாகத் தேர்தல் பிரசார மேடைகளில் கூறவில்லை?''


           "நாங்கள் எங்கள் பிரசாரத்தில் தொடர்ந்து கூறி வருகிறோம். நீங்கள்தான், அதாவது ஊடகங்கள்தான் அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையில் நான் எனது எதிர்க்கருத்தை வன்மையாகவே பதிவு செய்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கையும், நிதியமைச்சர் ப. சிதம்பரத்தையும் ஜே.பி.சி. தலைவர் காப்பாற்ற முயற்சிக்கிறார் என்று தெளிவாகவே எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.''

         "அப்படியானால் உறுப்பினரான நீங்கள் அவர்களை ஏன் விசாரணைக்கு அழைக்க வற்புறுத்தவில்லை? ஆ. ராசாவின் கோரிக்கையை ஏன் வழிமொழியவில்லை?''


             "நாங்கள் பிரதமரையும், நிதியமைச்சரையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அது மறுக்கப்பட்டது. அப்படியானால், நாங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துமூலம் பிரதமரையும், நிதியமைச்சரையும் பதிலளிக்கச் சொல்லுங்கள் என்று கேட்டோம். அதையும் கூட்டுக் குழுவின் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும் ஒன்றுமே தெரியாத புனிதர்களல்ல. 2ஜி முறைகேட்டில் அவர்களது தொடர்பு மறைக்கப்படுகிறது.''

 "இடதுசாரி இயக்கம் நோக்கம் இழந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?

             "நிச்சயமாக இல்லை. சில பலவீனங்களை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்பது வேண்டுமானால் உண்மை. அந்த பலவீனங்களை அகற்றினால் மட்டுமே இடதுசாரி இயக்கத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்பது அதைவிட உண்மை. கடந்த 20 ஆண்டு கால புதிய பொருளாதாரக் கொள்கையின் பாதிப்பு இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தையும், பொருளாதாரத்தின் அடிப்படையையும் ஆட்டம்காண வைத்திருக்கிறது. எல்லோரும் மெகா ஊழல்களையும் முறைகேடுகளையும் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். இந்த முறைகேடுகளுக்குக் காரணம், அரசின் பொருளாதாரக் கொள்கைதான் என்பதை மக்களை உணர வைக்கவும், இதற்கு மாற்றாக மக்கள் சார்ந்த கொள்கைகளை முன்வைக்கவும் இடதுசாரிகளால் மட்டுமே முடியும்.''
 
 ''பொருளாதாரக் கொள்கைகளுக்கும் ஊழலுக்கும் என்ன தொடர்பு?''

             "ஏன் இல்லை. தனியார்மயம் என்று வரும்போது, அதிலும் பல லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும் துறைகளைத் தனியாருக்குத் திறந்துவிடும்போது, நீ, நான் என்று கார்ப்ரேட் நிறுவனங்கள் மத்தியில் போட்டி உருவாகிறது. இதுதான் மெகா ஊழல்களின் ஊற்றுக்கண். நாங்கள் ஊற்றுக்கண்ணை அடைக்க விரும்புகிறோம். ஆம் ஆத்மி கட்சி போன்றவர்கள் ஊழலின் அடையாளங்களை எதிர்த்துப் போராடுகிறார்கள், இதுதான் வித்தியாசம்.''

"அவர்களது போராட்டத்திற்கு இருக்கும் வரவேற்பு உங்கள் போராட்டங்களுக்கு இல்லையே, அது ஏன்? இடதுசாரி இயக்கம் மக்கள் ஆதரவை இழந்துவிட்டதுதான் காரணமா?

           "அல்ல, ஊடகங்கள் எங்களை இருட்டடிப்பு செய்வதுதான் காரணம். விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தை இந்தியா முழுவதிலிருந்தும் உள்ள இரண்டு லட்சம் தொண்டர்களுடன் முற்றுகை இடுகிறோம். அது ஊடகங்களுக்குத் தெரிவதில்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் முன்னுரிமை அளிப்பதில்லை. ஜந்தர் மந்தரில் அண்ணா ஹசாரே தலைமையில் இருபதாயிரம் பேர் கூடியதை இரண்டு வாரங்கள் பெரிய புரட்சி நிகழ்ந்துவிட்டதாக விளம்பரப்படுத்தினார்கள். நீறுபூத்த நெருப்பாக இடதுசாரி இயக்கம் உயிர்ப்புடன்தான் இருக்கிறது.''

"மற்றவர்கள் அடையாளங்களை எதிர்த்துப் போராடுவதாகவும், நீங்கள் மட்டும்தான் கொள்கை ரீதியாகப் போராடுவதாகவும் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

           "புதிய பொருளாதாரக் கொள்கைகளை முன்வைக்கும் முதலாளித்துவவாதிகளுக்கு எதிரான வாதத்தை இடதுசாரிகள் மட்டுமே முன்வைக்கிறோம். விமர்சனங்கள் எதுவுமே ஏனையோரால் எழுப்பப்படுவதில்லை. பாரதிய ஜனதாவோ, ஆம் ஆத்மி கட்சியோ, தி.மு.க., அ.தி.மு.க. போன்ற மாநிலக் கட்சிகளோ அவர்களுக்கு எந்தவித ஆபத்தையும் தரப்போவதில்லை.''

"இதுவரை கடந்த பல தேர்தல்களில் இடதுசாரிகள் தங்கள் அணியில் இருப்பது பெருமை என்று கருதியிருந்த மாநிலக் கட்சிகள் இந்தத் தேர்தலில் உங்களைத் தனிமைப்படுத்தி இருக்கின்றனவே, அது பலமா, பலவீனமா?

           "அவர்களறியாமல் எங்களுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறார்கள். இனிமேல் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இடதுசாரிகள் யாரையும் சார்ந்திராமல், அந்த மாநிலக் கட்சிகள் செய்யும் தவறுகளுக்குப் பொறுப்பேற்காமல் தன்னிச்சையாக செயல்படவும், மக்கள் சக்தியாக வளர்ச்சி அடையவும் வழிகோலி இருக்கிறார்கள். இது தாற்காலிக பலவீனமாகத் தெரியலாம். ஆனால், நிச்சயமாக மிகப்பெரிய பலம்.''

"இனியும் இடதுசாரி இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்தனி அமைப்புகளாக செயல்படுவது அவசியம்தானா? இணைப்பு சாத்தியமில்லையா?

            "இணைந்து செயல்படுகிறோம். இதுவே காலப்போக்கில் இணைப்பாக மாறக்கூடும். நாமாக முயற்சிப்பதைவிடத் தானாக நடைபெறுவதுதான் நிலையானதாக இருக்கும். இணைப்புக்கான அவசியம் இருக்கத்தான் செய்கிறது.''

 "அ.தி.மு.க. தனது அணியிலிருந்து இடதுசாரிகளைக் கழற்றி விட்டது பற்றி உங்களது கருத்து என்ன?

               "அது அவர்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. எங்களது  சுயமரியாதையை இழந்து நாங்கள் தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ ஒதுக்கும் ஒன்றிரண்டு இடங்களுக்காகக் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. இடதுசாரிகள் இல்லாவிட்டால், எந்தவொரு மாநிலக் கட்சிக்கும் மக்கள் மன்றத்தில் மரியாதை இருக்காது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். அது தமிழகமானாலும் சரி, ஆந்திரம், பிகார், உத்தரப்பிரேதசமானாலும் சரி!''

"எந்தவொரு அணிக்கும் பெரும்பான்மை வராமல் போனால் நீங்கள் காங்கிரஸ் ஆதரவுடனான மூன்றாவது அணி அரசு அமைய முயற்சிப்பீர்களா மாட்டீர்களா?

 "மதச் சார்பற்ற, அதே நேரத்தில் மாற்றுப் பொருளாதார சிந்தனையுடைய அரசு அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். மாற்றுப் பொருளாதாரம் என்று சொன்னால், மெகா ஊழல்களுக்கு வழிகோலும் மன்மோகன் சிங் அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான பொருளாதாரம் என்று பொருள். இந்த விஷயத்தில் காங்கிரஸூக்கும், பா.ஜ.கவுக்கும் உள்ள வேறுபாடு சதவிகிதங்களில்தானே தவிர, மதச்சார்பு, பொருளாதாரக் கொள்கை இரண்டிலுமே இந்த இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ ஒத்த கருத்துடையவைதான் என்பது எங்கள் கருத்து.''

"அ.தி.மு.க. உங்களைக் கைவிட்ட நிலையில் தி.மு.க. தனது அணியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருந்ததே, நீங்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை?
           
               "காங்கிரஸூம், பா.ஜ.க.வும்போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள், அவ்வளவே. மெகா ஊழலான 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிக் கொணர்ந்ததும், முதன் முதலில் அதற்கு எதிராகக் குரல் கொடுத்ததும் இடதுசாரிகள்தான். நாங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க முடியும்? ஏறத்தாழ 14 1/2 ஆண்டு காலம் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த ஒரே ஒரு மாநிலக் கட்சி தி.மு.க.தான். மதச்சார்பு பற்றியோ, மாற்றுப் பொருளாதாரம் பற்றியோ பேசும் அருகதை தி.மு.க.வுக்குக் கிடையாது!''

"மூன்றாவது அணி ஆட்சி அமைந்தால் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று முதலில் அறிவித்தீர்களே, இப்போதும் அதுதான் உங்கள் அபிப்பிராயமா?''

           "நாங்கள், அதாவது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஜெயலலிதாவைப் பிரதமர் பதவி வேட்பாளர் என்று கருதவும் இல்லை, அறிவிக்கவும் இல்லை. யார் பிரதமர் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு தீர்மானிக்க வேண்டிய பிரச்னை.''

"2014 தேர்தலில் இடதுசாரிகளின் குறிக்கோள் என்ன?

            "மதவாத சக்திகளின் பிடியில் இந்தியா சிக்கிவிடாமல் காப்பதும், மெகா ஊழல்களின் ஊற்றுக்கண்ணான புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து மாற்றுப் பொருளாதார சிந்தனைக்கு வழிகோலுவதும்தான் எங்கள் குறிக்கோள்.''

"உங்களுடைய முதல் எதிரி காங்கிரஸா, பா.ஜ.கவா?

 "இரண்டும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று ஏற்கெனவே கூறிவிட்டேன்.''

"இன்னுமா இடதுசாரிகளின் ஆதரவுடன் மூன்றாவது அணி ஆட்சி அமையும் என்று நம்புகிறீர்கள்?

          "போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை. இந்தியாவைப் போன்ற பலதரப்பட்ட கலாசாரங்கள் உள்ள நாட்டில் கூட்டணி அரசுதான் சாத்தியம். நல்லது. தேவை. அதற்கான இடதுசாரிகளின் முயற்சி தொடரும்.''

நன்றி : தினமணி

2 கருத்துகள்:

THURUVAN சொன்னது…

போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை.

THURUVAN சொன்னது…

போராளிகள் நம்பிக்கை இழப்பதில்லை.