ஞாயிறு, 13 ஏப்ரல், 2014

''மோடியும், குஜராத்தும்'' - ஆனந்த விகடனின் உண்மை கட்டுரை

            குஜராத் முதல்வராக இருக்கும் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமர் (?) வேட்பாளர் என்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தம்பட்டம் அடித்து வருகிறது. அவரைப் பற்றிய பல்வேறு தகவல்களை பூதாகரமாகக் கூறி வருகிறது. ஆனால் உண்மை நிலை என்ன என்பதை 16-4-2014 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளியான ப.திருமாவேலன் கட்டுரை புட்டுப்புட்டு வைக்கிறது. கட்டுரையின் பகுதிகள் வருமாறு:

             எப்போதுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான். 2002ல் ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி, குஜராத்தை இந்தியாவின் சொர்க்க புரியாக மாற்றிவிட்டார் என்ற நினைப்பு, நாடு முழுவதும் விதைக்கப் பட்டது. குஜராத்திகள் பிறப்பால் தொழில் சமூகத்தினர், பிரிட்டிஷ் ஆட்சி கிழக்கு இந்தியக் கம்பெனி மூலமாக வர்த்தகம் செய்த காலத்திலேயே தொழிற்சாலைகள் தொடங்கியது இந்தப் பகுதியில்தான். “மோடி, நன்கு சுழலும் தங்கச் சக்கரத்தைப் பெற்றார். அதை நிறுத்தாமல் தொடர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதுதான் மோடியின் சாதனை” என்றார் சமூகவியலாளர் தீ பாங்கர் குப்தா. இதனை அமர்த்தியா சென் ஏற்றுக்கொள்ளவில்லை. “குஜராத்தில் புதிய தொழிற்சாலைகள் வந்திருக்கின்றன. நிறைய சாலைகள் அமைத்திருக்கிறார்கள்.
             கட்டுமானப் பணிகள் வேகமாக நடக் கின்றன. ஆனால், ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை இதைவைத்து மட்டுமே அளவிட முடியாது. 1000 குழந்தைகள் பிறந்தால் மருத்துவ வசதி இல்லாமல் அதில் எத்தனை குழந்தைகள் குஜராத்தில் இறந்துபோகின்றன என்பதைப் பாருங்கள். அது கேரளாவைவிட மூன்று மடங்கு அதிகம். அதேபோல் கல்வி மற்றும் மருத்துவத்துறைகளில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப் பிரதேசத்தை விடவும் குஜராத் பின்தங்கித்தான் இருக்கிறது”என்கிறார் சென். மோசம், மிக மோசம் என்பதையே ஒவ்வொரு மாநிலமும் தங்கள் ஸ்டேட் டஸாக வைத்திருந்ததால் ஏற்பட்ட சலிப்பு, `குஜராத் முன்னேறி விட்டதோ.... அதே ஃபார்முலா இந்தியாவுக்கும் பொருந்துமோ!”என்ற நப்பாசை நம்பிக்கையை வளர்த்துவிட்டது!

தொழிலதிபர்களின் அதிபர்..!


          இந்தியத் தொழில் துறை வர்க்கம், தனக்குச் சாதகமான பிரதிநிதியாக மோடியைக் கணிக்கிறது.`குஜராத்தில் தொழில் முதலீடு செய்யுங்கள்’ என்று மோடி அழைப்பதைப் போல வேறு எந்த மாநில முதல்வரும் அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல; அடிமாட்டு விலைக்கு நிலங்களையும், 0 சதவீதமும் வட்டியுடன் நிதி உதவியும் வேறு எந்த மாநிலமும் தர முன்வரவில்லை என்பதும் காரணம். சலுகைக்கு மேல் சலுகைகள் வழங்குவதன் மூலமாக பல்வேறு தொழிற்சாலைகளை மாநிலத்துக்குள் கொண்டுவரும் தந்திரத்தை மோடி கடைப்பிடிக்கிறார். இது தொழில் அதிபர்களுக்குச் சாதகமான அம்சம். ஒரு காலத்தில் பெரு முதலாளிகள் தரப்பு, அனைத்து இந்திய தேசியத்தைக் கட்டமைத்தது போலவே இப்போதும் இணைந்து செயல்பட்டு, மோடிக்கு ஆதரவு தருகிறது!

மோடித்துவா..!

              `நான் ஓர் இந்து தேசியவாதி. இன்னும் எளிதில் புரியும் வகையில் சொல்லவேண்டுமானால், நான் இந்து என்ப தால் இந்து தேசியவாதி’ என்று பகிரங்கமாக அறிவித்துக் கொண்டவர் நரேந்திர மோடி. இந்தியா என்பது பன்முகத் தன்மைகொண்டது. இந்தியாவின் பெருமை என்பதே வேற்றுமையில் ஒற்று மைதான். ஆனால், `இங்கு இருப்பது ஒரேஒரு தேசியம்தான். அது இந்து தேசி யம், அதுதான் இந்திய தேசியம்‘ என்றுசொல்லக்கூடிய தத்துவத்தின் பிரதிநிதி யாக நரேந்திரமோடி தன்னை அடை யாளப்படுத்திக் கொள்வதைப் பெருமை யாக நினைக்கிறார். தனிப்பட்ட மோடிஎப்படிப்பட்டவராகவும் இருக்கலாம். ஆனால், பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பிரதமர் பதவிக்கு ஆசைப் படுகிறவர், தன்னைப் பச்சையாக `இந்து தேசியவாதி’ என்று அழைத்துக் கொள்வது சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலானது. சட்டம் - ஒழுங்கு கெடுமானால் நிம்மதி இழக்கக்கூடியவர்கள் பெரும் பான்மையினரும்தான். காங்கிரஸ் கட்சியை இந்திய நாட்டுப் பற்று காப்பாற்றுவது போல, தங்களை இந்து மதப்பற்ற காப் பாற்றும் என்று மோடி நினைக்கலாம். ஆனால், மக்கள் நலன் சாராத இந்த மாய மாத்திரைகள், விரைவிலேயே அவலமாகக் கிழிந்து தொங்கும். அயோத்தி அலையில் 1999ல் ஆட்சியைப் பிடித்தபாஜகவை 2004ல் வீட்டுக்கு அனுப்பி யவர்கள் `இந்துக்கள்’ தானே தவிர... சிறுபான்மையினர் அல்ல.  இந்து பிம்பம் ஆட்சிக்கு வரப் பயன்படலாம். ஆட்சியை எப்போதும் காப்பாற்றாது என்பதற்கு உதாரணம்... வாஜ்பாய்!

தான், தான் மட்டுமே...!

              அரசியல் என்பதே, ஒருவரை வீழ்த்தி விட்டு இன்னொருவர் அதிகாரத்தை அடைவதுதான். அதைப் பச்சையாக, பட்டவர்த்தனமாக நடத்துபவராக நரேந்திர மோடி இருக்கிறார்.சோம்நாத்தில் இருந்து அயோத்திக்கு அத்வானி ரத யாத்திரை புறப்பட்டபோது, அதனை ஏற்பாடு செய்கிற பொறுப்பில் இருந்தவர் நரேந்திர மோடி. 23 ஆண்டு களுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் தான் மோடியை குஜராத்துக்கு அறிமுகம் செய்தது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான `ஏக்தா யாத்ரா’ என்ற ஒற்றுமை யாத்திரையை முரளி மனோகர் ஜோஷி நடத்தியபோது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மோடி முகம் அறிமுகம் ஆனது. இன்று மோடியால் வீழ்த்தப்பட்டுக் கிடப்பவர்கள் யார்? அதே அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும்தான்.
              அத்வானியிடம் இருந்து `பிரதமர் வேட்பாளர்’ என்ற மகுடத்தைப் பறித்து, ஜோஷியிடம் இருந்து அவரு டைய தொகுதியைப் பறித்து மோடி ஆடியது தவறான ஆட்டங்கள். `மோடி இல்லாவிட்டால் பாஜக ஆட்சிக்கு வர முடியாது’ என்ற பிம்பத்தை உருவாக்கி, மற்ற தலைவர்கள் அனைவருக்குமே அவர்கள் பயப்படும் தொகுதிகளை ஒதுக்கி நரேந்திர மோடி செய்த வேலைகள், நரசிம்மராவ் காலத்தில்கூட காங்கிரஸில் நடக்காதவை.மோடியை அரசியலுக்கு அழைத்து வந்தவர் சங்கர் சிங் வகேலா. இவர் தனது புல்லட்டில் எப்போதும் மோடியை உட்காரவைத்துக் கொண்டு குஜராத்தை வலம் வருவார். 1995ம் ஆண்டு தேர்தலில் குஜராத் சட்டமன்றத்தை பாஜக கைப் பற்றியபோது சங்கர் சிங் வகேலா தான் முதல்வராக இருந்திருக்க வேண்டும்.
              ஆனால், அத்வானியிடம் இருந்த தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வகேலாவைத் தடுத்து கேஸூபாய் படேலை முதல்வர் ஆக்கினார் மோடி. கேஸூபாய் படேலை வாழ்த்தி... வகேலாவைக் கட்சியைவிட்டுத் துரத்தி... இத்தனையும் அத்வானி ஆசீர் வாதத்துடன் நடத்தினார் மோடி. 2002ம் ஆண்டு குஜராத் படுகொலையால் தலைகுனிந்த பிரதமர் வாஜ்பாய். முதல்வர் மோடியைப் பதவி விலகச் சொன்னபோதும் தடுத்தவர் அத்வானி. ஆனால், அந்த அத்வானியின் பிரதமர் கனவைக் காவு வாங்கினார் மோடி!பாஜக ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு பக்கமும், மற்ற அனைவரும் இன்னொரு பக்கமும் சக்கரத்தைச் சுழற்று வார்கள். ஏனெனில், இரண்டாம் நபரோடு அரவணைக்கும் ஆளாக மோடி இல்லை!

சிறுபான்மையினர் சினம்..!

               இந்தியப் பிரிவினைக்குப் பின் நடந்த மிகப்பெரிய மதவெறிப் படுகொலை 2002ல் குஜராத்தில் தான் நடந்தது. குஜராத் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருந்தது இல்லை. 1969ல் 512 பேரையும், 1985ல் 300 பேரையும், 1992ல் 152பேரையும், பலிவாங்கிய குஜராத், 2002ல் சுமார் 1,200 பேரை (அரசுக் கணக்கின்படி) புதைத்தது. கரசேவர்கள் வந்த ரயில் பெட்டிக்குத் தீ வைக்கப்பட்டதால், எதிர்வினையாக இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் சொன்னாலும், அரசும் போலீசும் நினைத்திருந்தால், அந்தச் சாவுகளில் பாதியைத் தடுத்திருக்கலாம். `எல்லாம் முடியட்டும்; இரண்டு நாட்கள் காத்திருப்போம்‘ என்று கைகட்டி வேடிக்கை பார்த்தது மோடி அரசு. `ஆட் சிக்கு வந்த சில மாதங்களில் நடந்தது என்பதால் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்குத் தெரியவில்லை’ என்று விளக்கம் சொல்கிறார்கள்.`காரில் போய்க்கொண்டு இருக்கிறோம்.
                 ஒரு நாய்க்குட்டி மீது நம் கார் மோதி அது இறந்துவிடுகிறது. அப்போது நாம் வருத்தப்படுகிறோம் அல்லவா? அது போன்றதுதான் 2002ம் ஆண்டு நிகழ்வும்‘ என்று இப்போது சமாளிக்கத் தெரிந்தவருக்கு போலீஸைப் பயன்படுத்தக் தெரியாதா? `ஒன்றின் எதிர்வினை இன்னொன்று’ என்று நியாயப்படுத்தினார் மோடி. இஸ்லாமியர்களையே தன்னுடைய பிராண்ட் அம்பாஸிடர்களாக மோடி நியமித்து பிரச்சாரம் செய்தாலும், அந்த மக்கள் மனதில் பயமும் பீதியும் படிந்திருப்பது மோடியின் உண்மையான சொரூபம் தெரியும் என்பதால்தான்!மேலும், என்கவுண்ட்டர் என்ற பெய ரால் சிறுபான்மையினரைக் கொன்று தீர்த்த சம்பவங்கள் ரத்தம் உறையவைக்கின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 32 போலீஸ் உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அதிலிருந்து ஜாமீனில் வந்தவர்கள், ஒரு மாநில முதலமைச்சரையே குற்றம் சாட்டுவதும் இதுவரை இந்தியா பார்க்காதது!

மர்மங்களின் மனிதர்..!

                 `நான் ஒரு திறந்த புத்தகம்‘ என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக் கொள்வார்கள். ஆனால், யாரும் திறக்க முடியாத புத்தகமாக மோடி இருக்கிறார். திருமணம் செய்து கொள்ளாதவராக அவரைக் காட்டுகிறார்கள். 13 வயதில் ஜசோதாபென் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர், இவர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு இரண்டு ஆண்டுகாலம் இமயமலைக்குப் போய்விட்டு, குஜராத் திரும்பினாலும், 32 ஆண்டுகள் தனது சொந்த வீட்டுக்கே வராமல் போனதால் அந்தப் பந்தம் அப்படியே அறுந்தது என்றும் சொல்லப்படுகிறது.அந்தப் பெண் ஒரு பள்ளியின் ஆசிரியையாக வேலை பார்த்துள்ளார். மோடி, முதல்வர் ஆன பிறகு அவர் யார் பார்வையிலும்படாமல் மறைத்து வைக்கப்பட்டார்.
               அவரை 2002ம் ஆண்டுக்குப் பிறகு பேட்டி எடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். இன்று வரை அவரது இருப்பு, மறைமுகமாக இருக்கிறது. சமீபத்தில் தான் மாதுரி சோனியின் கதை பிரபலமானது. அந்தப் பெண்ணை 62 நாட்கள் குஜராத் உளவுத் துறை வேவு பார்த்தது. ஆந்திர சினிமாக்களை மிஞ்சும் ரியல் மசாலா.மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் ஐபிஎஸ். அதிகாரிகளான குல்தீப் ஷர்மா, ஸ்ரீகுமார், வன்சரா, சஞ்சீவ்பட், ராகுல் ஷர்மா, ரஜ்னீஷ் ராய் போன்றவர்கள் சொல்லும் கதைகள் பதற்றமானவை.மோடிக்கு அடுத்த இடத்தில் இருந்த, `அவருக்கு அடுத்து இவர்தான்‘ என்று சொல்லப்பட்ட, அத்வானி மற்றும் அருண் ஜெட்லி ஆசீர்வாதம் பெற்ற குஜராத் வருவாய் துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா, திடீரென ஒருநாள் செத்துக் கிடந்த மர்மம் எத்தனையோ ஆண்டுகள் ஆகியும் இன்னும் விலகவில்லை!

கொள்கை என்ன..?

               `காங்கிரசிடம் இருந்து விடுதலை’ என்று மோடி முழங்குகிறார். ஆனால், காங்கிரஸில் இருந்து பாஜக எந்த வகையில் மாறுபட்டது என்பதை இன்று வரைவிளக்கவே இல்லை. மாற்றம், வளர்ச்சி என்று மையமாகப் பேசுகிறாரே தவிர, தன்னுடைய கொள்கை, ஆட்சி நடத்தும் வழிமுறை பற்றி பேசவே இல்லை. புதிய பொருளாதாரக் கொள் கையை அமல்படுத்தி 24 ஆண்டுகள் கடந்து விட்டன. பொருளாதாரமும் நிதியும் கோமாவில் தான் கிடக்கின்றன. இதே பொருளாதாரக் கொள்கையைத்தான் (1998-2004) பாஜக ஆட்சியும் பின் பற்றியது.ஒரு காலத்தில் சுதேசி, சுதேசி என்று அதிகம் பேசியது பாஜக தான். இன்று அதை மறந்தும் சொல்வது இல்லை.
               சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அமல்படுத்தத் துடித்தது காங்கிரஸ் என்றால், 26 சதவிகிதம் முதலீடு வரலாம் என்றது பாஜக அரசு. 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுக்கு வசதியான வழிமுறைகளை பாஜக ஆட்சியே பாதைபோட்டுக் கொடுத்தது. காங்கிரசும் ஆ.ராசாவும் அதற்குள் புகுந்து புறப்பட்டார்கள். லோக்பால், லோக் அயுக்தா பற்றி மோடி தெளிவுப்படுத்தவில்லை. `பலவீனமான பிரதமராக இருப்பதால் அண்டை நாடுகள் மிரட்டுகிறது’ என்கிறாரே தவிர, மோடியின் வெளியுறவுக் கொள்கை இன்னும் சொல்லப்படவில்லை. அண்டை நாடுகளுடன் சண்டைக்கு நிற்கப் போகிறோம் என்றால் ராணுவச் செலவு அதிகமாகி, இந்தியாவின் கடன் இரண்டு மடங்கு ஆகும் என்பதைத் தவிர பயன் இருக்காது.மேடையில், ஏறுகிறார்; கையை வீசுகிறார்; கர்ஜிக்கிறார்; காற்றில் கலக்கிறது வார்த்தைகள். ஆனால், எதுவுமே மனதில் நிற்கவில்லை. வளர்ச்சி, மாற்றம் என்ற வாய்மொழி வார்த்தைகள் மட்டும் போதாதே!

யார் பிரதமர்..?

             இதில் என்ன சந்தேகம்? பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைத்தால், மோடிதான் பிரதமர், தனிப்பெரும்பான்மையை பாஜக அடைய முடியாமல் போனால் மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட வேண்டி வரும். அப்போது? `நரேந்திர மோடியைத் தவிர வேறு யாரை முன்மொழிந்தாலும் நாங்கள் ஆதரிக்கத் தயார்’ என்று கட்சிகள் நிபந்தனை விதிக்கும். அப்போது, பாஜக என்ன முடிவு எடுக்கும்? ஆர்எஸ்எஸ் என்ன அறிவுரை சொல்லும்? இதை எதிர் பார்த்துத்தான் 87 வயதிலும் அத்வானி. காந்தி நகரில் நிற்கிறார். ராஜ்நாத் சிங், ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்றவர்கள் மோடியை சகித்துக் கொண்டு சும்மா இருக்கிறார்கள்.இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால் மோடி என்ன மாதிரியான முடிவு எடுப்பார் என்பதைக் கணிப்பது கஷ்டம். மோடி போன்ற ஒரு கேரக்டர் பிரதமர் ஆகிறார் என்பதை நினைத்தால், பலருக்கும் பயமாக இருக்கிறது. அவர் பிரதமர் ஆக முடியாமல் போனால் என்ன ஆகும் என்று யோசித்தால், அந்தப் பயம் இன்னும் அதிகமாகிறது.!
             
 நன்றி : ஆனந்தவிகடன் மற்றும் Theekkathir Tamil Daily..

கருத்துகள் இல்லை: